காத்தான்குடியில் அமைந்திருக்கும் இலங்கையின் தொன்மையான பிரசித்தி பெற்ற ஜாமிஅதுல் பலாஹ் அரபுக்கலாசாலையின் ஸ்தாபகரும் கொழும்பு 2ம் குறுக்குத்தெரு ஜாமிஉல் அழ்பர் (சம்மாங்கோடு) ஜும்ஆ மஸ்ஜிதின் தலைவரும் இந்தியா-அதிராம்பட்டினத்தை பிறப்பிடமாகக் கொண்டவருமான ஷைகுல் பலாஹ் மௌலானா மௌலவி எம்.ஏ.அப்துல்லாஹ் ரஹ்மானி (பெரிய ஹஸரத்) அவர்கள் தனது 84வது வயதில் 12-10-2016 புதன்கிழமை இன்று முன்னிரவு 7 மணியளவில் காத்தான்குடியில் வபாத்தானார்கள்.
(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)
இவர் இந்தியா-அதிராம்பட்டினத்தை பிறப்பிடமாகக் கொண்டிருந்த போதிலும் இலங்கை மக்களை நேசிக்கும் நற்குணமுள்ளவர். தனது ஆயுளின் பெரும்பகுதியை காத்தான்குடியில் கழித்த ஷேக் அவர்கள், மார்க்கக் கல்வியை கற்றல், கற்பித்தல் துறையில் மிகுந்த அக்கறை செலுத்தியதோடு ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரியின் அதிபராகத் திகழ்ந்து, இலங்கையின் பிரசித்தி பெற்ற பல நூற்றுக்கணக்கான ஹாபிழ்களையும் ஆலிம்களையும் உருவாக்கியவர் ஆவார்.
மேலும் கொழும்பு சம்மாங்கோட்டைப் பள்ளியின் ஆயுட்காலத் தலைவர் பதவியை வகித்த அன்னார் இலங்கையிலுள்ள பல அரபுக்கலாசாலைகளது சிரேஷ்ட ஆலோசகராகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாஸா நல்லடக்கம்:
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அழ்ழாஹ் நாளை (13.10.2016) வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு காத்தான்குடி-05, ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு அதே பள்ளி மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படும்.
“அன்னாரின் மறுவுலக வாழ்க்கை சிறப்பானதாக அமைய நாமும் அழ்ழாஹ்விடத்தில் துஆ செய்வோம்.
===============================================================================================================
ஷைகுல் பலாஹ் சுருக்க வரலாறு
தொகுப்பு : எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்
காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அதிபர் மௌலானா மௌலவி ‘ஷைகுல் பலாஹ்’ எம்.ஏ. அப்துல்லாஹ் ரஹ்மானி அவர்கள் தென்னிந்தியா தஞ்சை மாவட்டம் அதிராம் பட்டினத்தில் 21.03.1932 இல் பிறந்தார்கள்.
இவர்களின் தந்தை அல்லாமா அல்ஹாஜ் முகம்மது அபூபக்கர் ஆலிம் ஆவார்கள். இப்பெரியார் 1950 ஆம் ஆண்டு முதல் 1954 ஆம் ஆண்டு வரை மஹரகம மத்ரஸதுல் கபூரிய்யா அரபுக் கல்லூரியில் விரிவுரையாளராகக் கடமையாற்றியுள்ளார்கள்.
1955 ஆம் ஆண்டு முதல் 1965 ஆம் ஆண்டு வரை அட்டாளைச்சேனை ஷர்க்கியா அரபுக் கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றி பின்னர் இந்தியாவில் கீழ்க்கரை காயல்பட்டினம் போன்ற இடங்களில் கல்விப் பணியாற்றினார்கள்.
தந்தை அபூபக்கர் ஆலிம் ஷாஹிப் போன்று தனயனான மௌலானா மௌலவி அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்களும் ஆலிமாக வெளிவருவதற்காக சொந்த ஊர் அதிராம்பட்டினத்தில் மத்ரஸதுல் ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரியில் சேர்ந்து மார்க்க கல்வி கற்று 01.04.1954 ஆம் ஆண்டு ரஹ்மானி பட்டத்துடன் மத்ரஸா வாழ்க்கையை முடித்து வெளியேறினார்கள்.
ஆசிரியராக அதிராம் பட்டினம் அல் மத்ரஸதுல் ஸலாஹிய்யாவில் அதிபராகப் பதவி ஏற்று நான்கு ஆண்டுகள் நடத்தினார்கள். அதன் பின்னர் தனது தந்தையுடன் அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள் 03.05.1958 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்து அட்டாளைச்சேனை அரபுக் கல்லூரியில் விரிவுரையாளராகக் கடமையாற்றினார்.
பின்னர் 05.01.1955ல்இல் ஆரம்பிக்கப்பட்ட காத்தான்குடி மத்ரஸதுல் பலாஹ் அரபுக் கல்லூரிக்கு தகுந்த விரிவுரையாளர் தேவைப்பட்டதால் மௌலானா மௌலவி அல்ஹாஜ் எம்.ஏ. முஹம்மது அப்துல்லாஹ் (ரஹ்மானி) அவர்கள் 13.10.1959 ஆம் ஆண்டு உப அதிபராக காத்தான்குடி மத்ரஸதுல் பலாஹ்வில் கடமையைத் தொடர்ந்தார்கள்.
இவர்களது அயராத முயற்சியினால் காத்தான்குடியின் கண்ணாக மத்ரஸதுல் பலாஹ் இலங்கை முழுவதும் ஒளி வீசத்தொடங்கியது.
இலங்கையில் முதலாவது அல்குர்ஆன் மனன ‘ஹிப்ழ்’ வகுப்பு மத்ரஸதுல் பலாஹ்வில்தான் முதலாவதாக 18.12.1971 இல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த வகுப்பை தென் இந்தியா காயல் பட்டினத்தைச் சேர்ந்த மர்ஹூம் மௌலானா மௌலவி அல் ஹாபிழ் ரீ.எம்.கே. செய்யித் அஹ்மத் (முத்து வாப்பா) ஆலிம் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்கள்.
இந்த ‘ஹிப்ழ்’ பணிக்காக அதிபர் அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள் சம்மாந்துறையைச் சேர்ந்த மௌலவி ஹாபிழ் ஏ. ஹஜ்ஜி முஹம்மத் அவர்களை நியமித்தார்கள்.
இவர்களின் அயராத முயற்சியின் காரணமாக 1975 ஆம் ஆண்டு அல்குர் ஆனின் 6666 வசனங்களையும் மனனம் செய்த முதலாவது ஹாபிழ்கள் குழு பட்டம் பெற்று வெளியேறினார்கள்.
இலங்கை அரசாங்கத்தின் கல்வி அமைச்சினால் 17.11.1959 இல் இம் மத்ரஸா பதியப்பட்டு 1983 ஆம் ஆண்டு இக் கல்லூரி மத்ரஸதுல் பலாஹ் என்ற பெயரை மாற்றி ‘ஜாமிஅதுல் பலாஹ்’ எனும் பெயரில் உயர்கலாபீடமாக மாற்றப்பட்டது.
அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள் அதிராம் பட்டினம் செ.மு.க.நூறு முஹம்மது மரைக்காயர் அவர்களின் புதல்வி உம்முல் பஜ்ரியா அவர்களை 02. 09. 1961 ஆம் ஆண்டு மணமுடித்தார்கள்.
இந்த இனிய வாழ்வில் மூன்று ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள். முறையே மூத்த புதல்வர் முஹம்மது ரஹ்மதுல்லாஹ். முஹம்மது முஸ்தபா மூன்றாம் மகன் முஹம்மது பறக்கத்துல்லாஹ் ஆவார்கள்.
தனது மூத்த புதல்வர் முஹம்மது ரஹ்மதுல்லாஹ்வையும் இளைய புதல்வர் பறக்கத்துல்லாஹ்வையும் காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ்வில் கல்வி பயில வழி செய்தார்கள். அதன் பிரதிபலிப்பாக1991 ஆம் ஆண்டு ரஹ்மதுல்லாஹ் மௌலவி பட்டம் பெற்று பின்னர் வாழைச்சேனை ‘குல்லியதுன் நஹ்ஜதில் இஸ்லாமிய்யா’ அரபுக் கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றுகின்றார்.
இரண்டாவது மகன் முஸ்தபா மரணமடைந்துவிட்டார். மூன்றாவது மகன் முஹம்மது பறக்கத்துல்லாஹ் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இயங்கும் ‘ஜாமிஆ மதீனத்துல் இல்ம்’ கல்லூரியில் அல்ஹாபிழ் பட்டம் பெற்று காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ்வில் மௌலவி பட்டப் படிப்பைத் தொடர்ந்து இதே கல்லூரியில் போதனாசிரியராகக் கடமையாற்றுகின்றார்.
55 வருட காலமாக பெற்ற தாயை பிறந்த பொன்னாட்டை உற்றாரை உறவினரை சுற்றத்தாரை நண்பர்களை பிரிந்து கடல் கடந்து வந்து கல்விப் பணியாற்றிய அன்னார் சொந்த ஊரில் தங்கிவாழ்ந்த காலம் கொஞ்சம்தான்.
தலைநகர் கொழும்பு 2 ஆம் குறுக்குத் தெரு சம்மாங்கோட்டார் ‘ஜாமிஉல் அழ்பர்’ பள்ளிவாயலைக் கட்டுவதற்கு நிலம்கொடுத்து அதனை அழகாகக் கட்டி முடித்த பெருமை அப்துல்லாஹ் ஹஸ்ரத்தின் பாட்டனார் அப்துல் காதிர் ஆலிம் ஸாஹிப் அவர்களையே சாரும்.இந்தப் பரம்பரையினர் இன்றுவரை இப்பள்ளியை நிருவகிப்பதும் அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்களும் இப்பள்ளியில் பிரதான நிருவாகியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தனது வாழ்நாளை ஜாமிஅதுல் பலாஹ்வின் சேவைக்காக அர்ப்பணித்த அற்புத மனிதரான ஹஸரத் அவர்களிடம் கல்வி கற்று 2015 வரை 404 மௌலவிமார்களும் 387 ஹாபிழ்களும் வெளியேறியுள்ளனர் வெளியேறிய அனைத்து பலாஹிகளும் அவரிடமே கல்விகற்றவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இத்தகைய மதிப்புள்ள மகான் அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள் இலங்கை மண்ணில் ஆற்றிய பணிகளைச் சமுதாயம் மறந்துவிட முடியாது.
இவர்களின் தன்னிகரற்ற பணிகளால் இக் கல்லூரி பெரு வளர்ச்சி கண்டிருப்பதை யாவரும் அறிவர். இரவு பகலாக இதன் வளர்ச்சிக்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஜாமிஆவின் அதிபராக இருப்பதுடன் காத்தான்குடி நகரை இஸ்லாமிய நெறிமுறையில் வழிநடாத்தும் தலைவராகவும் இலங்கை முழுவதிலும் வாழும் மக்களால் மதித்துப் போற்றப்படும் ஒரு பெரியாராகவும் விளங்குகிறார்கள்.
காத்தான்குடி மக்களின் இன்ப துன்பங்களிலெல்லாம் பங்கு கொண்டு பிரச்சினைகள் ஏற்படும்போது அவற்றை சுமுகமாகத் தீர்த்து வைத்து ஒரு சமாதானத் தூதுவராகச் செயற்படுகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் இலங்கையின் பல பகுதிகளிலும் சமய விழாக்களுக்கும் அறபுக் கல்லூரிகளின் பட்டமளிப்பு விழாக்களுக்கும் இவர்கள் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்படுகிறார்கள். இலங்கையில் புதிய தொழுகை நேரம் அமுல்படுத்துவதில் பிரச்சினைகள் எழுந்தபோது இவர்கள் தலையிட்டு அதனை சுமுகமாகத் தீர்த்து வைத்ததால் இலங்கை முழுவதிலும் புதிய தொழுகை நேரம் அமுல்படுத்தப்பட்டது.
காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவும் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனமும் தொடர்ந்து சிறப்பாகச் செயற்படவேண்டும் என்பதில் அதிக அக்கறை கொண்டு அவற்றின் ஆலோசகராக விளங்கி தமது மேலான ஆலோசனைகளால் அவற்றை வழிநடாத்தி வருகிறார்கள். பணிவும், தன்னடக்கமும் ஷைகுல் பலாஹ் அவர்களிடம் இயற்கையாகவே அமைந்து விட்ட பண்புகள்.
எல்லோருடனும் அன்பாகப் பேசி, சாந்தமாக அளவளாவி அனைவர் மனத்தையும் கவர்ந்துவிடும் தனிச்சக்தி இவர்களிடம் உள்ளது.
இஸ்லாமிய மார்க்க அறிவில் ஆழ்ந்த புலமை மிக்க இவர்கள் தமது மாணவர்களைத் தேர்ந்த அறிஞர்களாகவும் உயர்ந்த ஒழுக்க சீலர்களாகவும் ஆக்குவதில் மகத்தான பணி செய்து கொண்டிருக்கிறார்கள்.
22-05-2016
விடிவெள்ளி
தகவல்: ஷாஹுல் ஜிப்ரி