நமதூர் பேருந்து நிலையம் அருகில் காலை 8 மணி முதல் 10 மணி வரை அன்றாடம் வேலைக்குச் செல்லும் தினக்கூலிகள், பொதுக்கூட்டம் போல் ஒன்று கூடுகிறார்கள்.
போதாக்குறைக்கு கோழி வியாபாரிகளும், அவ்விடத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள்.
பேருந்துகள், நிலையத்திற்கு உள்ளே செல்லவும், வெளியே வரவும் உள்ள ஒரே பாதையில் இப்படிக் கூடினால் எப்படி பேருந்துகள் செல்லும்.?
மேலும் அவ்வழியில் செல்லும் இதர வாகனங்களுக்கும் எப்போதும் இடையூறே ஏற்படுகின்றது. இதனால் விபத்துக்கள் ஏற்படக் கூட வாய்ப்புள்ளது.
இடையூறு விளைவிக்கும் இந்த நடைபாதை மன்னர்களுக்கு வேறு இடம் ஒதுக்கி கொடுக்க வேண்டும் என்று நகராட்சி உறுப்பினர் ஒருவர் வேண்டுகோள் வைத்தார்.
அதை ஏற்று, 30-11-2012 நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானமே நிறைவேற்றி உள்ளார்கள். (தீர்மானம் எண் 49)
மாதம் ஒன்று முடியப் போகிறது. மாபெரும் நடவடிக்கை ஒன்றும் தேவையில்லை.
நகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களை சந்தித்து இப்பகுதியில் நிற்க வேண்டாம் எனவும், வேலைக்குச் செல்லும் நீங்கள் கூடுவதற்கு வேற்றிடம் இதோ என்று அடையாளம் காட்டும் பணி ஒன்றுதான் தேவை.
இதைக்கூட அமல்படுத்த சுணக்கம் காட்டினால், மக்களுக்கு எப்படி மன்றத்தின் விரைவான நடவடிக்கைகளின் மீது நம்பிக்கை வரும்? பொறுத்திருந்து பார்ப்போம்.
நிழற்படம் மற்றும் தகவல் உதவி: முதன்மைச் செய்தி முகவர், kayalconnection.com