அண்மையில் நமது நாடாளுமன்றத்தில், சிறுதொழிலில் அன்னிய முதலீட்டிற்கு அனுமதி அளித்து மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, நாடெங்கும் ஆதரவும் எதிர்ப்பும் நிலவி வருகிறது.
இம்மசோதாவை கண்டித்து, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நாடெங்கும் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டக் குழு அண்மையில் நமதூரில் அவர்களின் கட்சியின் கொடிகளை ஏந்தியவாறு, தெருத்தெருவாக பொதுமக்களை சந்தித்து, நான்கு பக்கம் கொண்ட விரிவான பிரசுரத்தை விநியோகித்தனர்.
இடையிடையே அவர்கள் ஒன்றுகூடி, இம்மசோதாவிற்கு எதிராக தெருவில், எதிர்ப்பு முழக்கமிடுகின்றனர்.
அவர்களின் பிரசுரத்தில் இடம் பெற்ற சில வரிகள்…
‘ஆண்டிற்கு 24 இலட்சம் கோடி புழங்கும் சில்லறை வியாபாரத் துறையினை, அன்னியனுக்கு தாரை வார்த்ததன் மூலம், நான்கு கோடி குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பறித்துள்ளது.
தற்போது நாட்டில் ஒன்றரை கோடி சிறு கடைகள் உள்ளன. ஒவ்வொரு கடையிலும் சராசரியாக மூன்று பேருக்கு வேலைகிடைக்கிறது. இவர்களில் பெரும்பாலோர் சுயதொழில் செய்வோர்.
வால்மார்ட்டின் ஒரு அங்காடி திறக்கப்பட்டால் 214 பேருக்கு வேலை கிடைக்கும். அதிலும் பெரும்பான்மை, நிரந்தரமற்ற வேலை. ஆனால், 1300 சிறுகடைகள் அழிந்து போகும்.
3900 பேரின் வேலையை பறித்து, 214 பேருக்கு வேலை அளிப்பதுதான் வேலைவாய்ப்பை பெருக்கும் வழிமுறை என்பதை, அமெரிக்க அடிமைகளைத் தவிர வேறு யாரும் நம்ப மாட்டார்கள்.
பாராளுமன்றம் சிறு வித்தியாசத்தில், இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தை அந்நியனுக்கு தாரை வார்க்க அனுமதி அளித்தாலும், இந்திய வீதிகளில் இப்போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம்.’
நிழற்படம்: வீனஸ் மணி
தகவல்: மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் தூத்துக்குடி மாவட்டக் குழு