இவ்விழாவிற்கு முகைதீன்மெட்ரிக்குலேசன் பள்ளியின் நிறுவனரும், காயல்பட்டினம் வரலாற்று ஆசிரியறுமான எம்.ஏ. அப்துல் லத்தீப் முன்னிலை வகித்தார்.
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் பிரதிநிதி ஃபஜல் இஸ்மாயில் இறைமறை வசனங்களை ஒதி நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார். துளிர் ஆர்வலர் கொமந்தார் இஸ்மாயில் வரவேற்புரை நிகழ்த்தினார்.
துளிரின் நிறுவனர் வக்கீல் அஹமத் துளிருக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட வேண்டியதன் அவசியத்தை விளக்கியதோடு இந்த வகுப்பறை கட்டிடங்களை ஹங்காங் காயல் மாணவர் நல அமைப்பும் சிங்கப்பூர் காயல் நலமன்றமும் இணைந்து கட்டித்தர பொருளுதவி வழங்கி இருப்பதை நன்றியோடு தெரியப்படுத்தினார்.
மேலும் இந்தியாவிலும் உலகெங்கிலும் சிறப்புடன் சேவையாற்றி வரும் காயல் நல மன்றங்களும், காயல்பட்டினத்தின் இளைஞர்களும், தனவந்தர்களும் துளிருக்கு பொருளுதவிகள் வழங்கி ஆதரவு அளிப்பதன் மூலம் துளிர் தொடர்ந்து இவ்வட்டாரத்திலுள்ள அனைத்து இயலாநிலை குழந்தைகளுக்கு சாதி, மத பேதங்களை கடந்து மறுவாழ்வு பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கிய சமூக ஆர்வலர் காயல் அமானுல்லாஹ் பேசும் போது துளிர் ஆற்றுகின்ற சேவை இயலாநிலை குழந்தைகளுக்கு மிகவும் பயனள்ளது என்றும் அதன் அன்றாட பணிகள் மிகவும் கடினமானது என்றும் அதை சவாலாக தொடர்ந்து எடுத்துச் செல்லும் துளிர் பணியாளர்களும், நிர்வாகிகளும் பாராட்டுக்குறியவர்கள் என்றும் குறிப்பிட்டார்.
காயல் நல மன்றங்கள் இது போன்று பல்வேறு சேவைகளை தொடர்ந்து மக்களுக்கு ஆற்றிவருகின்றார்கள் என்றும் அதன் ஒவ்வொரு உறுப்பினர்களும் தருகின்ற பொருளுதவியும், ஒத்துழைப்புமே இதற்கு காரணம் என்றும் குறிப்பிட்டார்.
சமூக ஆர்வலர் நிஜார் தனது வாழ்த்துரையில் பேசும் போது இவ்வட்டாரத்தில் சாதாரண குழந்தைகளுக்கு பல்வேறு பள்ளிகள் நடத்தப்படும்பொழுது மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கென்று சிறப்பு பள்ளி இல்லாத குறை முன்பு இருந்தது ஆனால்; சிறப்பு குழந்தைகளுக்கென்று துளிர் பள்ளியை துவக்கிய பின் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும், சாதாரண குழந்தைகளைப் போல் ஆர்வமுடன் பள்ளி செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
துவாக்களுடன் கட்டிடத்திற்கான அடிக்கல்நாட்டுவிழா நடைபெற்றது. ஹங்காங் நாட்டின் மூத்த பிரதிநிதிகள் அப்துல் வதூத், கம்பல் பக்ஸ் பாக்கர் சாஹிப், வி. எம். எஸ். அமீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
துளிரின்பெற்றோர் மன்ற தலைவர் வி.எஸ்.ஏ. ஆயிஷா சாஹிப் தம்பி நன்றி கூறினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை துளிரின் திட்டஒருங்கிணைப்பாளர் சித்திரம்ஜான் மற்றும் பணியாளர்கள் சிறப்புற செய்திருந்தனர்.
நிலைப்படம் மற்றும் தகவல்: துளிர் நிர்வாகம்