பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் காயல் எல்.கே மெட்ரிக் பள்ளியில் முதல் இடம் பெற்ற K. பரீதா என்ற மாணவி மாநில அளவில் நான்காம் இடத்தை பெற்றுள்ளார் . இவர் மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தைப் பெற்றமைக்காக இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் சாதனையாளர்களுடன் இணைந்து பாராட்டு விருது பெற்றுள்ளார்.
பாடவாரியாக அவரது மதிப்பெண்கள் விபரம்:- தமிழ்- 99 ஆங்கிலம் – 99 கணிதம் – 100 அறிவியல் – 99 சமூக அறிவியல் – 99. மொத்தம் – 500க்கு 496 மதிப்பெண்கள்.
தனது சாதனை குறித்து, மாணவி கே.ஃபரீதா கூறியதாவது:-
எனது தந்தையின் தந்தை (பாட்டனார்) டாக்டர் அபுல்ஹஸன் அவர்கள், காயல்பட்டினத்தின் மூத்த மருத்துவர். தற்போது 77 வயதை அடைந்த நிலையிலும், இறையருளால் அவர் மருத்துவ சேவையாற்றி வருகிறார்.
சுகவீனமுற்ற நிலையில் நள்ளிரவில் தன்னைத் தேடி வீட்டுக்கு எந்த நோயாளிகள் வந்தாலும், இன்முகத்துடன் மருத்துவ சேவையாற்றி வருகிறார். அவர்களது இந்தப் பண்பு என்னை மிகவும் கவர்ந்ததால், “நானும் மருத்துவராகி, பாட்டனாரைப் போல சேவை செய்ய வேண்டும்” என்ற எண்ணம் என் ஆழ்மனதில் பதிந்துவிட்டது.
எனது ஆரம்பக் கல்வி முதல் இன்று பத்தாம் வகுப்பு வரையிலும் பெரும்பாலும் முதல் மதிப்பெண்ணும், எப்போதாவது இரண்டாவது மதிப்பெண்ணும் பெறுவது என் வழமை.
இன்று தூத்துக்குடி மாவட்ட அளவில் மூன்றாமிடம் பெற்றமைக்காக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு. ம.ரவிக்குமார் என்னையும், மாவட்ட அளவில் முதல் மூன்றிடங்களைப் பெற்ற மாணவ-மாணவியரையும் இன்று காலையில் அழைத்து, வாழ்த்திப் பாராட்டி, விருது வழங்கி கவுரவித்தார்.
இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளதோடு, இன்னும் கடுமையாக உழைத்துப் படிக்க வேண்டும் என்ற உந்துதலையும் ஏற்படுத்தியிருக்கிறது.
நல்ல மதிப்பெண்ணைத் தொடர்ந்து பெற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு என்றுமே உண்டு என்றாலும், மாவட்ட அளவில் மூன்றாமிடம் பெறுவேன் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை.
எனது இச்சாதனைக்கு, என் பள்ளியின் தலைமையாசிரியை திருமதி. மீனா சேகர், வகுப்பாசிரியை திருமதி. அந்தோணியம்மாள் ஆகியோர் பள்ளியிலும், எனது தாய் வழி பாட்டனார் மரியாதைக்குரிய ஜலால் ஹாஜியார், என் அன்புத் தாயார் ஜெ.ஹவ்வா ஆகியோர் என் வீட்டில் எனக்குத் தொடர்ந்து அளித்து வந்த அரவணைப்பும், ஆதரவும், ஊக்கமுமே என்னை இன்று சாதனையாளராக்கியிருக்கிறது.
இதற்காக, எல்லாம்வல்ல இறைவனுக்கும், ஊக்கமளித்த இவர்கள் யாவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேல்நிலைக் கல்வியில் முதல் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்துப் பயின்று, ப்ளஸ் 2 தேர்வில் சிறந்த மதிப்பெண்ணைப் பெற்று, மெரிட்டில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பயின்று, சிறந்த மருத்துவராகி, என்னாலியன்ற சேவைகளை எல்லா மக்களுக்கும் – குறிப்பாக ஏழை – எளிய மக்களுக்கு செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்குள்ளது. இதற்கு இறைவன் அருள் புரிய நீங்கள் யாவரும் எனக்காகப் பிரார்த்திக்க வேண்டுகிறேன். இவ்வாறு மாணவி கே.ஃபரீதா கூறினார்.
நிலைப்படம் : Tutyonline.com
மாணவியின் நேர்காணல் தகவல் உதவி : S.K. சாலிஹ்