காயல்பட்டினம் பப்பரப்பள்ளிப் பகுதியில், நகரில் சேரும் அனைத்து குப்பைகளும் கொட்டப்பட்டு வரும் நிலையில், குப்பைகள் அங்கு கொட்டப்படக் கூடாது என அப்பகுதியைச் சார்ந்தோர் போராட்டக்குழு அமைத்து போராடி வருகின்றனர்.
இக்குழுவினர் அண்மையில் நடத்தியப் போராட்டத்திற்குப் பின்னர், நகராட்சி அதிகாரிகளிடம் வட்டாட்சியர் முன்னிலையில் நடத்திய பேச்சு வார்த்தையின் முடிவில் , விரைவில் மாற்று இடம் குப்பைக் கொட்ட ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், 19-11-2015 செவ்வாய் பிற்பகல் 3 மணியளவில் ஆறுமுகநேரியில் இருந்து குப்பைக் கழிவுகளை கொட்டுவதற்கு பப்பரப்பள்ளிக்கு வந்த வாகனம் ஒன்று தடுத்து நிறுத்தப்பட்டு, நகராட்சியின் வசம் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து, இரத்தினப்புரியைச் சார்ந்தவரும் , போராட்டக்குழுவில் அங்கம் வகிப்பவரும் தி மு க பிரமுகருமான A. பன்னீர் செல்வம் நம்மிடம் தெரிவிக்கையில்,
தங்களது ஊரில் அன்று மரணம் அடைந்த ஒரு மூதாட்டியின் நல்லடக்கத்திற்காக மயானம் வந்து திரும்பியப் போது, கோழிக் கழிவுகளை ஏற்றி வந்த வாகனம் ஒன்றைக் கண்டதாகவும் , அதை தடுத்து நிறுத்தியதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் இது பற்றி அவர் தெரிவிக்கையில், வாகன ஓட்டுனர் வாகன உரிமையாளருக்கு தகவல் கொடுத்ததின் பெயரில் அவர் சம்பவ இடத்திற்கு வந்து, தெரியாமல் வந்து விட்டதாகவும் , எனவே விட்டுவிடும் படி கேட்டு கொண்டதாகவும் , ஏற்கனவே இரு முறை இந்த வாகனம் எச்சரித்து அனுப்பப்பட்ட விபரத்தை அவரிடம் தெரிவித்து , அவரது கோரிக்கையை ஏற்க மறுத்ததாகவும் கூறினார் .
இந்நிகழ்வைத் தொடர்ந்து , போராட்டக் குழுவினர் சிலருக்கு தான் தகவல் தெரிவித்ததாகவும் , அவர்களில் அப்போது ஊரில் இருந்த மாஷா அல்லாஹ் தாவூத் , லரீப் உள்ளிட்ட அந்நேரத்தில் அங்கு வர வாய்ப்புள்ள சிலரும் , 13 ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் M.S. சம்சுதீன் அவர்களும் வருகைத் தந்தாகவும் தெரிவித்தார் .
மேலும், நகராட்சி சுகாதார ஆய்வாளருக்கு தகவல் தெரிவித்ததாகவும் , அந்நேரத்தில் அவர் வெளியூரில் இருந்ததாகவும், சுகாதாரத்துறையின் மேஸ்திரி லட்சுமியை சம்பவ இடத்திற்கு அவர் அனுப்பி வைத்ததாகவும் , அவருடன் வந்த இரு நகராட்சி ஊழியர்களில் ஒருவர் வாகனத்தை நகராட்சிக்கு ஓட்டிச் சென்றதாகவும் கூறினார்.
நகராட்சியில் நடந்தது என்ன?
இதுகுறித்து நகராட்சி வட்டாரத்தில் வினவிய போது, வாகன உரிமையாளரிடத்தில் இனிமேல் இதுபோன்ற நிகழ்வு இடம்பெறாது என்று எழுதி வாங்கப்பட்டதாகவும் , மீறி நடைபெற்றால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை செய்தும் , 2000 ரூபாய் அபராதம் விதித்து அவரிடம் வசூலிக்கப்பட்டதாகவும் நம்மிடம் தெரிவித்தனர்.
சிற்றூர்களில் வேலி தாண்டிய வெள்ளாடு என்ற சொல் வழக்கு உண்டு . அது போல் இது எல்லைத் தாண்டிய வாகனம் . இச்செயலுக்கு அபராதம் விதிக்கப்பட்டதும், வாகன உரிமையாளரிடம் எழுதி வாங்கியதும் மிகச் சரியானதே .
இருப்பினும், இந்த இடத்தில் குப்பைகள் தொடர்ந்து கொட்டப்படக் கூடாது என்பதற்காக , நகராட்சியால் தேர்வு செய்யப்பட்ட மிக ஒதுக்குப்புறமான இடத்திற்கு எதிரான நடவடிக்கைகளை , வெளிப்படையாக முன்னெடுக்கும் சிலரை எண்ணி வியப்படையாமலும், வேதனைப் படாமலும் இருக்க முடியவில்லை.
எல்லை தாண்டியது வாகன உரிமையாளரின் தவறென்றால், நம்மவர் சிலர் ஊரின் நன்மையை சிதைப்பது மட்டும் சரியாகுமா ? என்பதையும் நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டுகிறோம் .
ion.com
நிலைப்படம் மற்றும் தகவல் : முதன்மைச் செய்தி முகவர்kayalconnection.com
தகவலில் உதவி : A.பன்னீர் செல்வம் மற்றும் நகராட்சி வட்டாரங்கள்