தி இந்து தமிழ் நாளிதழ் 10-02-2016 இதழில் வெளிவந்த வெ. சந்திரமோகன் எழுதிய கட்டுரை ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட சிலப் பகுதிகளை கீழே வழங்கியுள்ளோம் .
மாற்று அரசியலை முன்வைக்கும் கூட்டணி குறித்து ஓர் அலசல்
பிரதான கட்சிகளான திமுக, அதிமுகவே இன்றும் தேர்தல் களத்தில் முழுமையாக இறங்காத நிலையில், முழுமூச்சில் பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கிறது மக்கள் நலக் கூட்டணி.
மதிமுக தலைவர் வைகோ தலைமையிலான இக்கூட்டணியில் பங்கேற்றிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் மேற்கொண்டிருக்கும் பிரச்சாரத்தில் உற்சாகம் மிளிர்கிறது.
சமீபத்தில் மதுரையில் நடந்த மக்கள் நலக் கூட்டணி மாநாட்டில் திரண்ட கூட்டமும், மாநாட்டில் தலைவர்கள் பேசிய பேச்சுக்களும் மக்கள் கவனத்தை மக்கள் நலக் கூட்டணியின் மீது திருப்பியிருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், தமிழகத்தின் மிகப் பெரிய கட்சிகளான திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணியால் உருக்கொள்ள முடியுமா?
கூட்டணி பலமா?
புதுச்சேரி பிரச்சாரக் கூட்டத்தில், மேடையில் அமர்ந் திருக்கும் தலைவர்களைப் பார்த்துப் புன்னகைத்தவாறே, தோள் துண்டைச் சரிசெய்துகொண்டு, “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் …” என்று வைகோ பேசத் தொடங்குகிறார். “கனவுகள் ஒரு நாள் நனவாகும், அறிவாசான் பெரியார் பிறந்த மண்ணில் அது நனவாகும்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை முன்னிறுத்தி அவர் பேசும்போது கைத்தட்டல் பறக்கிறது.
மதுரை மாநாட்டில், “பூட்டிய இரும்புக் கூட்டின் கதவு திறந்தது. சிறுத்தையே வெளியில் வா” என்று திருமாவளவனைக் குறிப்பிட்டு அவர் பேசியபோதும் உற்சாகக் குரல்கள் அதை வரவேற்றன. கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேசியத் தலைவர்களே ஆச்சரியப்படும் வகையில் மதுரை மாநாட்டுக்கும், புதுச்சேரி பிரச்சாரக் கூட்டத்துக்கும் வரவேற்பு கிடைத்தது.
காத்திருக்கும் சவால்கள்
மக்கள் நலக் கூட்டணியில் இருக்கும் நான்கு கட்சிகளும், இதற்கு முன் வெவ்வேறு தருணங்களில் திமுக, அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தவைதான். அக்கட்சிகளுக்கு மாற்றாகக் களமிறங்கியிருக்கும் சூழலில், இக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கென்று தனித்தனியாக இருக்கும் ஓட்டு வங்கிகளின் சதவீதம் மட்டும் வெற்றிக்குக் கைகொடுக்காது என்பது தெரிந்த விஷயம்தான்.
தவிர, கூட்டணித் தலைவர்களின் தனிப்பட்ட செல்வாக்கும் கேள்விக்குரிய விஷயம்தான். எனினும், எங்களில் ஒருவர் மீதேனும் ஊழல் குற்றச்சாட்டுகள் உண்டா என்று வைகோ முதல் திருமாவளவன் வரை கேட்பது மக்களிடம் எடுபடுகிறது.
இன்னும் கடைசிக் கிராமம் வரை அமைப்பு ரீதியான கட்டமைப்பின்மை, பண பலம் இல்லாதது, ஊடக பலமின்மை என்று பல காரணிகளில் ம.ந.கூ. கீழே இருந்தாலும், மக்கள் இக்கூட்டணியைக் கவனிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பதே முக்கியச் செய்தி.
கூட்டணி நிலைக்குமா?
ஊழல், முறைகேடு போன்ற குற்றச்சாட்டுகளும் வழக்குகளும் திமுக, அதிமுகவை நிழலாகத் தொடரும் நிலையில், மாற்று அரசியல் எனும் முழக்கத்தை இக்கூட்டணி முன்னிறுத்துவது கவனம் பெற்றிருக்கிறது.
1967-லிருந்து தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்புகளில் இருந்துவரும் இரு பெரும் கட்சிகளின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்திருக்கும் மக்களில் ஒரு பகுதியினர் இக்கூட்டணியை நோக்கி நகர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.
இன்றைய தேதியில், மக்கள் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுப்பதிலிருந்து, தங்கள் அளவில் தெளிவான செயல் திட்டங்களை அறிவிப்பது வரை, தேர்தல் பயணத்தில் முன்கூட்டி முன்னேறும் இக்கூட்டணி, இத்தேர்தலில் அடையும் எந்த வெற்றியும் தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் 10-02-2016