காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் அடுத்த மாதம் 10ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. இதுகுறித்து, அதன் செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீது வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம், இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 10.07.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 10:15 மணிக்கு,
காயல்பட்டினம் கீழ நெய்னா தெருவில் – இக்ரஃ கல்விச் சங்கம் எதிரிலுள்ள கலீஃபா அப்பா தைக்கா வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இக்ராஃவின் ஆண்டறிக்கை தாக்கல், 2015-16 பருவத்திற்கான வரவு-செலவு கணக்கு தாக்கல், 2015-16 பருவத்திற்கான பட்ஜெட் தாக்கல், புதிய உறுப்பினர்களை அங்கீகரித்தல், அடுத்த பருவத்திற்கான புதிய நிர்வாகக் குழுவை தேர்ந்தெடுத்தல், மற்றும் எதிர்கால திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய பொருள்கள் குறித்து இக்கூட்டத்தில் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்படவுள்ளது.
இக்கூட்டத்தில் பங்கேற்கக் கோரி, இக்ராஃவின் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் இ மெயில் மூலமும்,கடிதங்கள் அஞ்சல் மூலமும், நேரடியாகவும் முறைப்படி தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எனினும் வெளிநாடுகள் மற்றும் வெளியூர்களிலிருந்து நோன்புப் பெருநாள் விடுமுறையில் தாயகம் வரும் இக்ராஃ உறுப்பினர்கள், மற்றும் காயல் நல மன்ற நிர்வாகிகள் இச்செய்தியையே அழைப்பாக ஏற்று, அவசியம் கூட்டத்தில் பங்கேற்று நல்ல பல ஆலோசனைகளை வழங்கிடுமாறும்,
அவ்வாறு யாரும் தாயகம் வந்திருப்பதை அறிந்தவர்கள், அவர்களுக்கு இத்தகவலைத் தெரிவித்து, கூட்டத்தில் கலந்துகொள்ளச் செய்யுமாறும் அன்புடன் வேண்டுகிறேன்.
இவ்வாறு, இக்ராஃ கல்விச் சங்க செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீது தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்: N.S.E.மஹ்மூது, மக்கள் தொடர்பாளர், இக்ராஃ கல்விச் சங்கம், காயல்பட்டினம்.