அண்மையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ் மாநில செயலாளர் ஹாஜி கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் ஹாங்காங் விஜயம் செய்தார். ஹாங்காங் இந்திய முஸ்லிம் சங்கத்தின் சார்பில் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பையும், அவர் பங்கேற்ற கூட்டத்தில் ஆற்றிய உரைகுறித்தும் அச்சங்கத்தினர் வெளியிட்டுள்ள செய்தித் தொகுப்பின் சுருக்கத்தை கீழே வழங்குகிறோம்.
இந்நிகழ்ச்சிக்கு ஹாங்காங்கிற்கு பெரியவர் பர்மா யூனூஸ் தலைமை தாங்கினார். ஹாங்காங் ஐஎம்ஏ செயலாளர் காயல் ஹாபிழ் எம்.என் முஹ்யித்தீன் இறைமறை ஓதினார். துணைத் தலைவர் தொண்டி ஹஸன் பாக்கர் வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஹாங்காங் காயிதே மில்லத் பேரவை செயலாளர் ஹாபிழ் வி.எம்.டி. முஹம்மது ஹஸன் அறிமுகவுரை நிகழ்த்தினார். தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர் உரை நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில், இந்திய முஸ்லிம்கள் செய்த தியாகத்தையும், நாட்டுப் பற்றையும், கல்விக்காக, நாட்டு நலனிற்காக செய்த சேவைகளையும், எல்லா நிலைகளிலும் செய்த உதவிகளையும், இந்திய முஸ்லிம் சமுதாய தலைவர்கள் ஆற்றிய அற்புதப் பணிகளையும் எடுத்துரைத்தார்.
மேலும் இன்று நமது சமுதாயம் எதிர் நோக்கியுள்ள விஷயங்களையும், ஆற்ற வேண்டிய பணிகளையும் இந்திய முஸ்லிம் இளைஞர்கள் சேவையினையும் நினைவு கூர்ந்தார்.
ஒற்றுமையின் அவசியத்தையும், அதனை நிலைநாட்டுதலையும் அறிவுறுத்தினார். தாய்ச்சபை ஆற்றிவரும் அளப்பறிய பணிகளை எடுத்துரைத்தார்.
ஹாங்காங்கின் தாய்ச்சபையான இந்திய முஸ்லிம் சங்கத்தின் பணிகளைப் பாராட்டினார். மேலும் இதில் தங்களை இணைத்து அனைவர்களும் சமுதாயப் பணி செய்ய அழைப்பு விடுத்தார்.
மேலும் ஒற்றுமையுடன் பல காரியங்கள் ஆற்ற வாழ்த்துரைத்தார். தான் இந்திய அரசாங்கத்தில் வகிக்கும் மத்ரஸா கல்வி மேம்பாட்டுக் குழு விபரங்களை மக்களுக்கு விளக்கி நம் மக்கள் விழிப்புணர்வுடன் அதன் சேவையினை அறிந்து அதன் பலனை பெற்றிட வகைசெய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதற்கான பணியினை தமிழகத்தில் ஏற்கனவே ஆரம்பித்து செயலாற்றி வரும் செய்திகளைக் கூறினார்.
ஹாங்காங் காயிதே மில்லத் பேரவை சார்பில் அதன் தலைவர் எம்.ஒய். முஹம்மது அஷ்ரப் இந்திய முஸ்லிம் சங்கம் சார்பில் கூட்டத் தலைவர் யூனூஸ் அவர்களும் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கினர்.
ஹாங்காங் இந்திய முஸ்லிம் சங்க செயலாளர் நன்றி கூற, துஆவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. தமிழகத்தின் பல்வேறு ஊர்களைச் சார்ந்த சமுதாய பெருமக்களும், சமுதாய தலைவர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
நிலைப்படம் மற்றும் தகவல்: ஹாஜி வி.எம்.டி. முஹம்மது ஹஸன்