காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் திரு M. காந்திராஜன் அவர்கள் 22-08-2016 இன்று திங்கட்கிழமை , விருதுநகர் மாவட்டம் திருத்தங்கள் நகராட்சியின் ஆணையராக மாற்றலாகி சென்றுள்ளார்.
இரண்டாம் நிலை நகராட்சியான காயல்பட்டினத்தில் இருந்து முதல் நிலை நகராட்சியான திருத்தங்கள் நகருக்கு பதவி உயர்வுடன் நண்பகல் 1.30 மணியளவில் நமதூரில் இருந்து மாற்றலாகி வாகனத்தில் செல்லும் போது, தகவல் அறிந்து நாம் கைபேசியில் அவரைத் தொடர்புக் கொண்டோம்.
நம்முடன் பல்வேறு தகவல்களை அவர் பரிமாறிக் கொண்டார். பல மாதங்களுக்கு முன்னரே, பதவி உயர்வுடன் இட மாறும் வாய்ப்பு அவருக்கு இருந்ததாகவும் , பயோ கேஸ் போன்ற முக்கியத் திட்டங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட இடையூறுகளை களையும் பொறுப்பு தன்னிடம் இருந்ததால் அது போன்ற பணிகள் நிறைவுற்றப் பிறகு இடம் மாறி செல்லுமாறு மிக முக்கியமானவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே தான் பொறுமை காத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், காயல் நகராட்சிக்கு புதிய ஆணையர் நியமிக்கப் படும் வரை , தற்காலிக பொறுப்பாளராக (Incharge) வந்து போக அவர் பணிக்கப்பட்டதாகவும், ஆனால் அவர் அதை முழு மனதோடு ஏற்று கொள்ளவில்லை என்றும் , அது அவரது பரிசீலனையில் உள்ளதாகவும் அவரது பேச்சு மூலம் அறிய முடிந்தது.
காயல்பட்டினம் நகராட்சியில் அவருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்ற சாட்டுகள் குறித்து அவ்வப்போது நாம் கேட்டு கொண்டதற்கு இணங்க, அவர் தந்த விளக்கங்களை நமது இணையம் செய்தியாக வெளியிட்டிருந்த போதிலும் , சமீபக்கால விவாதத்திற்குரிய விஷயங்கள் குறித்து அவரிடம் தற்போது வினவிய போது , அவர் மனம் திறந்து நம்மிடம் பகிர்ந்து கொண்ட பல்வேறு தகவல்களை இன்ஷா அல்லாஹ் விரைவில் தனிச் செய்தியாக வெளியிடுகிறோம்.
நிலைப்பட உதவி : நகராட்சி வட்டாரம்