இரு தினங்களுக்கு முன்பு…
அதிகாலை வேளையில் ஐயப்பன் கோவில் பிரார்த்தனை முடிந்து கிளம்பும் போது, நண்பர் ஒருவர் ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்தார்.
அது இஸ்லாமியர்கள் ஏற்பாடு செய்திருக்கும் மழை வெள்ளம் முன்னெச்சரிக்கை கலந்தாய்வுக் கூட்டம்.
அங்கு என்னை முதலில் ஆச்சர்யத்திற்கு ஆட்படுத்தியது… வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், தமிழக அரசு மற்றும் மாநகராட்சி இரண்டாம் நிலை அதிகாரிகளின் பெரும் பங்கேற்புகள் !
சுமார் 1000 இளைஞர்கள்…! பெரும்பாலானோர் தாடி, குல்லாவுடன்… அரசு அதிகாரிகளுக்கு அடுத்த வரிசையில் அமர்ந்தோம்.
நிகழ்ச்சி தொடங்கியது…குர்ஆன் வசனம் ஓதினர், அடுத்தது ‘தமிழ்த்தாய் வாழ்த்து’. வரவேற்பு, பாராட்டு, வாழ்த்துரை எதுவுமின்றி நேரடியாக விசயத்திற்கு வந்தனர்.
மீண்டும் பெருவெள்ளம் வந்தால் என்ன செய்வது ? அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன… ஆச்சர்யத்தில் உறைந்து தான் போனேன் !!
ஆம்.
1. மீட்பு குழு – தன்னார்வலர்கள், மீட்பு உபகரணங்கள், மீனவ நண்பர்களின் படகுகளின் எண்ணிக்கைகள், மீட்டபின் தங்கவைக்கும் இடங்கள் என ஏரியாவாரியாக தெரிவித்தனர்.
2. மருத்துவக் குழு – ஆண், பெண் மருத்துவர்கள் விபரம், மருத்துவமணை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் நிலை விபரங்கள், குழந்தைகள் மருத்துவத்திற்கு தனி ஏற்பாடு, மருந்துவகைகள், இரத்தக் கொடையாளர்கள் போன்றவற்றைத் தெளிவாக எடுத்துரைத்தனர்.
3. அறிவியல் குழு – எங்கு எப்போது எவ்வளவு அளவு மழை பெய்யும், ஏரிகளின் கொள்ளளவு, எவ்வளவு மழை பெய்தால் ஏரிகளில் எவ்வளவு தண்ணீர் திறப்பார்கள், வெள்ளம் வந்தால் முதலில் எந்த ஏரியா பாதிக்கப்படும், நீரோட்டம் எந்தப் பகுதிகளில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை விலாவாரியாக அலசினார்கள்.
4. பொருளாதார குழு – இத்தகைய பணிக்குத் தேவைப்படும் பொருளாதாரம் எவ்வளவு, எவ்வாறு ஏற்பாடு செய்துள்ளார்கள்… அரிசிகடை, மளிகை கடை, காய்கரிகடை, சமையல் நிபுணர்கள், பால், தண்ணீர், பிரட், பிஸ்கட் போன்ற அத்தியாவசியப் பொருள்களின் ஏற்பாடுகள் குறித்து விளக்கினார்கள்.
அங்கு வந்திருந்த அனைத்து அரசு தரப்பு அதிகாரிகளிடமும் அவர்களின் ஏற்பாடுகளின் சந்தேகம் குறித்த தெளிவான ஆலோசனைகளை கேட்டு அறிந்துகொண்டனர்…
இறுதியாக நடந்த நிகழ்வுகள் தான் மனதை அதிர வைத்தது…
ஆம்.
அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து வைத்த பின்னரும்… முடிவில் அவர்கள் இறைவனிடத்தில் ஓர் ஆத்மார்த்த பிரார்த்தனை..
அதில் சில வரிகள் –
“யா அல்லாஹ் ! தாங்க முடியாத பேராபத்துகளைக் கொண்டு எம்மக்களை சோதித்து விடாதே… நாங்கள் உன்னையே நம்புகின்றோம், உன்னிடமே பாதுகாவல் தேடுகின்றோம்… ஆமீன் !”
அதிகாரிகள் உட்பட நாங்கள் அனைவரும் சற்று அதிர்ந்து தான் போனோம்.. கண்கள் கலங்கி விட்டது… இந்தப் பணிக்கு இறைவன் நிச்சயம் துணை நிற்பான் என வாழ்த்தினோம்.
இறுதியாக… ‘தேசிய கீதம்’ !!!
அடுத்ததாக உணவு –
கார்த்திகை மாதம் பெரும்பாலானோர் சாமிக்கு மாலை போட்டிருப்பார்கள் என்பதால் அனைவருக்கும் சுத்த சைவ உணவு தான் ஏற்பாடு செய்துள்ளதாக அவர்கள் கூறியதால்…
அனைவரும் சாப்பிட சம்மதித்தோம். அவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து…ஒரு குழு எங்களுக்கு உணவு பரிமாறியது, மற்றொரு குழு கடமையான தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்தது.
நாங்கள் சாப்பிட்டு முடிந்ததும்… இந்தக் குழுவினரும் தொழுகையை நிறைவேற்றிய பிறகு அவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டார்கள்…
இந்நாட்டின் விடுதலைக்காக போராடி வென்ற ஓர் உன்னத சமுதாயத்தின் வாரிசுகளை சந்தித்த மகிழ்ச்சியோடு விடைபெற்றோம்…!!!
இத்தகைய தேசபக்தியாளர்களின் பணிகள் சிறக்கட்டும்.. வாழ்த்துவோம் !
‘பதிவு – ராஜகோபாலன்.’
வாட்சப் மூலம் தகவல் : அஹமது ஷாஹுல் ஹமீது