அக்குபங்க்சர் முறை அல்லோபதி மருத்துவத்திற்கு மாற்றா


குழந்தை நல மருத்துவர் Dr. D. முஹம்மது கிஸார் M.B.B.S, D.C.H.

 


இந்த கட்டுரைக்குள் செல்லுமுன், மூன்று உதாரணங்களை நான் இங்கு தர விரும்புகிறேன்:

‘ 4 வருடத்திற்கு முன் காயல்பட்டினத்தைச் சார்ந்த என் பள்ளித் தோழனின், 6 வயது மகனுக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டது. அச்சிறுவனின் மருத்துவ ரிப்போர்ட்களைக் கொண்டுவந்து, தாங்கள், கிட்னி நோய்க்கு அக்குபங்க்சர் வைத்தியம் பண்ணுவதாகவும், நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் கூறி, என்னுடைய அபிப்ராயம் கேட்டனர்.

நான் என் தொழில் தர்மப்படி, அவர்கள் செல்லும் சிகிச்சை முறை மருத்துவ அறிவியல் ரீதியாக சரியானது அல்ல,அறிவியல் பூர்வமான ஆங்கில மருத்துவ முறையே நீண்ட கால பலனைத்தரும் என்று கூறினேன்.

அதற்குப் பின்னும் அந்தச் சிறுவனுக்கு அக்குபங்க்சர் சிகிச்சையே தொடர்ந்தார்கள். சில மாதம் முன்பு,அதே பையனுக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய இருப்பதையும், மிக மோசமான நிலையில் சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இப்போது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து, நன்றாக இருப்பதையும் நான் அறிந்தேன். அல்லாஹ அந்தச் சிறுவனின் ஆயுளை நீளமாக்கி வைப்பானாக.ஆமீன் ‘

‘ஒரு நண்பர், வாயில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அக்குபங்க்சர் நிலையத்தில், ஆறு மாதம் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்தார். திடீரென்று வாயிலிருந்து இரத்தம் கொட்டுவதாக எனக்கு வீட்டு அழைப்பு வந்தது. பார்த்தபோது, அந்தப் புற்று அளவுக்கதிகமாகப் பரவி, இரத்தக்குழாய்களை அரித்து இரத்தம் கொட்டியது.

பின்னர் அல்லோபதி முறையில் கேன்சர் வைத்தியம் செய்தும், நோய் அதிகம் பரவியதால், 2 ஆண்டுக்கு முன்பு இறந்து போனார், தனது 40 ஆம் வயதில். இவர் லண்டனில் ஆடிட்டராகப் பணிபுரிந்தவர்.’.

‘காயல்பட்டினம் முதியவர் ஒருவர் 4 ஆண்டுக்கு முன்பு, ஆங்கில மருத்துவர்களால் byepass  அறுவை சிகிச்சை செய்யப் பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் அவரோ, மாற்று முறை சிகிச்சை செய்வதாகக் கூறினார். நான் அவரின் தம்பி மகனிடம், விபரீதத்தை எடுத்துக்கூறி, byepass  உடனே செய்ய வற்புறுத்தினேன்.

ஆனால் மாற்று வழி சிகிச்சையே தொடர்ந்தார். கடந்த 1 வருடம் முன்பு, அவர் உடல் (இருதய) நிலை மிகமோசமாகி, பின்னர் byepass  செய்ய மருத்துவர்களை அணுகியபோது, இதயத்தின் செயல்பாடு (EF)  மிக மோசமாக உள்ளதால், அறுவைசிகிச்சை செய்ய உடல் தகுதியில்லை என்று மறுத்து விட்டனர். பின்னர் அவர் சில காலங்கள் இருந்து மரணித்து விட்டார். ‘

இந்த மூன்று சம்பவங்களும் என் கற்பனைக் கதை அல்ல. மருத்துவ நெறிமுறைக்காக அவர்களின் பெயர், அடையாளங்களை வெளியிடவில்லை. தனிப்பட்ட முறையில் என்னை அணுகினால், அவர்களின் தனிப்பட்ட விவரம் தருகிறேன்.

இவர்கள் மூவரும், சிலரின் தவறான வழிகாட்டுதலால், முறையான அல்லோபதி சிகிச்சையைத் தகுந்த நேரத்தில் எடுக்கத்தவறி, மாற்று வழி மருத்துவம் என்று பொன்னான நாட்களை வீணாக்கி நோயை முற்ற விட்டவர்கள்.

இவர்கள் என் மருத்துவ அனுபவத்தில் சந்தித்த பலநூறு சம்பவங்களில் சில சாம்பிள் தான். இந்த நிகழ்வுகள் மூலம் உங்களுக்கு இந்த கட்டுரையின் நோக்கம் புரிந்திருக்கும். என்றாலும் மேலும் சில தகவல்களைப் பார்ப்போம்.

இன்று சிலர், ஏதோ அக்குபங்க்சர் மருத்துவ முறை, அல்லோபதிக்கு மாற்றுமுறை போல ஒரு மாயையை மக்கள் முன் உருவாக்கி வருகிறார்கள்.

எந்த முறை மருத்துவத்தையும் பின்பற்றுவது, அவரவரின் சொந்த விருப்பம் என்றாலும், சிலரின் தவறான வழிகாட்டுதலால், பொதுமக்கள் சரியான நேரத்தில் சரியான சிகிச்சை முறையை எடுக்காமல், உடல் நலத்தைக் கெடுக்கவோ அல்லது மரணிக்கவோ கூடாது என்ற நல்லெண்ணத்தில், ஒரு பொறுப்பான அல்லோபதி மருத்துவன் என்ற முறையில், இக்கட்டுரை மூலம் ஒரு விழிப்புணர்வு உருவாக்க விரும்புகிறேன்.

அல்லோபதி மருத்துவத்தை எக்காரணத்தைக் கொண்டும் அக்குபங்க்சர் முறையுடன் ஒப்பிடவே முடியாது. அல்லோபதி முறை அசுர வளர்ச்சிகண்டு, அதிகம் முன்னேறி வருகிறது.

இவ்வாறு மாற்று முறை மருத்துவத்தை நோக்கி (இது அல்லோபதிக்கு மாற்று முறை என்று கூறி) மக்களை அழைப்பவர்களை நோக்கி ஒரு அறைகூவல் விடுக்கிறேன்:

‘நீங்கள், குறைந்தது ஆறு மாதத்திற்கு, உங்களுக்கோ அல்லது உங்களைச் சார்ந்தவர்களுக்கோ,அறவே அல்லோபதி மருத்துவத்தை நிறுத்திவிட்டு, மாற்று முறை மருத்துவத்தை மட்டும் வைத்து, காலந்தள்ள முடியுமா?

தயவுசெய்து என் சவாலுக்காக, எந்த விஷப்பரிட்சையும் எடுக்காதீர்.ஏனோ குறிப்பிட்ட சில அல்லோபதி மருத்துவர்கள் மீதோ அல்லது மருத்துவமனை மீதோ உள்ள தனிப்பட்ட கோபத்தில், தாழ்வு மனங்கொண்டு, இப்படி அல்லோபதிக்கு எதிரான நிலை எடுத்து வருகிறார்கள்.  

அண்மையில் நான் ஒரு கட்டுரையில் படித்ததை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

சுஷில் குமார் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தில் (CSIR)  வேலை பார்த்தவர். நீரிழிவு நோயால் துன்பப்பட்டுக்கொண்டிருந்தவர், பாபா ராம்தேவ் சொன்னார் என்று சுரைக்காய்ச் சாற்றைத் தினமும் குடித்துக்கொண்டிருந்தார்.

ராம்தேவ் சொல்லாதது, சில சமயம் சுரைக்காய்ச்சாறு விஷமாகக் கூடும் என்பது. ஒரு நாள், சாறு குடித்த சில மணி நேரங்களில் அவர் மரணத்தைச் சந்தித்தார். இந்தியா முழுவதும் பேசப்பட்ட மரணம் அது.

அறிவியல் துறையைச் சார்ந்தவர்கள்கூட இந்திய மருத்துவ முறைகளின் மீது எவ்வளவு மாளாத, அறிவுப்பூர்வமற்ற பற்றுக் கொண்டுள்ளனர் என்பதற்கு ஓர் உதாரணம் இது.

பழைய மருத்துவ முறை

நான் இவ்வாறு சொல்வதால், பழைய மருத்துவ முறைகளையோ அவை பரிந்துரைக்கும் மருந்துகளையோ முழுவதுமாக நிராகரிக்கிறேன் என்று அர்த்தமல்ல.

அதேசமயம், அவற்றால் தீதற்ற நன்மை மட்டுமே விளையும் என்ற முன்முடிவோடு அவற்றை அணுகுவது அறிவுப்பூர்வமான செயலாகாது. மூதாதையர்கள் தந்தவை என்பதால் அவை கடவுளர் நிலையினை அடைந்துவிட்டன, அவற்றைக் கேள்விகளுக்கு உட்படுத்தக் கூடாது என்று கருதுவது அபாயகரமானது.

மேற்கத்திய மருத்துவ முறையின்படி, ஒரு மருந்து மக்களைச் சென்றடைவதற்கு முன்னால் என்னென்ன சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனவோ, அதே சோதனைகளுக்கு இந்திய, சீன மருத்துவ முறைகளும் உட்படுத்தப்பட வேண்டும் என்பது எனது கருத்து.

முதலில் அல்லோபதி மருத்துவத்தைப் பற்றி ஒரு வரையறை தர விரும்புகிறேன்.

அல்லோபதி மருத்துவமும், மருந்துகளும் அறிவியல் அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டவை. அறிவியல் அணுகுமுறை என்றால், கோட்பாடு, சோதனை, கண்டறிதல் ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய செயல்பாடு.
இது படைப்பின் முழு இரகசியங்களையும் நமக்குக் காட்டும் திசையை நோக்கிச் செல்லும் முடிவே இல்லாத சுழற்படிக்கட்டு போன்றது.

பயணத்தின்போது இடர்களும் சறுக்கல்களும் ஏற்படலாம். இந்தப்பாதை முழுவதும்இதவறான சோதனைகள், பிழையான கண்டறிதல்கள் போன்றவற்றின் எச்சங்கள் சிதறிக்கிடக்கின்றன என்பதை ஒப்புக்கொள்பவர்களின் முதல் வரிசையில் விஞ்ஞானிகள் இருப்பார்கள்.

அல்லோபதி மருத்துவ முறைகளைப்பற்றிக் குறை கூறுபவர்கள், அதனால் உலகுக்கு ஏற்பட்ட நன்மைகளைப் பற்றிப் பேசவே மாட்டார்கள். பென்சிலின் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால், இன்று உலகில் இருப்பவர்களில் 75மூ உயிரோடிருக்க மாட்டார்கள்.

20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியக் குடிமகனின் சராசரி ஆயுட்காலம் சுமார் 22 வயதுதான் என்பதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும். இன்று சுமார் 66 வயது என்றால் அதற்கு முக்கியமான காரணம்,அல்லோபதி மருந்துகள் மட்டுமே.

அம்மையும், ப்ளேக்கும்,போலியோவும் முழுவதுமாக மறைந்துவிட்டன. காலரா, காசநோய் என்றாலே மரணம்தான் என்ற நிலை மாறிப் பல நாட்கள் ஆகிவிட்டன. தலைவலிக்கு உடனடி நிவாரணம் பாராசிடமாலும் இன்னும் சில மருந்துகளும் தருகின்றன.

வலியே தெரியாமல் அறுவைச் சிகிச்சை நடக்கிறது. இன்சுலின், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்குப் பேருதவிசெய்கிறது. மனநோயாளிகளுக்கு தோரஸைன் ஒரு வரம் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த வெற்றிகளுக்குக் காரணம், அல்லோபதி மருந்துகள் கடும் சோதனைகளுக்குப் பிறகே மக்களைச் சென்றடைகின்றன என்பதுதான்.

ஒரு புது மருந்து, கண்டுபிடிக்கப்பட்ட நாளிலிருந்து சந்தையை அடைவதற்கு 12 ஆண்டுகள் ஆகின்றன. கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளில் 5,000-ல் ஒன்றே எல்லாச் சோதனைகளையும் கடந்து சந்தையை அடைகிறது. அடைந்த மருந்துகளும் சில சமயங்களில் திரும்பப் பெறப்பட்டு மறுசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

இத்தகைய சோதனைகளைப் பாரம்பரிய மருத்துவம் கடந்துவந்திருக்கின்றனவா என்ற கேள்விக்கு, இல்லை என்பதுதான் பதில்.

மேற்கத்திய வழிமுறைகளை ஏன் கடைப்பிடிக்க வேண்டும், எங்களுக்கென்று தனி வழிமுறை இருக்கிறதே என்று மாற்றுமுறை மருத்துவர் கேட்கலாம். தவறேயில்லை. ஆனால், எந்த வழிமுறை இருந்தாலும் அது வல்லுநர்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

ஏன் இதுவரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதற்குச் சரியான பதில் மருத்துவர்தான் சொல்ல வேண்டும். சதி, சூழ்ச்சி என்று சொல்லித் தப்பித்துக்கொள்ள முயற்சி செய்யக் கூடாது. இது நாட்டுப்பற்று சார்ந்ததல்ல. மனித உயிர் சார்ந்தது. உடல்நலம் சார்ந்தது.

அக்குபங்க்சர் மருத்துவம்

அக்குபங்க்சர் மருத்துவம் நல்ல மருத்துவம் என்று மட்டும் கூறினால் அது அவர்களின் கணிப்பு என்று விட்டு விடலாம். ஆனால் அது அல்லோபதி மருத்துவத்திற்கு மாற்று என்று சொல்லும்போது தான், தவறான கருத்தை உலகுக்குச் சொல்கிறார்கள்.

அக்குபங்க்சர் மருத்துவம், ஏணி வைத்தாலும், அல்லோபதி மருத்துவத்தின் மாண்பை எட்டமுடியாது என்பதை இந்தக் கட்டுரையின் முடிவில் நீங்கள் உணர்வீர்கள்.

இதை மருத்துவத்தின் பெருமையைப் பறைசாற்றக் கூறவில்லை, மாறாக, மக்களுக்குத் தவறான கருத்து ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்டு, அதனால் அவர்களின் சுகாதாரம் சீர்கெடக்கூடாது என்ற நல்ல நோக்கிலே சொல்கிறேன்.

அல்லோபதிக்கு மாற்று முறை மருத்துவம் என்றால், அது அல்லோபதி மருத்துவத்தின் எல்லாப் பிரிவுகளுக்கு மாற்றாக இருக்க வேண்டும். ஆனால் அக்குபங்க்சர் கண்டிப்பாக அவ்வாறு இருக்க முடியவே முடியாது.

உதாரணமாக, அல்லோபதி மருத்துவத்தின் ஒரு பிரிவு மகப்பேறு மருத்துவம். ஒரு அக்குபஞ்சர் மருத்துவ முறையாயான, ஊசிகளை வைத்து அக்குபங்க்சர் புள்ளிகளில் குத்தி மட்டுமே, ஒரு பெண் கருவடைந்தது முதல் பிரசவமாகும் வரை, ஒரு ஆரோக்கியமான குழந்தையைப் பிரசவிக்கச் செய்யமுடியுமா ? இதை ஒரு சவாலாகவே விடுகிறேன்.

ஒருவருக்கு ஹார்ட் அட்டாக் வந்தவுடன், மருத்துவமனைக்குச் செல்லாமல், நேரே அவருக்கு அக்குபங்க்சர் ஊசிகளைக்குத்தி சிகிச்சைசெய்தால், அவரை நாம் எந்த மனநிலை கொண்டவர் என்று முடிவு செய்வோம்.

இந்தத்தவறான பிரச்சாரத்தை மேற்கொள்வோர், ஒரு வாதத்திற்காக, தங்களுக்கோ அல்லது தங்களைச் சார்ந்தோருக்கோ இந்நிலை ஏற்பட்டால் (அல்லா அவர்களுக்கு பூரண சுகத்தைத் தருவானாக ஆமீன்), அவர்கள் என்ன முடிவெடுப்பார்கள் என்று தங்களது மனசாட்சியைத் தொட்டுச் சொல்லட்டும்.

அல்லோபதி மருந்துகள்

பொதுவாக அல்லோபதி மருந்துகளை நாம் வாங்கினால், அந்த மருந்துகளுடன் கூடவே தயாரிப்பு தகவல்கள் அச்சிடப்பட்ட ஒரு பேப்பர் கூடவே இருக்கும்.

அதில், மருந்தின் பெயர், அதன் மூலக்கூறு, அது செயல்படும் விதம்(mechanism of action),அந்த மருந்து உடல் மீது அல்லது உடலில் எப்படி செயல்படுகிறது, வினைபுரிகிறது, (pharmacokinetics & pharmacodynamics), 

அதன் பக்க விளைவுகள் என்ன, அதிக dose எடுத்தால் என்ன செய்வது, எந்தெந்த நோய்களுக்கு உபயோகப்படுத்தலாம்,உடலில் வேறு நோய் உள்ளவர்கள் இந்த மருந்தை எப்படி எடுப்பது போன்ற பல தெளிவுவான தகவல்கள் கூடவே தரப்பட்டிருக்கும். 

ஆனால் அதை உபயோகிக்கும் நுகர்வோர் அதை ஒரு பொருட்டாக மதித்து வாசிப்பதே இல்லை. இது அல்லோபதி மருத்துவத்தின் வெளிப்படைத் தன்மைக்கு ஓர் சாம்பிள் எடுத்து காட்டுதான்.

இந்திய மருத்துவ கவுன்சிலில் (MCI )

இந்தியாவில் ஒருவர் சிகிச்சை அளிக்க விரும்பினால், அவர் கட்டாயம் இந்திய மருத்துவ கவுன்சிலில்(MCI ),பதிவு பெற்று சான்று பெற்று இருக்கவேண்டும். இவ்வாறு பதிவு செய்வது ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல. 

இந்த (MCI ) ஒரு மருத்துவ முறைக்கு ஒப்புதல் அளிக்குமுன், அதைப்பற்றி தீர ஆராய்ந்து விட்டுத்தான் ஒப்புதல் கொடுக்கும். இந்திய மருத்துவ கவுன்சிலால், அக்குபங்க்சர் மருத்துவ முறை அங்கீகரிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. 

எனவே அக்குபங்க்சர் பட்டய படிப்போ அல்லது பட்ட படிப்போ படித்தவர்கள், தங்கள் பெயருக்கு முன் Dr. என்று போடுவது கிரிமினல் குற்றம். அது மக்களைத் தவறாக வழிகாட்டும் செயலே. அவ்வாறு போடுபவர்களைக் கைது செய்யக் கூட சட்ட வழிமுறை உண்டு.

இந்தியாவில் உள்ள எந்த அரசு பல்கலைகழகமோ அல்லது UGC அங்கீகரித்த பல்கலைகழகமோ, இந்த அக்குபங்க்சர் கோர்ஸ் பட்டயப் படிப்போ அல்லது பட்டப் படிப்பையோ நடத்தவே இல்லை. இப்படி நமது நாட்டில், தனது பெயருக்கு முன்பு Dr.  போடக் கூடத் தடை செய்யப்பட்டவர், எப்படி ஒரு சிகிச்சை அளிக்கமுடியும்.

அக்குபங்க்சர் சிகிச்சை முறை தவறானது என்று சொல்லவில்லை

நான் முழு அக்குபங்க்சர் சிகிச்சை முறையும் தவறானது என்று சொல்ல வரவில்லை. அது பாரம்பரிய ஒரு சீன சிகிச்சைமுறை. நமது நாட்டில்,சுழுக்கு எடுத்தல், பிடிப்பு தட்டுதல் என்று எப்படி பழங்கால சிகிச்சைமுறை இருந்ததோ அதுபோல், அது ஒரு பாரம்பரிய சீன வைத்தியம்.

நிச்சயம், அது எந்தக் காலத்திலும், எந்தக் காரணத்தினாலும், அல்லோபதி மருத்துவத்திற்கு மாற்றாக ஆக முடியாது. இன்று, நினைத்தவர்கள் எல்லாம் சில மாதமோ அல்லது வருடங்களோ அங்கீகாரம் பெறாத இந்த அக்குபங்க்சர் முறை பட்டயப் படிப்பு படித்து விட்டு,

நானும் ஒரு டாக்டர், சிகிச்சை அளிக்கிறேன் என்று அக்குபங்க்சர் சிகிச்சை அளிக்க ஆரம்பித்து, நாளடைவில் போலி டாக்டராக அல்லோபதி சிகிச்சை செய்யும் ஆபத்தான சூழல்தான் இன்றுள்ளது. இது மனித வர்க்கத்திற்கு பெரும் சாபக்கேடான செயல்.

அறிவியல் ஆய்வுகள் – அக்குபங்க்சருக்கு ஆதரவாக இல்லை

(கீழே கூறப்பட்ட எந்த விளக்கமும் என் சொந்த விளக்கம் அல்ல. ஆதாரப்பூர்வமான விளக்கம்)
பல அறிவியல் ஆராய்ச்சிகள், உடலில் உள்ள அக்குபங்க்சர் பாயிண்ட் என்னும் புள்ளிகள் மற்றும் மெரிடியன் என்பதற்கும், உடலியல் (physiololgical)  ரீதியான, அல்லது  histological  ரீதியான எந்த வித சம்பந்தமும் இல்லை என்றே தெரிவிக்கிறது.

இன்று பலர் அக்குபங்க்சர் சிகிச்சை செய்கிறேன் என்று கூறி, பாரம்பரிய சீன முறைப்படி செய்வதே இல்லை. (Scientific investigation has not found any histological or physiological correlates for traditional Chinese concepts such as qi, meridians and acupuncture points, and some contemporary practitioners use acupuncture without following the traditional Chinese approach)  (அக்குபங்க்சர் சிகிச்சையும் அடிப்படையே இந்த புள்ளிகள்தான் என்று இருக்கும்போது,அதன் அடிப்படையே கேள்விக்குறியாகிறது.)

இந்த அக்குபங்க்சர் மூலம் கிடைக்கும் சிகிச்சை பலன் என்பது ஒரு placebo effect  என்னும் மருந்தற்ற குளிகை விளைவே. (மனரீதியான ஒரு திருப்தி தான்)

ஒரு சில நோய்களுக்கு மட்டும் இந்த சிகிச்சை முறையை WHO அங்கீகரித்திருந்தாலும், பல மருத்துவ நம்பிக்கையாளர்கள்,

‘இந்த முறைக்கு எதிரான ஆட்சேபனைகள், எதிர்ப்புகள், எதிர் விமர்சனங்களை கருத்திற்கொள்ளாமலே, தேவையற்ற அங்கீகாரம் வழங்கியதாகவே கருதி பல ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் இதை எதிர்த்துள்ளனர்.

(skeptics have criticized various health governing body’s endorsements of acupuncture as being unduly credulous and not including objections to or criticisms of the claims of acupuncture’s effectiveness. [Ref: wikepedia)

National Institute of Health என்னும் சுகாதரதிற்கான சர்வதேச அமைப்பு அக்குபங்க்சர் பற்றி இப்படிக் கூறுகிறது. அந்த வாக்கியத்தை அப்படியே தருகிறேன்.

Despite considerable efforts to understand the anatomy and physiology of the "acupuncture points", the definition and characterization of these points remains controversial.
'அக்குபங்க்சர் புள்ளிகளின், உடலியல் மற்றும் உடல்கூறியல் பற்றி புரிந்து கொள்ள கணிசமான முயற்சி எடுத்தும், அந்தப் புள்ளிகளின் வரையறை மற்றும் பாத்திரப் படைப்புகள் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது ' என்று தெரிவிக்கிறது.
மேலும் அதே அமைப்பு இவ்வாறு விளக்குகிறது :

Receiving alternative medicine as a replacement for standard modern medical care could result in inadequate diagnosis or treatment of conditions for which modern medicine has a better treatment record.[citation needed]
தரமான நவீன மருத்துவத்திற்குப் பதிலாக மாற்று முறை மருத்துவம் வருவதன் விளைவு, முழுமை பெறாத (சரியில்லாத) நோய் கண்டிபிடிப்பு, அல்லது சரியில்லாத சிகிச்சை. ஆனால் இவைகளுக்கு நவீன மருத்துவம் சிறந்த சிகிச்சைப் பதிவைக் கொண்டுள்ளது

இன்னும் மேலும் NIH கூறுகிறது :

As with other alternative medicines, unethical or native practitioners may also induce patients to exhaust financial resources by pursuing ineffective treatment. (180) (181)
மற்ற மாற்றுமுறை மருத்துவத்தைப் போல், இந்த மருத்துவ முறையிலும்,நெறிமுறை இல்லாத இந்த முறையைச் செய்பவர்களால்,நோயாளிகளின் நிதி வளம் முழுமையாக சுரண்டப்படும். காரணம் பயனற்ற சிகிச்சையால். (சுருங்கச்சொன்னால் நோயாளிகளைக் கொள்ளையடிக்கும் நிலை)

Profession ethical codes set by accrediting organizations such as the National Certification Commission for Acupuncture and Oriental Medicine

(அக்குபங்க்சர் மருத்துவ அமைப்பின் உயரிய அமைப்பு) இப்படிக் கூறுகிறது:

require practitioners to make timely referrals to other health care professionals as may be appropriate.
இந்த முறை சிகிச்சை செய்பவர்கள், சரியான நேரத்தில் நோயாளிகளை, மற்ற மருத்துவத்துறைக்கு பரிந்துரைத்து அனுப்ப வேண்டும்.

In 2006, the NIH’s National Center for Complementary and Alternative Medicine கூறுகிறது. research is still unable to explain its mechanism.

கூறுகிறது. In 2006, the NIH’s National Center for Complementary and Alternative Medicine கூறுகிறது. research is still unable to explain its mechanism.

‘இந்த முறை மருத்துவத்தில் ஆராய்ச்சிகள் இன்னும்வரை இதன் வேலை செய்வதின் பொறிமுறையை விளக்க முடியவில்லை.

மேலும், , the NIH had concluded that despite research on acupuncture being difficult to conduct

இந்த முறை சிகிச்சையில் ஆராய்ச்சி மேற்கொள்வது மிகக் கடினம் என்று கூறுகிறது.

The National Health Service of the United Kingdom states that at the present, no definite conclusions regarding acupuncture efficacy can be drawn, citing disagreement among scientists “over the way acupuncture trials should be carried out and over what their results mean”

லண்டனில் உள்ள NHS அமைப்பு இப்படிக் கூறுகிறது: தற்போது, அக்குபங்க்சரின் பலாபலன் பற்றி எந்த உறுதியான முடிவும் எடுக்க முடியவில்லை. இதற்க்கு அந்த விஞ்ஞானிகளிடையே உள்ள வேறுபாடுகளே காரணம். மேலும் இன்னும் அக்குபங்க்சரில் அதிக சோதனைகள் நடத்தப்படவேண்டும். அதன் பின் அதன் முடிவு தெரியப்படவேண்டும்.

எனவே, அக்குபங்க்சர் முறையில் இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவியல் சான்றுகள் இல்லை என்பதே தெளிவாகுகிறது.
நெத்தியடியாக, இந்த அமைப்பு அக்குபங்க்சர் முறை அறிவியல் பூர்வமானது அல்ல என்று கூறியுள்ளது.

இன்னும் இந்த முறையை ஆதரிப்பவர்கள் வைக்கும் வாதம். ‘இந்த முறையில் பக்க விளைவுகள் இல்லவே இல்லை’ என்று. ஆனால் இணையதளம், இந்த அறிவியல்பூர்வமில்லாத சிகிச்சை முறையில் ஏற்படும் பக்கவிளைவுகளின் பட்டியலை லிஸ்ட் பண்ணி உள்ளது.

இத்தனை விளக்கத்திற்குப் பின்னும், அக்குபங்க்சர்தான் நல்ல மாற்று முறை மருத்துவம் என்று அவர்கள் தங்கள் வாதத்தை தொடர்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

குர்ஆன் இப்படிக் கூறுகிறது ‘தெரிந்து கொண்டே,தவறானதை பரப்பாதீர்கள் ‘ என்று.