இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில செயலாளரும், மணிச்சுடர் நாளேடு செய்தி ஆசிரியருமான காயல் மகபூபுக்கு ஹாங்காங்க் காயிதே மில்லத் பேரவை சார்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
ஹாங்காங்க் ஷிம்ஷாஷி பூங்காவில் 22-12-2012 சனி இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மூத்த பிரமுகர் அப்துல் வதூத் தலைமை தாங்கினார்.
இர்ஷாத் அலி இறைமறை ஓதினார்.
ஹாங்காங்க் காயிதே மில்லத் பேரவை அமைப்பாளர் வி.எம்.டி. முஹம்மது ஹஸன் வரவேற்புரையாற்றினார். காயல் மகபூபை வரவேற்றார்.
இந்திய முஸ்லிம் சங்க முன்னாள் தலைவர் எஸ்.ஹைச்.பாக்கர் சாகிப் வாழ்த்துரை நிகழ்த்தினார்;.
மணிச்சுடர் நாளிதழ் வெள்ளிவிழா சிறப்பு மலரை, கீழக்கரை ஹஸன் பாக்கர் வழங்க காயல்பட்டினம் ஹஸன் மரைக்கார் பெற்றுக் கொண்டார்.
மணிச்சுடர் நாளிதழை நீடூர் அப்துர் ரஹ்மான் வழங்க காயல்பட்டினம் இன்ஜினியர் முஸ்தபா பெற்றுக் கொண்டார்.
பிறைமேடை இதழை உவைஸ் வழங்க வி.எம்.எம் தம்பி பெற்றுக் கொண்டார்.
டைம்ஸ் ஆப் லீக் இதழை கதீப் மொகுதூம் வெளியிட புகாரி, அப்துர் ரவூப் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் காயல் மகபூப் ஆற்றிய உரை:
இந்த கடுமையான குளிரில், திறந்த வெளியில், தரையில் அமர்ந்து, இந்நிகழ்ச்சியில் நீங்கள் கலந்து கொண்டுள்ளது மெய்சிலிர்க்க வைக்கிறது.
இந்த வரவேற்பு என்னைப் போன்றோரின் பொதுநலப் பணிகளுக்கு நீங்கள் தரும் அங்கீகாரம்.
கடல் கடந்து எந்த நாட்டில் வாழ்ந்தாலும், தாயகத்தை மறக்க மாட்டோம். சமூகத்திற்கு பணியாற்றுவோம். சொந்த ஊர் வளர்ச்சிக்கு துணைபுரிவோம் என்ற உறுதியுடன் வாழ்வது பெருமைக்குரியது.
இன்று மூத்தவர்கள் மட்டுமல்ல, இளைய தலைமுறை பொது நலச் சேவையில் அதிக ஆர்வம் காட்டுகிறது. அவர்களிடத்தில் அறிவும் ஆற்றலும் நிரம்ப உள்ளன.
இணையதளத்தின் மூலம் நட்பு வட்டாரத்தையும், தங்கள் பணிகளையும் மிகச் சிறப்பாக ஒருங்கிணைக்க முடிகிறது.
ஒன்றில் மட்டும் நீங்கள் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும்.
ஆன்மீகம், அரசியல் என நீங்கள் எந்த கொள்கையில் இருந்தாலும், ஊர், சமுதாயம் என்று வருகின்ற போது ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.
அந்த ஒற்றுமையால் தான், நம் சமூகத்தின் மரியாதை, கண்ணியம் அனைத்தும் இருக்கிறது. எந்த சூழ்நிலையிலும் அதை விட்டுக் கொடுக்க கூடாது.
வாழும் நம்மவர்க்கு மத்தியில் பிளவுகளும், பிரச்சனைகளும் உருவாகிக் கொண்டே இருக்குமானால் அச் சமூகத்தின் முன்னேற்றம் தடைபடும்.
இன்று வெளிநாடுகளில் படித்துப் பட்டம் பெற்றவர்கள் நல்ல வேலைவாய்ப்புகளில் இருக்கிறார்கள். அவர்களின் அறிவு கூர்தீட்டப்பட்டு சமூகப்பணிக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.
ஹாங்காங்க் நாட்டில் தமிழக முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கில் வாழ்கிறார்கள். குறிப்பாக காயல்பட்டினம், கீழக்கரை, நீடூர், கூத்தாநல்லூர் போன்ற ஊர்க்காரர்கள் இவர்கள்.
மக்கள் தொகையில் 25 சதவீதம் உள்ள கேரள முஸ்லிம்கள் சாதனை படைக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டுமே உள்ள முஸ்லிம்கள் 60 பிரிவாக பிரிந்து கிடக்கிறார்கள்.
எனவே சமூகத்தை ஒருங்கிணைப்பதே இன்றைய தலையாய பணி. அந்தப் பணியில் அக்கறைக் காட்டுவோம்.
இவ்வாறு காயல் மகபூப் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் இந்திய முஸ்லிம் அசோசியேசன் செயலாளர் முஹ்யித்தீன் இப்றாஹிம் சாகிப், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை ஹாங்காங்க் தலைவர் காழிஅலாவுத்தீன், செயலாளர் பாக்கர், இந்திய இளைஞர் நண்பர் குழு நிர்வாகி அப்துல் அஜீஸ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
பி.எஸ். சாகுல் ஹமீது கவிதை பாடினார்.
அண்மையில் காலமான மஹ்லரா அரபிக் கல்லூரி முதல்வர் மௌலானா எஸ்.எஸ். கலந்தர் மஸ்தான் ரஹ்மானி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அன்னாரின் மஃபிரத்திற்கு துஆ ஓதப்பட்டது.
நிழற்படம் மற்றும் தகவல் உதவி: வி.எம்.டி. முஹம்மது ஹஸன், ஹாங்காங்க்.