காயல்பட்டினத்தில் உள்ள LKS குடும்பத்தைச் சேர்ந்த, ஹாஜி S. இம்தியாஸ் அஹமது . இவர் நமது இணைய நிறுவனர் மனிதநேயர் அல்ஹாஜ் S. அக்பர்ஷா அவர்களின் உடன் பிறந்த இளைய சகோதரர் ஆவார்.
சில திங்களுக்கு முன்னால் சகோதரர் இம்தியாஸ் அவர்கள், Kayal Development Trust என்ற ஒரு அமைப்பினை இணைய குழுமத்தின்(Whatsapp Group) மூலமாக அறிமுகம் செய்தார்.
சூரிய சக்தியின் மூலம் மின்சாரத்தை பெறுகின்ற அவசியத்தையும், அதன் பயன்பாட்டையும், அதனால் உருவாகும் பொருளாதார சேமிப்பையும் வலியுறுத்தி அக்குழுமத்தின் மூலம் கருத்துக் பரிமாற்றங்களுக்கு வழிவகை செய்தார். அக்குழுமத்தில் பலர் இணைந்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.
இந்நிலையில், கருத்து பரிமாற்றத்துடன் நின்று விடாமல் அதன் பயன்பாட்டினை செயல்வடிவம் மூலம் மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் முயற்சியினை மேற்கொண்டார் . அதன் விளைவாக, காயல் நகரில் இன்று 8 இடங்களில் துவக்கமாக சூரிய சக்தியின் மூலம் மின் விளக்குகள் எரிகின்ற காட்சிகளை காண்கின்றோம்.
ஆம், பலரது ஆலோசனைகளை பெற்றதோடு தனது சகோதரர் ஹாஜி S. அக்பர்ஷா உள்ளிட்ட இக்குழுமத்தின் சிலரது பங்களிப்பையும் (Sponsership) பெற்று, தனது பங்களிப்பையும் இணைத்ததின் விளைவாக, இன்று காயல் நகருக்கு 8 சூரிய சக்தி விளக்குகள் (solar light) அர்ப்பணம் செய்யப்பட்டுள்ளன.
25-08-2016 வியாழக்கிழமை முன்னிரவு 7 மணி முதல் 8.30 மணி வரை நடைபெற்ற , அவ்விளக்குகளை எரியச் செய்த துவக்க நிகழ்ச்சிகளை கீழே வழங்கியுள்ளோம்.
மஸ்ஜித் மீக்காயில் பள்ளி:
இப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விளக்கினை அல்ஹாஜ் V.N.S. முஹம்மது முஹைதீன் அவர்கள் எரியச் செய்து இயக்கி வைத்தார் .
அருணாசலபுரம்:
இப்பகுதியில் உள்ள தேசிய பள்ளிக்கூடம் அருகில் அமையப்பெற்றுள்ள விளக்கினை, அப்பகுதி பிரமுகர் திரு திருத்துவராஜ் அவர்களும் , ஒன்றாவது வார்டு கவுன்சிலர் ஜனாப் S. அஸ்ரப் அவர்களும் இணைந்து எரியச் செய்து இயக்கி வைத்தார்கள்.
சிறுப் பள்ளி :
இப்பள்ளி வளாகத்தில் உள்ள மன்பவுல் பரக்காத் சங்கத்திற்கு அருகில் அமையப்பெற்றுள்ள விளக்கினை, அல்ஹாஜ் சாளை முஹம்மது அப்துல் காதிர் அவர்கள் எரியச் செய்து இயக்கி வைத்தார் .
அல்ஜாமியுல் அஜ்ஹர் :
இப்பள்ளிக்கு அருகில் அமைக்கப்பெற்றுள்ள விளக்கினை பள்ளியின் நிர்வாகி அல்ஹாஜ் S.O. அபுல்ஹசன் கலாமி எரியச் செய்து இயக்கி வைத்தார் .
ஓடக்கரை :
இப்பகுதியில் உள்ள கோவிலுக்கு அருகில் அமைக்கப்பெற்றுள்ள விளக்கினை அப்பகுதியைச் சேர்ந்த பிரமுகர் திரு சேகர் , திரு ஓடை செல்வம் ஆகியோர் இணைந்து எரியச் செய்து இயக்கி வைத்தார்கள்.
பத்திரப் பதிவு அலுவலகம் :
இந்த அலுவலகத்திற்கு அருகில் உள்ள விளக்கினை அல்ஹாஜ் லேண்ட்மார்க் ராவன்னா அபுல்ஹசன் அவர்கள் எரியச் செய்து இயக்கி வைத்தார்.
L.F.Road :
L.F.ரோடு மத்திய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விளக்கினை அல்ஹாஜ் விளக்கு அமீன் அவர்கள் எரியச் செய்து இயக்கி வைத்தார்.
ஹாஜி அப்பா தைக்கா
இப்பள்ளிக்கு அருகிலும் ஒரு விளக்கு அமையப்பெற்று எரிகிறது. தவிர்க்க முடியாத காரணத்தினால் இங்கு மட்டும் துவக்க நிகழ்ச்சி நடைபெற வில்லை.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை இக்குழுமத்தில் உள்ள அல்ஹாஜ் லேண்ட்மார்க் ராவன்னா அபுல்ஹசன் அவர்கள் செய்து இருந்தார் . அனைத்து நிகழ்ச்சிகளிலும் பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
———————————————————————————————————————————————————————————–
பொறுப்பாளர் விளக்கம் :
நிகழ்ச்சி நிறைவுற்றதும் நமது இணையத்திற்காக Kayal Development Trust குழுமத்தின் பொறுப்பாளர் (admin) சகோதரர் ஹாஜி இம்தியாஸ் அஹமது அவர்கள் சில விளக்கங்களை பகிர்ந்துக் கொண்டார்.
சூரிய கதிர் மூலமாக கிடைக்கும் மின் சக்தியின் பயன்பாடு இன்று உலகளவில் அதிகரித்து வருவதாகவும், ஜப்பான் போன்ற நாடுகளில் சூரிய சக்தியின் மூலமாகவே விமானத்தை இயக்க ஆய்வு நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்ட அவர், கேரளாவின் கொச்சி விமானத்தளம் முழுமைக்கும் பயன்படும் மின் சக்தி சூரிய கதிர்களால் பெறப்படுவையே என குறிப்பிட்டார்.
காயல்பட்டினத்தில் இனி வரும்காலத்தில் இச்சக்தியின் மூலம் அமைக்கப்படும் விளக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்குமானால் , உள்ளாட்சி அமைப்பின் மூலமாக மின்வாரியத்திற்கு செலுத்தும் கட்டணம் பெருமளவு குறையும் என எடுத்துரைத்தார்.
இச்சக்தியால் எரியும் விளக்குகளால் எவ்வித மாசும்(Pollution) ஏற்படுவதில்லை என குறிப்பிட்ட அவர் , நமதூரில் முடுக்கு போன்ற பகுதிகளிலும் பல குடும்பங்கள் சேர்ந்து இதை அமைக்கலாம் என்றும் ஆலோசனை வழங்கினார்.
தற்போது அமைக்கப்பட்டுள்ள 8 விளக்குகளுக்கும் சூரிய சக்தியை சேமிக்கும் மின் களம் (battery ) போன்றவைகளுக்கும் உள்ள பாதுகாப்பு உறுதி படுத்தப் படுமானால் , நம்பிக்கையுடன் வருங்காலத்தில் இன்னும் அதிகமான இடங்களில் இந்த விளக்குகளை தங்கள் குழுமம் அமைக்கும் என உறுதி அளித்தார்.
6 மாதத்திற்கு ஒரு முறை எளிதான பராமரிப்பு மூலமாகவும், அவ்வப்போது சுத்தம் செய்வதின் மூலமாகவும், இதை எளிதாக கையாள முடியும் எனவும் நம்பிக்கை அளித்தார்.
காயல் நகர மக்கள் தாமாக முன்வந்து விளக்குகளுக்கு பொறுப்பேற்க (Sponsership) வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இப்பணியை தாங்கள் துவக்கி வழிக்காட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மொத்தத்தில் எவ்வித ஆரவாரமும் இன்றி, விளம்பர வெளிச்சம் இன்றி, சத்தம் இல்லாமல் ஒரு சாதனைக்கு வித்தூண்டியுள்ள Kayal development trust குழுமத்தினை மனதார பாராட்டுகிறோம். அவர்கள் இலட்சியக்கனவு நினைவாக வாழ்த்துகிறோம்.
நிலைப்படம் :kayalconnection க்காக வீனஸ் அய்யப்பன்
தகவல்: முதன்மைச் செய்தி முகவர், kayalconnection.com