எதிர்ப்பு மழையாக வந்தாலும் தன் நிலையில் குழையாதவர்:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் மறைவு குறித்து விடுத்துள்ள இரங்கல் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக முதல்வராகக் திகழ்ந்த செல்வி ஜெயலலிதா அவர்கள் நீண்ட நாள் வாழ்ந்து தமிழ்நாட்டுக்கு நிலையான பல அறிய சாதனைகளை புரிய வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்த மக்களின் நெஞ்சங்களுக்கு அவரின் மறைவு பெரியதொரு ஏமாற்றத்தை தந்துவிட்டது.
அந்த ஏமாற்றத்தால் அதிர்ச்சியும், தாங்க முடியாத துக்கமும், மன வேதனையும், மக்களிடம் பெருகிவிட்டது. ஜெயலலிதா அவர்கள் மீது மக்கள் கொண்டிருந்த அலப்பறிய பாசமும், அன்புமே இதற்கெல்லாம் காரணமாகும்.
புரட்சி தலைவி என்று தொடங்கி, பொன்மனச் செல்வி என்று உயர்ந்து, அம்மா என்று அவரின் இயக்கத்தவர் மட்டுமின்றி எல்லோருமே அழைக்கும் அளவுக்கு அவர் மீது மக்களின் நேசம் பெருகியது. இதற்கெல்லாம் ‘மக்களால் நான் மக்களுக்காகவே நான்”” என்று அவர் கூறிய அந்த மந்திர சொற்களே காரணமாயிற்று.
எந்த சொந்த பந்தமும் இல்லாமல் தமிழ் மக்களே தனது சொந்தம் பந்தம் என்று அவர் அறிவிப்பு செய்யும் போதெல்லாம் தமிழக மக்கள் நெகிழ்ந்தனர். அவர் மீது தங்களின் அன்பை மேலும் சொரிந்தனர் என்பதே உண்மையாகும்.
அஇஅதிமுக என்னும் அரசியல் கட்சியை ஓர் இராணுவம் போல் உருவாக்கி, மிகுந்த கட்டுப்பாடு உள்ள மாபெரும் அரசியல் இயக்கமாக்கிய பெருமை அவருக்கு உண்டு. இது வரலாற்றுச் சாதனையாகும்.
முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கொள்கைகளில் வேறுபாடு காண்போர் உண்டு. ஆனால் அவர், எதையும் ஆழமாக அறிந்து, துல்லியமாக பேசி, வன்மையோடு சாதிக்கும் திறன் பெற்றவர்; துணிச்சலுக்கு உதாரணமானவர்; தொண்டுக்கு முன்னுரிமை தந்தவர்; எதிர்ப்பு மழையாக வந்தாலும் தன் நிலையில் குழையாதவர் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்வர் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.
எல்லோருமே மரணத்துக்குச் சரணமடைய வேண்டியவர்களே. நேற்று இருந்த ஒருவர் இன்றைக்கு இல்லாமல் போவதுதான் இயற்கையின் நியதி. புறநானூறு பாடல் கூறுகிறது
“”””மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர், தன்புகழ் நெறி தாம் மாய்ந்தனரே”. நிலையில்லா இந்த உலக வாழ்கையில் தன் புகழை நிலையாக நிற்கும் அளவுக்குச் சாதனை புரிந்து மறைந்தவர் வரிசையில் செல்வி ஜெயலலிதா அவர்களின் பேரும் இடம் பெற்றுள்ளது.
சரித்திரத்திற்குள் வந்தார். இன்று முதல் அவர் ஒரு சரித்திரமாகவே ஆகிவிட்டார். அவரின் ஆன்ம சாந்திக்கு இறையருள் துணை நிற்குமாக.
இவ்வாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
———————————————————————————————————————————————————————————
மறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் உடல் பொது மக்களின் பார்வைக்காக சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மாநிலபொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., மாநிலச் செயலாளர் கே.எம். நிஜாமுதீன், மாணவர் பேரவை செயலாளர் பழவை அன்சாரி உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சென்று தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், அ.இ. அ.திமு.க. நிர்வாகிகளை சந்தித்து ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.
முன்பு காலை செய்தியாளர்களிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் பேசிய போது குறிப்பிட்டதாவது,
தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பாகும். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
அவர் துணிச்சல் மிக்கவர், எதையும்மன தைரியத்தோடு எதிர்கொள்ளும் ஆற்றல் பெற்றவர். தனக்கு எது சரி என்று தெரிகிறதோ, அதை தைரியத்தோடு செய்யக்கூடியவர். தவறு என்றால் துணிந்து புறந்தள்ளக்கூடியவர்.
முஸ்லிம் சமுதாயத்தின் தனிப்பெரும் தலைவர் காயிதெ மில்லத் எம். முஹம்மது இஸ்மாயில் சாஹிபின் தியாகத்தை போற்றும் வகையில் அவரது நூற்றாண்டு விழாவை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 1995-ம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அரசின் சார்பில் விழா எடுத்து பெருமை சேர்த்ததை இந்த நேரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நன்றியுடன் நினைவு கூர்ந்து ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. கூறினார்.
தகவல் : ஏ.ஆர்.சேக்முகம்மது, தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்