காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் அமைந்திருப்பது DCW சுமார் 45ஆண்டுகளுக்கு முன்பாக, நமதூர் மக்களின் நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி, குஜராத்தின் ஜெயின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இத்தொழிற்சாலையை நிறுவினார்கள்.
துவக்க காலத்திலிருந்து இன்று வரை, நமதூர் மக்களில் ஒருசிலர் மட்டுமேவேலை வாய்ப்பினைப் பெற்றார்களே தவிர, பெருமளவு இந்த ஆலையால் இவ்வூர் பயனனடையவில்லை.
உருவாகப் போகும் ஆபத்தை அறியாத நம்முன்னோர்கள் வழங்கிய நிலத்தில், உருவான இந்த ஆலை இவ்வூருக்கு நோய்களையே பரிசாகத் தந்துள்ளது.
நமது காயல் உள்ளிட்ட தமிழகத்தின் எப்பகுதி மக்களுக்கும், அன்றாடம் பயன் தரும் எப்பொருளையும் உற்பத்தி செய்யாது, வடநாட்டின் தேவைக்கு பயன்படும் வேதியல் (இரசாயனம்) பொருட்களை மட்டுமே உற்பத்தி செய்து இந்த ஆலை அனுப்பி வைக்கிறது.
இந்த ஆலையின் மூலம் வெளியாகும் அமிலக்கழிவு, கடலிலும், கால்நடைகள் பருகும் நீர்நிலைகளிலும், வயல் வெளிகளிலும் ஊடுருவிக் கலப்பதினால் வாழும் மனிதர்களுக்கும், வாயில்லா ஜீவன்களாகிய கால்நடைகளுக்கும் பெரும் பாதிப்பை உருவாக்கி வருகிறது.
இப்பாதிப்பு உப்பளங்களையும் விட்டுவைக்கவில்லை. வெளியாகும் நச்சுப்புகை காற்றில் கலந்து, நம் சுவாசத்தில் இணைந்து பல்வேறு பிணிகளை உருவாக்குகிறது.
சுற்றுப்புறத்தை முற்றிலும் நாசப்படுத்தும் இவ்வாலை நிர்வாகம், அரசு விதிகளையோ, வழிகாட்டும் நெறிகளையோ சிறிதளவும் பின்பற்றாமல், அவ்வப்போது எழும் கண்டனங்களையும் கருத்தில் கொள்ளாமல் செயல்படுவதைக் கண்டித்தும், அரசின் கவனத்தை ஈர்த்திடவும் காயல்பட்டினத்தில் 29.11.2012 வியாழக்கிழமை அன்று கடையடைப்பு, ஆர்ப்பாட்டம், விழிப்புணர்வு பொதுக் கூட்டம் நடைபெற்றன.
காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை அனத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மருந்து, பால் கடைகள், அரசு அலுவலகங்கள், பள்ளிக் கூடங்கள், போக்குவரத்து ஆகியவைகளுக்கு முழு அடைப்பில் விதிவிலக்கு வழங்கப்பட்டிருந்தன.
மாலையில் நமதூர் முதன்மைச்சாலையில் (மெயின் ரோடு) நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஹாஜி ஏ.ஆர்.இக்பால் தலைமை ஏற்றார். kayalconnection.com ஆலோசகர் ஹாஜி எஸ்.எம்.சதக்கத்துல்லாஹ், பொதுநல ஆர்வலர் ஹாஜி பக்ரீன் ஆகியோர்; முன்னிலை ஏற்றார்கள். ஆலைக்கெதிரான கண்டக் குரல்கள் எழுப்பப்பட்டன.
கடையக்குடி மற்றும் கற்புடையார் வட்டம் பகுதிகளில் மீன் பிடித் தொழில் செய்து வருகின்ற மீனவர்களும்; திரளான காயலர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இரவு நடைபெற்ற விழிப்புணர்வு பொதுக் கூட்டத்திற்கு ஹாஜி ஏ.கே.கலீல் தலைமை ஏற்றார். ஹாஜி
டி.ஏ.எஸ்.அபூபக்கர், ஹாஜி என்.எஸ்.ஈ.மஹ்மூது, ஹாஜி மக்கி நூகுத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களாகிய ஜனாப் நிஜாமுத்தீன் மற்றும் திரு. அருட்செல்வன் ஆகியோரின் சிறப்புரையுடன் மற்றும் பலரின் உரைகளும் இடம்பெற்றன.
நகரின் அனைத்து ஜமாஅத்துகள் – பொதுநல அமைப்புகள் – புறநகர் ஊர் நலக் கமிட்டியினர் – நகர்மன்ற அங்கத்தினர் – வேன் – கார் – ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் – அமைப்பு
சாரா நிறுவனத்தினர் – அமைப்பு சாரா வாகன ஓட்டுநர்கள் ஆகிய அமைப்புக்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பதாகவும்,
காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு இப்போராட்டத்திற்கான ஒருங்கிணைப்பாளராகவும் குறிப்பிட்டு பிரசுரம் வெளியிடப்பட்டு, நகரெங்கும் சுவரொட்டியும் ஒட்டப்பட்டிருந்தன.
நல்லவைகள் விளையும் என நம்புவோம்.
நிழற்படம் மற்றும் செய்தித் தொகுப்பு :
முதன்மைச் செய்தியாளர், kayalconnection.com