கி.பி.1850 களில் காயல்பட்டினத்தில் பிறந்து வாழ்ந்தவர் கண்ணகுமது மொகுதூம் முஹம்மது புலவர். சென்னைப் பல்கலைக்கழக புத்தக பரிபாலனத் தலைவராகப் பணியாற்றி 40 ஆண்டுகளில் 20 கோடி வாக்கியங்களுக்கு மேல் பதிப்பித்து சாதனை படைத்தவர்.
1887ல் சீறா வசன காவியத்தை எழுதி வெளியிட்டவர் கண்ணகுமது மொகுதூம் முஹம்மது புலவர்.
கண்ணகுமது மொகுதூம் முஹம்மது புலவர் எழுதிய சீறா வசன காவியத்தை தான் 125 ஆண்டுகளுக்குபின் செம்பதிப்பாக வெளிக் கொணர்ந்துள்ளார் பேராசிரியர் முரளி அரூபன்.
குடியாத்தத்தை பூர்வீகமாகக் கொண்டு சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்து வளர்ந்த இவர் சென்னை புதுக்கல்லூரியில் படித்து 1989ல் தமிழில் முதுகலை பட்டம் பெற்று 1999ல் அங்கேயே துணைப் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர்தான் சீறா வசன காவியத்தை பதிப்பித்து வெளியிடும் மாபெரும் பணியை செய்துள்ளார். 1328 பக்கங்களை கொண்ட இம்மாபெரும் நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் டிசம்பர் 3ம் தேதி திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை ராயப்பேட்டையிலுள்ள புதுக்கல்லூரி ஆணைக்கார் அப்துல் சுக்கூர் ஆடிட்டோரியத்தில் நடைபெறுகிறது.
முன்னாள் அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகனார் வெளியிட சென்னை வாழ் காயல்பட்டினம் பிரமுகர்கள் பெற்றுக் கொள்கின்றனர். பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், பேராசிரியர் கவிஞர் ஈரோடு தமிழன்பன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
பேராசிரியர் முரளி அரூபன் அவர்களை வாழ்த்தவும், மகத்தான சாதனை புரிந்துள்ள காயல்பட்டினம் புலவரின் இலக்கிய பங்களிப்புக்கு நன்றி செலுத்தவும் நாமனைவரும் இவ்விழாவில் பங்கேற்று சிறப்பிப்போம்.
தகவல் —-காயல் மகபூப்