ஜலாலிய்யா நிகாஹ் மஜ்லிஸில் 19-12-2012 காலை 10 மணிக்கு பேரவை நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தீர்மானங்கள்
எண்.1
நகரில் சேரும் குப்பைகளை கொட்டுவதற்கு ஐந்து ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகவும், மேற்படி நிலத்தை முஸ்லிம் ஐக்கிய பேரவை தெரிவு செய்து தரும்படியாக, நமது நகர்மன்ற துணைத்தலைவர் உள்பட உறுப்பினர்கள் 18 பேர்களும் கையொப்பமிட்ட கோரிக்கை மனுவை நகர்மன்ற உறுப்பினர்கள் 13 பேர்கள் சென்ற 05-12-2012ம் தேதி பேரவைக்கு நேரில் வந்து அளித்தார்கள்.
மேற்படி மனுவை இக்கூட்டம் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்துகளை கேட்டறிந்து, ஐந்து ஏக்கர் நிலத்தை பேரவையின் மூலம் தெரிவு செய்து கொடுப்பதென முடிவு செய்யப்பட்டது.
எண்.2
தேவைப்படுகின்ற நிலத்திற்கு அரசு நிர்ணயித்துள்ள விலை ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் ஒரு இலட்சம் மட்டுமே.
கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் நகராட்சியின் தலைவரும், வாவுவஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனத்தலைவருமான, பேரவையின் கௌரவ ஆலோசனை குழு உறுப்பினர் மரியாதைக்குரிய அல்-ஹாஜ் வாவு எஸ்.செய்யது அப்துர்ரஹ்மான் அவர்கள், நமதூர் கடையக்குடி பகுதியில் தனக்குச் சொந்தமான நிலத்தில் பேரவையின் வேண்டுகோளை ஏற்று, தேவைப்படுகின்ற ஐந்து ஏக்கர் நிலத்தை, அரசு நிர்ணயித்த விலைக்கே தருவதாக ஒப்புக்கொண்டு அறிவிப்பு செய்ததை இக்கூட்டம் தக்பீர் முழக்கதுடன் வரவேற்று, அவர்களுக்கு ஊர் மக்களின் சார்பாக இக்கூட்டம் நன்றி தெரிவிக்கிறது.
எண்.3
கொட்டப்படும் குப்பைகளிலிருந்து எந்திரங்கள் மூலம் எரிவாயு தயாரிப்பதற்கு நமது நகராட்சிக்கு தமிழக அரசு ரூபாய் தொன்னூறு இலட்சம் ஒதிக்கீடு செய்துள்ளது.
மேற்படி குப்பைகளிலிருந்து தயாரிக்கப்படுகின்ற எரிவாயுவால் சுற்றுச்சூழல் மாசுபடுமா? மக்கள் நலம் பாதிக்கப்படுமா? என்பன போன்ற விளக்கங்களை சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரி மூலமாக தெரிந்து கொள்ளவும், பயோ எரிவாயு தயாரிக்கப்படுகின்ற ஆலைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்வதற்கும், பேரவையால் ஐந்து பேர்கள் கொண்ட ஒரு குழுவை அனுப்பி வைப்பதென முடிவு செய்யப்பட்டது.
அறிக்கை:
வருந்துகிறோம், பிராத்திக்கிறோம்
நாடறிந்த நாவலர், நல்ல தமிழ் பேச்சாளர், அண்ணல் பெருமானார் முஹம்மது முஸ்தபா(ஸல்) அவர்களின் அமுத மொழிகளை, ஆய்வு செய்து, அதற்குரிய கருத்துக்களை விளக்கமாகவும், விரிவாகவும் சொல்லுகின்ற ஆற்றல் பெற்றவர்.
இவர்தம் பேச்சு நடை நீர் அலையை வருடிச்செல்லும் தென்றலாய் இனிக்கும். கொடுக்கும் தலைப்பு இவரது இதழ் சிந்தும் அழகு தமிழ் சொற்களால் ஜொலிக்கும்.
அரபு நாடுகள், ஹங்காங், பேங்காக், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் புருனை நாடுகளில் இவர்தம் சன்மார்க்கப் பிரச்சாரத்தால் பயன் பெற்றோர் பல்லாயிரம்.
எண்ணற்ற மார்க்க அறிஞர்களை உருவாக்கி சமுதாயத்திற்களித்த சன்மார்க்கப் போதகர்.
தமிழக ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் தலைவரும், காயல்பட்டணம் மஹ்லரா அரபிக்கல்லுரியின் முதல்வருமான மரியாதைக்குரிய மெளலானா மெளலவி அல்-ஹாஜ் எஸ்.எஸ். கலந்தர் மஸ்தான் ஆலிம், ரஹ்மானி, காதிரி அவர்கள் சென்ற 20-12-2012 வியாழக்கிழமை அன்று வஃபாத்தாகி விட்டார்கள், இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
மறு நாள் காலை 09:15 மணியளவில் அன்னாரது ஜனாஸா சொந்த ஊரான கடையநல்லுரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
வல்லிறையேகன் ஆலிம் பெருந்தகை அவர்கள், மாண்புயர் மார்க்கத்திற்காக ஆற்றிய பணிகளை ஏற்று, பிழைகளைப் பொறுத்து மேலான சுவனத்தைக் கொடுத்தருள்வானாக ஆமின்.
தகுதிவாய்ந்த முதல்வரை, குடும்பத்தலைவரை, இழந்து வருந்தும் மஹ்லரா அரபிக்கல்லூரியின் நிர்வாகிகள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அன்னாரது குடும்பத்தினருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்,
தலைவர் மற்றும் நிர்வாகிகள்.
தகவல்: ஐக்கியப் பேரவை நிர்வாகம்.
நிழற்படம்: முதன்மைச் செய்தி முகவர், kayalconnection.com