பாளையம்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பாக் கல்லூரியின் முன்னாள் முதல்வர், கவிஞர், பேராசிரியர் அல்ஹாஜ் கா. முஹம்மது பாரூக் M.A., அவர்கள், 19 -11 -2016 சனிக்கிழமை நேற்று இரவு 8 மணி அளவில் சென்னையில் வைத்து வபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். அன்னாருக்கு சுமார் வயது 80 .
அன்னாரின் ஜனாஸா இன்று அவரது சொந்த ஊரான குமாரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
மறைந்த பேராசிரியர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கல்வி பயின்றவர். மதுரை வக்ப் வாரிய கல்லூரியில் தமிழ்துறைத் தலைவராக விளங்கினார். 1970 க்குப் பின்னர் துவங்கிய பாளை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தமிழ் துறை தலைவராக கல்வி பணியாற்றினார்.
பின்னர் அதே கல்லூரியில் முதல்வராகப் பொறுப்பேற்று சிறப்புடன் பணியாற்றினார்.
காயல்பட்டினத்தோடு மிகுந்த தொடர்புடையவர் . இவ்வூரில் நடைபெற்ற கவியரங்கம் , கருத்தரங்கம் , பட்டிமன்றம் , மீலாது விழா , புத்தக வெளியீட்டு விழா , பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி விழா போன்ற எண்ணற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்பு சேர்த்தவர் இவர்
மதிநா என்ற இலக்கிய மாத இதழை துவங்கி அற்புதமான ஆக்கங்களை வாரி வழங்கியவர் இவர் . மணிச்சுடர் பத்திரிக்கையின் முன்னோடியான அறமுரசு பத்திரிகையில் அவரின் கவிதைகள் அதிகமாக வெளிவந்துள்ளன.
பல்வேறு இலக்கிய நூற்களை வெளியிட்டவர் . சிறந்த சொற்பொழிவாளர் , கவிபுனைவதில் ஆற்றலாளர் .
பெருமைக்குரிய கல்வியாளராக திகழ்ந்த இவர் , இறையருள் கவிமணி பேராசிரியர் க . அப்துல் கபூர் அவர்களின் உடன் பிறந்த சகோதரர் ஆவார்.
சுமார் ஓராண்டுக்கு முன்னாள் வாவு வஜீஹா கல்லூரியில் நடைபெற்ற இலக்கிய விழாவில் பங்கேற்றதுதான், அவர் இவ்வூரில் கலந்து கொண்ட இறுதி நிகழ்வாகும்.
அவரின் நினைவும் , மார்க்கம் சார்ந்த அவரின் சேவைகளும் என்றைக்கும் நெஞ்சில் நிலைத்திருக்கும்.
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவன பதியை அருள்வானாக! ஆமீன்