இன்று டிசம்பர் 6 ஆம் நாள். ஆம் ! 24 ஆண்டுகளுக்கு முன்னாள் அயோத்தியில் நிலைபெற்றிருந்த பாபர் மசூதியை தருக்கர்களால் தகர்த்தெறிந்த கருப்பு நாள்.
இந்தியாவின் இறையாண்மை , மக்களாட்சி தத்துவம் , சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமை இவை அத்தனைக்கும் எதிராக எதிரிகளால் யுத்தம் தொடுக்கப்பட்ட நாள் .
ஆம்! யுத்தத்தில் எதிரிகள் வெற்றி அடைந்திருக்கலாம் அது தற்காலியமானதே ! நாம் இன்னும் களத்தை இழக்க வில்லை, காலம் இருக்கிறது என்பதை நினைவூட்டுகின்ற நாள் தான் இது.
அக்கிரமங்களுக்கு கிடைக்கும் வெற்றி நிரந்தரமானது அல்ல என்பதும், அநீதி விளைவிக்கும் ஆதிக்க சக்திகள், வரலாற்றின் குப்பைத்தொட்டியில் வீசப்பட்டுள்ளார்கள் என்பதும் தான் உலக வரலாறு சொல்லும் உண்மையாகும்.
உலகத்தில் இறைவனை வணங்குவதற்குரிய முதல் இறை இல்லமான புனித கஃபாவை சுற்றி 300 க்கும் மேற்பட்ட இணை வைப்பு சின்னங்களான சிலைகள் காட்சி அளித்தன என்பதும் , அச்சின்னங்களின் காப்பகமாக கஃபாவின் வளாகம் பல்லாண்டு காலமாக விளங்கியது என்பதும் உண்மை .
இருப்பினும், ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டில் இறைத்தூதர் பெருமானார் (ஸல் ) தலைமையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோழர்களை உள்ளடக்கிய மகத்தான படை வரிசை மக்க நகருக்குள் நுழைந்து , கத்தியின்றி ரத்திமின்றி கடும் பகையை வென்ற அந்த பொழுதில், கஃபாவை சுற்றி இருந்த பெரும்பாலான சிலைகள் அப்புறப்படுத்தப்பட்டது என்பதும் ,
ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டு பெருமானாரின் உத்தரவை ஏற்று , வீரத்தின் விளை நிலமாம் ஹழ்ரத் அலி ரலி அவர்கள் எஞ்சி இருந்த சிலைகளை அகற்றினார்கள் என்பதும் வரலாற்றின் ஏடுகளில் வைரமணி வரிகளாக மிளிர்கிறது.
இந்த வரலாற்று உண்மை நம்மிடையே நம்பிக்கையை நிலவ செய்யும் மிகச் சிறந்த ஒன்றாகும்.
ஆம்! ஒரு நாள் வரும் . பாபர் மசூதி நிலை பெற்றிருந்த இடத்தில் நாம் தலை வைத்து இறைவனை வணங்கும் ஆலையம் மீண்டும் எழும் . இன்ஷா அல்லாஹ் .அந்த நாளை நாம் காண்போம் . அதற்கு நாம் சாட்சி ஆவோம்.
யானை போன்று அவர்களெனில் நாம் எதற்கு அஞ்சனும்
அபாபீல் பறவைகளாய் ஆகி ஒன்று சேருவோம்
ஊனமிலா ஈமானின் உறுதியினைக் காட்டுவோம்
வல்லிறையோன் பேரருளால் வெற்றியினை ஈட்டுவோம்.
என்ற காயல் பிறைக்கொடியான், கவிஞர் மஹ்மூது ஹுசைன் அவர்களின் கவிதை வரிகளை நினைவு கூறுவோம். இறையோன் அருள் நம் அனைவர் மீதும் நிலவுமாக .