பிரதமரின் சிலுவைப்போர் முடிவால் நடப்பது என்ன


அன்பின் அலாவுதீன், சமூக ஆர்வலர் எழுத்தாளர்

நாம் ஓவ்வொருவரும் இந்தியாவை மாற்றிட வேண்டும் என்று விரும்புகின்றோம். ஆனால், ஒருவரும் தன்னை மாற்றிக்கொள்ள தயாரில்லை! அப்பட்டமான உண்மை. நம்மை மாற்றிக்கொள்ளாமல் இந்தியா மாற வேண்டும் என்று சொல்வதும், நடவடிக்கை எடுப்பதும் தண்ணீர், காற்றில் எழுதுவதற்கு ஒப்பாகும்.

 

கருப்பு பொருளாதாரத்தை ஒழிக்க பிரதமர் விரித்த வலையில் திமிங்கலங்களை பிடிக்க முடியாது. இது வலை வீசியவருக்கு தெரியும், திமிங்கலங்களுக்கும் தெரியும். அப்படியிருக்க “சொன்னாக் கொன்னிகள் தான் கணிசமாக மாட்டித் தவிக்கப் போகிறார்கள்... தட்டளிய விடப் படுவார்கள்...”

 

500 , 2000 புதிய நோட்டுகள் அச்சிடுவது என ரிசர்வ் வங்கியின் மத்தியக்குழு பல மாதங்களுக்கு முன்பே முடிவு எடுத்தாலும். இது மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்பட்டது. அதிக மதிப்புக் கொண்ட பணத்தைத் திரும்பப் பெறுவது என பிரதமர் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே எடுத்த முடிவு போல்; இதுவும் பரம ரகசியமாகவே அதிகாரிகள் சிலருக்கும், பாஜக கட்சியில் உயர்மட்ட குழுக்களுக்குமே தெரிந்த ஒன்று.

 

கடந்த 8.11.16 இரவு உலகமே அமெரிக்காவின் ஓட்டு நிலவரத்தை எதிர்பார்த்து இருக்கையில் இந்திய நோட்டு நிலவரத்தை 8 மணிக்கு பிரதமர் நேரலை ஒளிபரப்பில் இன்றிரவு 12 மணிக்கு மேல் 500 ,1000 செல்லாது என எந்த முன்னறிப்பும் இன்றி வெளியிட்டார். ஆனால், இது பிரதமர் முன்பே திட்டம் தீட்டியசெயல் என்றாலும் முன்னேற்பாடாக பொதுமக்களுக்கு ஒரிரு வாரங்களுக்கு முன்பே வங்கிகள், ATM-களில் 500 ,1000 நோட்டு புலக்கத்தை அனேகம் குறைத்து விட்டு 100 , 50 நோட்டுகளை அதிக புலங்க செய்திருக்க வேண்டும்.

 

மக்களிடம் போதிய பணம் இருந்தும் செலவிற்கு பிறரிடம் “100 ரூபாய் நோட்டு இருக்கா” என கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டதில் சாமனிய மக்கள்தான் மிகவும் சொல்லொன்னா துயரத்திற்கு ஆளானார்கள். எந்த ஒரு அரசியல்வாதியும் வங்கி வரிசையில் நிற்பதை காண முடியவில்லை.

 

அனேக இந்தியர்கள் கருப்புப்பணத்தை வெளிநாடுகளில் பதுக்கியுள்ளார்கள். எனவே தான் இந்தியாவில் பொருளாதார வீழ்ச்சி அடைந்துள்ளது. அதில் சுவிஸ் வங்கியில் 30 லட்சம் கோடியும், ஏனைய வெளிநாட்டில் 60 லட்சம் கோடியும் பதுக்கப்பட்டுள்ளது என பகிரங்கமாக காங்கிரஸ் மீது குற்றம் சுமர்த்திய மோடி, தேர்தல் பிரச்சாரத்தில் இதை முன் நிறுத்தியும், நாடாளுமன்றத்தில் வெளிநாட்டு கருப்பு பணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யும் நிலைக்கு மன்மோகன் சிங் அரசுக்கு நெருக்கடி நிலையை கொடுத்தார்கள்.

 

2014 தேர்தல் பிரச்சார கூடாரங்களில் மோடி இவைகளையே பிரதான முக்கிய பிரச்சனையாக்கி பேசியே வந்தவர். “வெளிநாட்டில் உள்ள கருப்புப் பணத்தை மீட்டுவந்து நாட்டின் ஒவ்வொரு குடிமகன் வங்கி கணக்கிலும் 15 லட்சம் போடுவேன்.” என்ற இனிப்பு தடவிய வார்த்தைகளை இடிமுழக்கமாக ஓங்கி ஒலித்துக் கொண்டேயிருந்தார் என்பதை பாமரன் கூட மறந்திருக்க வாய்ப்பில்லை.

 

நம்மவர்கள் தான் அரசியலார்களின் இன்சொல்லுக்கு மயங்கக்கூடியவர்கள் என்பதை ஒவ்வொரு ஐந்தாண்டு தேர்தலிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது புதிய செய்தியா என்ன?

 

மும்பையில் வருமான வரித்துறையினர்
'ரெய்டில்" பிடிப்பட்ட 13000 கோடி பணம்.

 

பாஜக அரசு பெரும்பான்மை அரசாக அமைந்ததும் அவர்களின் சொல், செயல் எல்லாம் இதைப் பற்றியில்லாமல் சிறுபான்மை மக்களின் அமைதியை சீர்குலைக்கும் விதமாகவே இந்த இரண்டரை ஆண்டுகள் நடந்தேறிக் கொண்டிருப்பது பாஜகவுக்கு நன்கு தெரிந்த ஒன்று.

 

கருப்பு பணம் எப்போது கண்டுப்பிடிக்கப்படும்? எப்போது பொருளாதார முன்னேற்றம் அடையும்? என எண்ணற்ற கேள்விகள் பாஜக மீது தொடுக்கப்பட்ட போது, கருப்பு பணம் பதுக்கல் சம்பந்தமாக வெளிநாடுகளில் ஆய்வு செய்தோம். இந்தியர்களின் கருப்புப் பணம் எங்கே, எப்படி, எவ்வளவு உள்ளது என்ற விபரங்கள் எங்களுக்கு தெரியாது; முந்திய காங்கிரஸ் அரசுக்கு தெரியாது, ஏன்? யாருக்குமே தெரியாது என இப்போது “நடுச்சட்டி இறக்கி கைவிரித்துள்ளது.”

 

இவர்கள் யாரை காப்பாற்ற ஆட்சி என்ற பெயரில் நாடக கொட்டகை நடத்துகிறார்கள்?  என்பது  நடுநிலையாளர்களின் உண்மையான கேள்வி.  எதிர்வரும் இராண்டுகளில் விடை வெளிச்சத்துக்கு வரும். சுவிஸ் வங்கியில் இருந்து கருப்புப் பணத்தை மீட்டுவர நிறைய சட்டசிக்கல்கள் இருக்கிறது. 

 

இதனால் பாஜக தேர்தலில் கொடுத்த வாக்குறுதி பொய்பித்துப் போனதால் அதைச்சரி செய்ய கருப்புப்பணத்தை இந்தியாவில் உள்ளவர்களிடம் தானாக முன் வந்து கட்டினால் வரி தள்ளுப்படி செய்யப்படும் என அறிவித்தார்கள். அதுவும் வெறும் 30 ஆயிரம் கோடி ரூபாய் கூட அரசுக்கு வரவில்லை. இது பாஜக அரசுக்கு தேர்தல் தோல்வியாகவே இருந்து வந்தது.

 

இந்நிலையில் தான் பிரதமர் இந்த நடவடிக்கையை கையில் எடுத்துள்ளார். கள்ள நோட்டுக்களை வேண்டுமானால் முடக்கும். மற்றபடி கருப்புப்பணத்தை முழுமையாக துடைத்தெறிய வேண்டிய நடவடிக்கைகள் அரசின் மீது நிறைய, நிரம்ப பொறுப்புக்கள் நிலுவையில் இருக்கின்றன.

 

நாட்டில் சட்டங்கள் போடுவது ஆட்சியாளர்கள், அதை நடைமுறைப் படுத்துவது அதிகாரிகள், கடைப்பிடிக்க வேண்டியது மக்கள் இவர்கள் மூவருமே அவரவர்கள் உண்மை நிலையில் இருந்து பார்க்க வேண்டுமே அல்லாது தள்ளி நின்று ஒருவரை ஒருவர் குறையும், குற்றமும் சொல்வது அறிவுடமை ஆகாது. 

 

500 ,1000 நோட்டுகள் சொல்லாது என பிரதமர் முடிவு ஒருபுறம் துக்கமான செய்தி என்றாலும், இதற்கு பொறுப்பு ஏற்பது யார்? இந்த அவல நிலைக்கு காரணம் யார்? என்ற கேள்வியும் கூடவே எழுந்துள்ளது.இக்கேள்விகளுக்கு ஆன்ம சுத்தியுடன் பதில் தேட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

 

நாட்டின் சட்டங்களை இந்த முவருமே அதன் ஓட்டை வழியே தப்பித்துள்ளார்கள்; அல்லது தப்பிக்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது தான் உண்மை!

 

500 , 1000 நோட்டுகள் செல்லாது என அறிவிப்பு செய்தது பிரதமரின் சுயலாபம் கொண்டது என்றே மக்கள் நம்புகிறார்கள். நாட்டில் மக்களிடம் பணம் இருக்கும்; உணவு தட்டுப்பாடு வரும்.

 

தேர்தலுக்குதான் விரலில் கரும்மை வைப்பார்கள். என் பணத்தை நான் உபயோகப்படுத்தவே இன்று விரல் மை வைக்க வேண்டிய அவசியம் உள்ளது. இது 'ஹிட்லரை" தான் நினைவில் கொள்ள செய்கிறது. இந்த நடவடிக்கையால் கள்ள பொருளாதாரம் நாட்டில் ஸ்தம்பித்துவிடும், கடுகளவும் நடக்கவே நடக்காது என்பது போன்று பாஜக நம்புவது குழந்தைதனமான செயலாவே அறிவுடையோர் பார்க்கிறார்கள். இனி நாட்டின் பொருளாதார மேம்பாட்டின் இயக்கத்தை சில காலம் வரை வெகுவாகவே பாதிக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது.

 

ஒரிரு ஆண்டாய் நாட்டில் வர்த்தகம் படுமோசமான நிலையில் நடுத்தர மக்களை வாட்டி வதைக்கிறது. பிரதமர் திடீர் முடிவால் இன்னும் படுபாதாளத்தில் விழுந்துள்ளது வர்த்தகம். இதனால் பாதிக்கப்படப் போவது வாழ்க்கை போராட்டத்தில் போராடிக் கொண்டிருக்கிற சாதாரண மக்கள்தான் என்பது பிரதமருக்கு தெரிந்திருந்தும் இதுபோன்ற ஒருநிலையில் தவிக்க விட்டிருப்பது சரியா?

 

'மோடிதான் கிங் - இந்த சிங் கைவிட" - என தூக்கி பிடித்தவர்களே! இப்போது கண்ணத்திலும், தலையிலும் கைவைத்துக் கொண்டு புழம்புவது பிரதமரின் காதுகளை எட்டாமல் இல்லை. 

 

பாஜக ஆட்சி அமைவதற்கு விருந்தாக நின்றவர்கள் விஷமாகப் போவதும், தனக்கே தான் சூனியம் வைத்துக் கொண்டோம் என்பது போன்ற செய்திகள் பாஜக வட்டாரத்தில் பரவலாக பேசிக் கொள்வதின் நெடி நாடு முழுவதும் வீசிக்கொண்டும், ஏசிக் கொண்டும் இருக்கிறது.

 

தற்போதைய நிலவரப்படி 14 லட்சம் கோடி கருப்புப் பணம் புழங்குகிறது. இது நாட்டின் மொத்த பொருளாதாரத்தில் (17 லட்சம் கோடி) 86% கருப்புப் பணமே என வெளியிடும் பாஜக அரசு இதற்கு முன் மூன்றுமுறை நாடாளும் சக்தியாக இருந்த போது இதை தடுக்க நடவடிக்கை எடுத்திருந்தால் இதுவரை கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கு கணிசமான அளவு வாய்ப்புள்ளது.ஆனால், கருப்பு பொருளாதாரம் இந்த ஒரு நடவடிக்கையால் மட்டுமே சரி செய்துவிடும் சின்ன பிரச்சனையில்லை.

 

2012 - மன்மோகன் சிங் ஆட்சியில் கருப்புப் பணம் தொடர்பாக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.'அதிகமான கருப்புப் பணம் சொத்து, தங்கம், ஹவலா, ரியல் எஸ்டேட், பங்குச்சந்தை, கள்ள நோட்டு உள்ளிட்ட வடிவத்தில் இருக்கிறது என்று கமிட்டியின் அறிக்கை குறிப்பிட்டது.

 

" 500 , 1000 நோட்டுக்களை ஒழிக்கும் நடவடிக்கையால் கருப்பு பொருளாதாரம் ஒழிந்துவிடும் என்ற பிரதமரின் கருத்து கற்பனைக்கு வேண்டுமானால் சாத்தியம் உண்டு, நடைமுறைக்கு ஒவ்வாமையே ஏற்படுத்தும் என்ற கருத்து தான் அந்த கமிட்டியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டவைகளில் ஒன்றாக இருந்தது . கருப்புப் பணம் விவகாரம் வெறும் ரூபாய் நோட்டு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல என்பதை பாஜக உணர வேண்டும்.

 

ஏனெனில்! உதாரணமாக 'பி நோட்ஸ்" என்று அழைக்கப்படும் பங்கேற்புப் பத்திரங்கள் எனப்படும் பங்கு சந்தைச் செயல்பாடுகளில் லட்சக்கணக்கான கோடிகள் கருப்புப் பண முதலீடுகள் விளையாடுகிறது. அதைக் தடை செய்ய வேண்டும் என்ற பெரிய விவாதங்கள் நடந்தன ஆனால், எந்த நடவடிக்கையும் அப்போதைய அரசால் எடுக்கப்படவில்லை..

 

பிரிட்டிஷ் ஆட்சியின் போது 1938-ம் ஆண்டில் 10 ,000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டு 1946 - ம் ஆண்டு செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு 1954-ம் ஆண்டு மீண்டும் 10 ,000 ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டது. ஆனால் 1978 - ம் ஆண்டு முற்றிலுமாக புழக்கத்திலிருந்து நீக்கப்பட்டது. அதே ஆண்டு ஜனதா கட்சியின் பிரதமர் மொராஜி தேசாய் ரூ 100 - க்கு மேல் இருந்த ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அதிரடியாக அறிவித்தார். இப்போது தான் 38 ஆண்டுகளுக்கு பிறகு மோடி அரசு நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தந்துள்ளது.

 

பஞ்சாப், உ.பி - இன்னும் ஒரிரு மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் ஆண்டு தொடக்கத்தில் நடைப்பெற உள்ளது. இந்த தேர்தல்களில் செலவிடுவதற்கு பல்வேறு கட்சிகளின் கருப்புப் பணம் பதுக்கி வைத்திருந்தனர்.

 

இந்நிலையில் மத்திய அரசின் தீடீர் 500 , 1000 நோட்டு செல்லாது அறிப்பின் எதிரெலியாக தொகுதி வாசிகளிடம் தத்தம் கட்சியினர் தடைசெய்த நோட்டுக்களை இரண்டு, மூன்று தினங்களுக்குள் விநியோகித்துள்ளனர். முக்கிய புள்ளிகள் இடம் 5000 முதல் 20000 வரை கைகூலி கொடுக்கப்பட்டு வாக்குறுதியும், வாக்குகளாகவும் இதுவரை அனைத்து கட்சிகளும் பகிர்ந்துக் கொண்டதாக 'பகீர்" தகவல் ஊடகத்தின் வழியே கசிந்துக் கொண்டிகிறது. இதற்கிடையே உ.பி.யின் பரேலி மாவட்டம் பர்ஸா கேடா பகுதியில் 500 ரூபாய் கட்டுகளை சில சாக்கு மூட்டையில் கட்டி தீயிட்டு கொளுத்தப்பட்ட அவலநிலையும் அரங்கேற தவறவில்லை.

 

எல்லோரையும் வங்கிப் பரிவர்த்தனையின் கீழ் கொண்டுவர எடுக்கப்படும் நடவடிக்கையே பாஜக அரசு தற்போது மேற் கொண்டுள்ளது. வருமானவரி கட்டுவோரை அதிகரிக்கச் செய்யவும், இதுவரை சிறு தொழில் செய்வோரை வருமான வரி கட்டவைக்கவுமே இது எடுக்கப்பட்ட முறையாக பொருளாதார வல்லுனர் கூறுகிறார்கள்.

 

இந்தியா என்பது லட்சக்கணக்கான கிராமங்களில் விரவிக்கிடப்பது சாமானிய மக்களில் பலருக்கு வங்கிக் கணக்குகள் இல்லை. ஒரு தொழிலாளிக்கு வேலை முடிந்ததும் அன்றைய ஊதியம் அவரது கையில்தான் கொடுக்க வேண்டும். என்று அவர் கேட்டால் உழைப்பாளியின் 'வெர்வை" சிந்தும் முன் அவர் கையில்தான் கொடுக்க வேண்டுமே அல்லாது. உனக்கு வங்கிக்கணக்கு தொடங்கி அதில் போடுவோம். மோடி அரசு அப்படித்தான் ஆணை பிறப்பித்துள்ளது. நீங்கள் வங்கியில்போய் எடுத்துக் கொள்ளவேண்டும் என்றால். அந்த ஒருநாள் கூலிப் பணத்தை எடுக்க அவருக்கு ஒருநாள் விடுமுறை தேவைப்படுமே? என்பதை மத்திய அரசு நினைவில் கொள்ள வேண்டும்.

  

 

நாட்டின் பணமாற்றத்தால் மட்டுமே இன்றைய கருப்பு பொருளாதாரத்தை களையெடுத்து ஒரு நாடு முன்னேற்ற பாதையை தொட்டு விடுமானால்! இந்தியாவில் ஐந்தாண்டுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் காணும் போதெல்லாம் இதுபோன்ற 12 ஆயிரம் கோடி செலவு செய்து புதிய நோட்டக்களை அச்சிட வேண்டிய கட்டயத்திற்கு இந்நாடு தள்ளப்படும் என்பது நிதர்சனம்.

 

அடுத்த இரண்டரை ஆண்டு முடிவில் அமையப்போகும் மத்திய அரசு தற்போது தடைசெய்யப்பட்ட நோட்டுகளை மீண்டும் மறுசுழறச்சி முறைக்கு கொண்டுவராது என்பது என்ன நிச்சயம்? மாறாக மனமாற்றத்தால் தான் ஒரு நாடு முன்னேற்றப் பாதையை அடைய முடியும். அதற்கு அடிதட்டு 'பாமர குடிமகன் முதல் நாட்டின் உயர் பதவியான முதல் குடிமகன் (ஜனாதிபதி) வரை அனைவர்களிடம் நேர்மை, சுத்தம், ஒழுக்கம், வெளிப்படை தன்மை, நன்னடத்தை, காலத்திற்கு தேவையான இன்றியமையாத ஒன்று"

 

அரசு இதுபோன்ற விதைகளை விதைக்க வேண்டுமே அல்லாது - புதிய 2000 நோட்டுகளில் பிரதமர் ஹிந்துவா கொள்கையில் உள்ள சமஸ்கிருத எண்ணையும், இன்னும் சில புதிய, புதுனங்ககளையும் பதியவா?

 

கள்ள பொருளாதாரத்தின் அடிவேர்க்கும், அச்சாணிக்கும் துணை நிற்ப்போர் அனைவர்களையும் களையெடுக்க வேண்டும் என்பதில் யாருக்கும் இருவேறு கருத்து எப்போதும் இருந்தது இல்லை.

 

இருப்பினும் மக்களின் நாடிதுடிப்பில் 39% மோடியின் இந்த நடவடிக்கை சரி என்றும் 36% குழப்பம் என்றும். 25% தவறு என்று சொல்கிறார்கள். என்றாலும் காலம்போக… போகதான் தெரியும் பிரதமரின் சிலுவைப்போர் முடிவால் நடப்பது என்ன? எப்படிப்பட்ட நல்ல பாதையில் நாட்டை வழி நடத்திச் செல்லும்? வெல்லும்? பொறுத்திருந்து தான் பார்ப்போமே?

 

'காலம் மாறும்; எழுத்துக்கள் பேசும்", அரசியல் அரங்கில் இது வேறு பொருளில் சரியாக பொருந்துகிறது. காலம் மாறுகிறது அரசியலரின் பேச்சில் செயலில் மாறுதல்கள் இல்லை, நம்பகத்தன்மை இல்லை அவர்களின் சொற்களை கடைகோடி பாமரன் வரை வேறு வழியின்றி அவதாணிக்க நேரிடுகிறது ஆனால், அரசியல்வாதிகளை விமர்சிப்பவர்கள் எழுதுவதை மாற்றிக் கொள்ள தேவையில்லை.

 

ஏனெனில்! காலத்திற்கு ஏற்றால் போல் அவ்வப்போது சிலகட்சியும், ஆட்சியும் மாறுகிரதே தவிர பிரதமர் எடுக்கும் முடிவுகள் என்னவோ அங்கேயேதான் நிற்க்கிறது. பல ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய அதே சொற்களை மக்கள் இன்றும் எவ்வித மாற்றமும் இன்றி மறு பிரசுரம் செய்ய முடிகிறது என்றால் இந்நாடு வளர்ச்சியில் தான் பயணிக்கிறதா?

 

கட்சித் தலைமை மோசம் என்பதா? இல்லை ஆட்சித் தலைமை மோசம் என்பதா? அல்லது இரண்டு தலைமையுமே ஒரே நபர் என்ற காலகட்டத்தில் 'இந்தியா யோக்கியமான தலைமையை தேடிக் கொண்டிருக்கிறது." வெள்ளை காகங்களை தேடிப் போவதும் கொம்புள்ள சிங்கத்தை தேடிப் போவதும் ஒன்றுதான். ஆனால், அப்படிச் சொல்லவும் எனக்கு தயக்கமாக இருக்கிறது. ஏனெனில்! பின்னர் சொல்லப்பட்டது சாத்தியப்பட்டாலும், முன்னது நடப்பது எப்போது..?

இந்த ஆக்கம் குறித்து தங்கள் கருத்துக்களைப் பதிய , காண