மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள், 5 -12 -2016 திங்கட்கிழமை இரவு 11 .30 மணியளவில், சென்னை அப்போலோ மருத்துவமனையில் வைத்து காலமானார் .
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளராக பல்லாண்டுகாலம் சிறப்புடன் செயலாற்றி , அந்த இயக்கத்திற்கு ஒரு உறுதி வாய்ந்த அரணாக திகழ்ந்தார்.
மாநிலங்களவை உறுப்பினர் , எதிர்கட்சித் தலைவர் , முதலமைச்சர் என்ற பொறுப்புக்களை படிப்படியாக அடைந்து, ஆளுமைத் திறனோடு தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட மகத்தான தலைவராக அவர் விளங்கினார் .
பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கான இட ஒதுக்கீட்டில் அவர் காட்டிய அசாத்திய துணிச்சலால், சமூக நீதி காத்த வீராங்கனை என்ற சிறப்பான பெயரை தந்தை பெரியாரின் சீடரான திரு வீரமணி அவர்களிடமிருந்து அவர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில உரிமைகளுக்காக அயராது போராடி மதிப்புயர் வெற்றிகளை ஈட்டினார். தாய் மொழியான தமிழுடன் ஆங்கிலம் இந்தி கன்னடம் தெலுங்கு ஆகிய மொழிகளையும் தெரிந்த முதல்வர், சிறந்த புத்தக வாசிப்பாளாராகவும் மிளிர்ந்தார் .
கந்து வட்டி கொடுமையை ஒழித்து லாட்டரி சீட்டை தடை செய்து ஏழை நடுத்தர மக்களுக்கு உதவிப் புரிந்த முதல்வர் , சட்டம் ஒழுங்கை சீராக காப்பாற்றியவர் என்ற நற்சான்றிதழைப் பெற்றார்
மக்கள் நலத் திட்டங்களை அம்மா திட்டங்கள் எனும் பெயரில் அறிமுகப் படுத்தி, வரியவர்கள் , குறிப்பாக தாய்மார்கள் இதயங்களை தொட்டார்.
காயல் நகர மக்களுக்கு இவரது ஆட்சியில் பல்வேறு குறிப்பிடத்தக்க திட்டங்கள் வந்தடைந்தன என்பதை நன்றியுடன் நினைவுக் கூறுவோம்.
துணிச்சல் , விடா முயற்சி , எதிர்ப்புகளை சந்திக்கும் மன உறுதி இவைகளுக்கு எடுத்துக் காட்டாக விளங்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் புகழ் தமிழக அரசியல் வரலாற்றில் நீடித்து நிலை பெற்றிருக்கும்
புரட்சித் தலைவி என அன்புடன் அழைக்கப்பெற்ற அவர் , தமிழ் மண்ணில் விதைத்த புரட்சி விதைகள் விருட்சங்களாய் ஓங்கட்டும்!
மாண்புமிகு முதல்வரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் , அவரது பிரிவால் துயர் அடையும் அனைவருக்கும் ஆறுதலையும் உரித்தாக்கிக் கொள்கிறோம். வாழ்க புரட்சித் தலைவியின் புகழ் !