காயல்பட்டினத்தில் அண்மையில் இடம்பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் கவன ஈர்ப்பு ஆரப்பாட்டத்தை தொடர்ந்து சிலரால் முஸ்லிம் லீக் இயக்கம் தரம் தாழ்ந்து விமர்சிக்கப் படுவதைக் கண்டித்தும், நியாயம் கேட்டும் தாய்லாந்து காயிதே மில்லத் பேரவையின் அமைப்பாளர் காயல் நகரைச் சேர்ந்த ஹாஜி வாவு M.M. சம்சுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையை கீழே வழங்கியுள்ளோம்.
அன்புள்ள காயல் மாநகர பொதுமக்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
காயல்பட்டினம் நகராட்சியை மையமாகக் கொண்டு நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளும், இணையதள விவாதங்களும் மிகுந்த மனவேதனையை தருகின்றன.
கடந்த காலத்தில் இந்நகர் பேருராட்சி தேர்தலை மையமாக்க் கொண்டு பிளவு பட்டிருந்த காரணத்தினால், இந்நகர் எவ்வளவு விளைவுகளையும், இழப்புகளையும் சந்தித்தது என்பதை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்வதற்கு வாய்ப்பு இல்லை.
இந்த சம்பவத்திற்கு பின்னர்தான், ஊரில் ஒன்று பட்ட முறையில் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற அனைவரும் ஒன்றிணைந்து முயற்சி மேற்கொண்டு அது செயல்படுத்தப்பட்டு வந்தது. துரதிஷ்டவசமாக கடந்த முறை போட்டி ஏற்படுத்தப்பட்டு சகோதரி ஆபிதா சேக் வெற்றியும் பெற்றார்.
கடந்த 4 ஆண்டு காலமாக நான் சார்ந்துள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நகராட்சி தலைவி அவர்களுக்கு எந்த ஒரு இடையூறும் செய்ததில்லை.
மேலும் அம்மையாரின் பணிகள் சிறப்பாக அமைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் நகரின் பிரமுகர்களை நகராட்சி தலைவி அவர்களோடு பலமுறை சந்திக்க ஏற்பாடு செய்து, அவர்களுக்கு உதவுவதற்கு 10 பெருந்தகைகளை கொண்ட குழுவையும் அமைத்து உடன்பாட்டையும் தயாரித்துக் கொடுத்தோம் ஆனால் அதை நகராட்சி தலைவி அவர்கள் ஏற்க விடாமல் சிலர் தடுத்து விட்டார்கள்.
அதற்குப் பிறகு நகராட்சியில் தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்டு கூட்டங்களை நடத்த முடியாத சூழ்நிலைகள் உருவாகின. இப்படிப்பட்ட நிலைமையில்தான் மாண்புமிகு. தமிழக அமைச்சர் திரு.சண்முகநாதன் அவர்கள் தலையிட்டு சுமுகமான சூழ்நிலையில் கூட்டம் நடத்த அறிவுரைகள் வழங்கினார். அதையும் நகராட்சி தலைவி அவர்கள் ஏற்கவில்லை.
இப்போதயை சூழ்நிலையில் தலைவி ஊரில் இருக்கும் போது துணைத் தலைவரை வைத்து கூட்டம் நடத்தலாமா ? அதை எதிர்த்து தானே தலைவி நீதிமன்றத்தை நாடியுள்ளார் என்று சிலர் நியாயம் பேசுகின்றனர்.
நகராட்சி பணிகள் ஏதுவும் நடைபெறவில்லையே ! மழையால் பாதிக்கப்பட்ட 43 சாலைப் பணிகள் முடக்கப்பட்டுள்ளதே என்று அவர்கள் சிந்திக்க தவறிவிட்டனர். இதனால் யாருக்கு பாதிப்பு இந்த ஊர்மக்களுக்கு இல்லையா?
இரண்டாவது குடிநீர் திட்டப் பணிகள் முடிக்கப்படாமல் அரைகுறையாக கிடக்கிறதே ! பல நாட்களுக்கு ஒருமுறை கூட ஒழுங்காக தண்ணீர் வரக்கூடிய சூழ்நிலை இல்லையே ! இந்த நிலையில் நகராட்சி தலைவியும் உறுப்பினர்களும் யுத்தம் நடத்திக் கொண்டிருந்தால் இந்த நகர் எப்படி உருப்படும் ?
இதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை போன்ற சமுதாய அமைப்பு கேட்காமல் யார் கேட்பது ? தற்போது குப்பைத் தட்டும் இடம் தனியார் நிலம் மட்டுமின்றி, அதனால் நிலத்தடி நீர் மாசுபட்டு, அதிலிருந்து எடுக்கப்படும் தண்ணீரால் ஆடு, மாடு இறைச்சி கழுவப்படுவதால் பயங்கர நோய் பரவுவதாக தெரிகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் முன்னாள் நகர்மன்றத் தலைவர் வாவு.செய்யது அப்தூர் ரஹ்மான் ஹாஜியார் 5.50 ஏக்கர் நிலத்தை அன்பளிப்பாக கொடுத்தால், மீதமுள்ள இடத்தை அதிக விலைக்கு விற்பதற்கு திட்டமிடுகிறார் என்று அவதூறு பரப்புகிறார்களே !
வெளிநாட்டிலிருந்த தன்னுடைய சொத்தை விற்று, இந்த ஊரில் லாப நோக்கின்றி கல்லூரியை தொடங்கிய அவரை இப்படித்தான் களங்கப்படுத்துவதா ?
இந்நகரை பொருத்த வரையில் கடந்த காலங்களில் நகருக்கு ஆக்கப்பூர்வமான பணிகளில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் செயல்பட்டு வந்துள்ளது. அதன் சமீப காலத்திய சாதனை ரயில்வே நிலைய சீரமைப்பு என்பது ஊர் அறிந்த ஒன்று.
கடந்த 1983-84-ல் DCW ரசாயனத் தொழிற்சாலையில் ஆபத்தான பிரிவுகள் வர இருந்ததை தடுத்த்து, முன்பு ரசயானத் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் சாகுபுரம் நகரியம் என்ற பெயரில் தனி ஊராக இயங்க இருந்த்தை தடுத்தது, இந்திய யூனியன் முஸ்லீக் என்பதை நன்றியுள்ள காயல் வாசிகள் மறகமாட்டார்கள்.
இதே DCWவை எதிர்த்து சென்னையிலுள்ள பசுமை தீர்ப்பாயத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சியில் பங்கேற்ற ஒரே அரசியல் கட்சி முஸ்லிம் லீக். அதற்கு பின்னர் தான் மற்ற இயக்கங்கள் களத்தில் இறங்கின. மேலும் டெல்லியில் முஸ்லிம் லீக் எம்.பி. அவர்கள்தான் இதற்கான பணியில் ஈடுபட்டார்.
இந்நகரில் பதற்றத்திற்கு காரணமாக இருந்த நடைபாதை ஆக்கிரமிப்பை சுமுகமாக அகற்றும் முயற்சியில் முன்ன்னியிலிருந்தது முஸ்லிம் லீக் என்பதை ஊர் அறியும்.
இந்த புனித இயக்கம் தான், வயிற்றில் வியாதிவந்த சிலருக்கு வாயு லீக்காக தெரிகிறது. இந்த ஊரைபற்றியே தெரியாமல் வெளிநாடுகளில் உட்கார்ந்து கொண்டு, ஏசி அறையில் கணினியை மட்டுமே கையான்டு அநாகரிகமாக விமர்சனம் செய்யக் கூடியவர்களுக்கு முஸ்லீம் லீக்கின் தியாக வரலாறுகள் தெரியாது. முதலில் அதை தெரிந்து கொண்டு இந்த இயக்கத்தைப் பற்றி, இந்த இயக்கத்தின் தொண்டர்களைப் பற்றி எழுதுங்கள்.
எங்கள் இயக்கத்தின் நடவடிக்கைகளில் தவறு கண்டால் அதை தாரளமாக விமர்சியுங்கள். ஆனால் அந்த இயக்கத்தையே அவமதிப்பதையும், பிற இயக்கங்களில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் எங்கள் போரட்டங்களை கொச்சைப் படுத்துவதையும், முழுக்க முழுக்க காயல்பட்டினம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு வெளியூர்கார்களை வைத்து அவதூராக எழுத வைத்து அழகு பார்ப்பதையும், யார் என்ன எழுதினாலும் அதை தணிக்கை செய்யாமல் வெளியிட்டு மகிழ்வதும் எந்த வகையில் நியாயம் ? இனிமேலாவது நாகரிகத்தை கடைபிடியுங்கள் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள்.
இவ்வாறு தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல் : மின்னஞ்சல்