மூத்தவரை ஆய்வு செய்த இளையவரை வாழ்த்துவோம்


மௌலவி அல்ஹாஜ் அல்ஹாபிழ் அப்ழலுல் உலமா

T.S.A. செய்யிது அபூதாஹிர் ஆலிம் மஹ்லரி பாழில் ஜமாலி M.A. M.Phil.


 


வமிச வழி:

ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் 30 வது வாரிசு. மிஸ்ரிலிருந்து காயல்பட்டினம் வந்திறங்கிய, அஷ்ஷெய்கு கல்ஜி அல் பக்ரி அவர்களின் வழியில் வந்த,

வேதபுராண வேந்தர் புவ்வாறில்  நல்லடக்கமாகியுள்ள அஷ்ஷெய்கு நூஹு வலியுல்லாஹ் அவர்களின் எட்டாவது தலைமுறைப் பேரர்,

மஹான் பெரிய முத்து வாப்பா வலியுல்லாஹ் அவர்களின் ஐந்தாவது தலைமுறைப் பேரர். மர்ஹூம் அல்ஹாஜ் சொளுக்கு மு.க. செய்யிது அபூதாஹிர் ஆலிம் அவர்களின் மகள் வழிப் பேரர்.

காயல்பட்டினம் குருவித்துறை பள்ளியில் இமாமாக பணியாற்றி, பல மாணவர்களுக்கு அடிப்படைக் கல்விகளைப் போதித்து, ஹாபிழ்களாகவும் ஆலிம்களாகவும் உருவாக்கி, அண்மையில் மறைந்த மர்ஹூம் அல்ஹாஜ் தை.மு.க. சுல்தான் அப்துல்காதர் பக்ரி,  அல்ஹாஜ்ஜா சொளுக்கு S.A. பால் ஆமினா ஆகியோரின் மகன்,

ஐக்கியஅரபு அமீரகத்தின் காயல் நலமன்ற செயலாளர், அல்ஹாஜ் T.S.A. யஹ்யா முஹியத்தீன் அவர்களின் இளைய சகோதரர்.

கல்வி:

நமதூரின் முறைப்படி, பெண் உஸ்தாது (லெப்பை) மார்களிடம் அல்குர்ஆன் ஓதி முடித்தார். பிறகு சன்மார்க்க அடிப்படைக் கல்வியை அல் மத்ரஸதுல் ஹாமிதிய்யாவில் கற்றார்,

பள்ளிக்கூடக் கல்வியை ஆறாம் வகுப்புடன் நிறுத்தி விட்டு, திருமறை மனனம் செய்ய தந்தையால் வழி காட்டப்பட்டு, அந்தப் பாதையில் திருப்பி விடப்பட்டார்,

மஹ்ழரதுல் காதிரிய்யா அரபிக்கல்லூரியில் நிறைவு செய்து, ஹாபிழ் பட்டம் பெற்றார். அங்கயே ஏழு வருடம் ஓதி மௌலவி ஆலிம் பட்டம் பெற்றார்.

பிறகு தன் ஆன்மிக குருவாகிய முர்ஷித் காஜா பஹீமுல்லாஹ் ஷாஹ் சிஸ்தியுல் காதிரி அவர்களின் வழிகாட்டல் படி, சென்னை ஜமாலியா அரபிக் கல்லூரியில் மேலதிகம் இரண்டு ஆண்டுகள் கற்று பாழில் ஜமாலி பட்டம் பெற்றார்.

சென்னைப் பல்கலை கழகத்தில் (UNIVERSITY OF MADRAS) அப்ழலுல் உலமா பட்டம் பெற்றார். (This diploma is equivalent to B.A. Digree in branch XII) இந்த பட்டயம் பிரிவு XII அரபியில் இளங்கலை பட்டத்திற்கு இணையானது என அந்த சான்றிதழில் பதிவு செய்யப் பட்டுள்ளது,

எனவே இந்த பட்டத்தைப் பெற்றவர்கள் கல்லூரிகளில் நேரடியாகவோ (REGULAR) தொலை வழித்துறை மூலமாகவோ M.A. பயிலமுடியும்.

இவர்  சென்னை புதுக்கல்லூரியில் இணைந்து, நேரடியாகவே (REGULAR) பயின்று M.A. (ARABIC) பட்டம் பெற்றார். அதன்பின் அரபு இலக்கியத்தில் நமது முன்னோர்களான அறிஞர்கள் ஆற்றிய சேவைகள் குறித்து ஆய்வு செய்தார்.

الشيخ محمد اسماعيل النحوي حياته و خدماته الدينية واللغوية  அஷ்செய்கு முஹம்மது இஸ்மாயீலுன் நஹ்வி ஹயாதுஹு வா கித்மாதுஹூ அத்தீனிய்யா வல்லுகவிய்யா

 




 

அஷ்செய்கு நஹ்வி முஹம்மது இஸ்மாயீல் அவர்களின் வாழ்வும், அவர்கள் மார்க்கத்திற்கும், அரபுமொழிக்கும் செய்த சேவைகள் என்ற தலைப்பில் அவர்களின் அபார அரபு மொழி புலமையைத் தொகுத்து ஆய்வு நூலை சமர்ப்பித்து M.Phil பட்டம் பெற்றார். 

பெற்ற பரிசுகள்:

இளமையில் ஹாமிதிய்யா மத்ரஸாவில் நடைப்பெற்ற பல போட்டிகளில் பல பரிசுகளை வென்றுள்ளார். சென்னை புதுக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் நடைப்பெற்ற மாநிலம் தழுவிய கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில், சென்னை ஜமாலிய்யா மத்ரஸாவின்  மாணவராக பங்கேற்று "அறியாமை பிணி நீக்கும் அருமருந்து இஸ்லாம்" என்ற தலைப்பில் பேசி, முதல்பரிசு வென்றார்.

சென்னை முர்துசாவியா நிறுவனத்தால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான விழாவில், பேச்சுப் போட்டியில், மூன்றாவது பரிசை வென்றார் (முதல்பரிசு உருதுவிலும் இரண்டாம் பரிசு ஆங்கிலத்திலும் பேசியவர்களுக்கு வழங்கப்பட்டது.

சென்னை இந்துஸ்தான் கல்லூரியில் நடைப்பெற்ற கல்லூரி மாணவர் களுக்கான அரபி மொழியில் கட்டுரைப் போட்டியில், சென்னை புதுக்கல்லூரி மாணவராக பங்கேற்று இரண்டாம் பரிசு பெற்றார். (முதல் பரிசை அந்த கல்லூரியிலேயே பயின்ற அரபு நாட்டு மாணவர் ஒருவர் பெற்றார்)     

பணிகள்:

சென்னையில் ஜாபர்கான் பேட்டையில் மஸ்ஜித் தக்வா என்ற பள்ளியில் இமாமாக ஒரு வருடம் பணி செய்தார், பின்னர் சென்னை கூடுவாஞ்சேரியில் அமைந்துள்ள, கான்கா பஹீமிய்யா என்னும் ஆன்மிக நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் பஹீமிய்யா பப்ளிஷர்ஸ்  என்ற நிறுவனத்தின் மேலாளராகவும்  இருந்து வருகிறார்,

அதன் மூலம் வெளியிடப்பட்டுவரும் அல் அஸ்ரார் என்னும் ஆன்மிக மாத இதழின் ஆசிரியராக பத்து ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்,

நமது மஹான்களால் எழுதப்பட்டு, காலவேகத்தால் காணாமல் போய்க் கொண்டிருக்கும் பொக்கிஷங்களான அரபு, தமிழ் நூல்களை கண்டெடுத்து சில கையெழுத்து நூல்களை அச்சிட்டும்,

அச்சிடப்பட்டு மக்களிடையே காணக்கிடைக்காத பல கிதாபுகளை அந்த நிறுவனத்தின் மூலம் மறு பதிப்பு செய்தும் வருகிறார்.

இன்னும் பல நூல்கள் கண்டெடுக்கப்பட வேண்டும் என்றும், கண்டெடு க்கப்பட்ட பல நூல்கள் அச்சிடப்பட வேண்டிய அவசியத்தையும் இவர் கூறுகிறார்.

 

பாரசீக பெருஞானி அல்லாமா ஜலாலுதீன் ரூமி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களால் எழுதப்பட்ட இலக்கியமும் ஆன்மிகமும் ததும்பும் மஸ்னவி ஷரீப் என்ற நூலை,

 

நரியம்பட்டு சலாம் என்ற அறிஞர் மூலம் தமிழில் மொழிபெயர்க்கச் செய்து, அதனை தான் சார்ந்திருக்கும் பஹீமிய்யா நிறுவனத்தின் மூலம் வெளியிட்டு வருகிறார்.

 

ஆறு பாகங்களைக் கொண்ட இந்நூல் இது வரை இரண்டு பாகங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. மொழி பெயர்க்கப்பட்டு விட்ட எஞ்சிய பாகங்கள் இன்ஷா அல்லாஹ் விரைவில் வெளியிடப்பட உள்ளது,

 

மேலும் தப்ஸீர் கன்ஜுல் ஈமான், ஜாஅல்ஹக் போன்ற நூல்களையும் மேற்சொன்ன அறிஞர் மூலம் உர்துவிலிருந்து தமிழாக்கம் செய்யச் செய்து அவற்றையும் வெளியிடும் பணியில் உள்ளார்.

எழுதிய நூற்கள்:

1)      புனிதப் பயணம் (ஹஜ் உம்ரா வழிக் காட்டி நூல்)

2)      மா நபியின் மவ்லிது ஷரீப் மார்க்கத்திற்கு அரணா முரணா

3)      பாக்கியம் நல்கும் பராஅத் இரவு

4)      திருமணம் வாழ்வின் திருப்புமுனை

மேலும், பள்ளித்திறப்பு விழா மீலாது விழா மதரஸா ஆண்டு விழா மலர்களில் கட்டுரைகளும் எழுதிவருகிறார்.

பேச்சு :

மீலாது விழா, வலிமார்களின் உரூஸ் விழாக்கள், மத்ரஸாக்களின் ஆண்டு விழாக்கள், மாணவர் மன்ற விழாக்கள், பட்டமளிப்பு விழாக்கள், நூல் வெளியீட்டு விழாக்கள், இலக்கிய விழாக்கள், திருமண விழாக்கள் என தமிழகத்திலும் தமிழர்கள் வாழும் பல நாடுகளிலும் அழைக்கப்பட்டு உரை நிகழ்த்தி வருகிறார்.

பட்டிமன்றம், கருத்தரங்கம், சுழலும் சொல்லரங்கம், ஆய்வரங்கம் கவியரங்கம் என பல அரங்கங்களில் பேசி வருகிறார்.  திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் சிறப்பு அழைப்பாளராக (guest lecturer) அழைக்கப்பட்டு பேசியிருக்கிறார். 

பொதிகை T.V யில் இருமுறை இலக்கிய உரையும், இரு முறை ஆன்மிக உரையும் நிகழ்த்தியுள்ளார், மார்க்கம் தொடர்பான கேள்வி பதில் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.

கலைஞர், ஜெயா, ராஜ், விஜய், மூன், மக்கள், தமிழன் என பல சேனல்களிலும் உரை நிகழ்த்தியுள்ளார்,  இலங்கை, ஹாங்காங், சிங்கப்பூர், புருணை, சீனா, துபாய் என பல நாடுகளுக்கும் பயணித்துள்ளார், ஒரு முறை ஹஜ்ஜுக்கும் ஒருமுறை உம்ராவிற்கும் சிறப்பாக சென்று வந்துள்ளார்.

சிறப்புக்குரிய இந்த இளம் மார்க அறிஞர் M.Phil பட்டம்  அண்மையில் பெற்றமைக்கு நமது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.

 

இச்செய்திக்குரியருக்கு வாழ்த்துகளை பதிய, காண