இச்செய்தியின் இறுதியில் மனித மிருகங்கள் மழலைக்கு மது வழங்கி மகிழும் அசைபடக் காட்சி இடம் பெற்றுள்ளது
குழந்தைக்கு மது வழங்கும் மனித மிருகங்கள்
திருவண்ணாமலை பகுதியில் பிஞ்சு குழந்தைக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து குடிக்க வைத்து குடிகார மிருகங்கள் மகிழும் வீடியோ சமூகவலைதளங்களில் தீயாக பரவி நெஞ்சை உலுக்கி வருகிறது. சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ காட்சி பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது. அதில் 4 வயது பிஞ்சு குழந்தை அமர்ந்திருக்க அதன் கையில் மது ஊற்றப்பட்ட கப் இருக்கிறது..
முன்னே சைடிஷ் போல ஒன்றும் வைக்கப்பட்டிருக்கிறது.. சுற்றி நிற்கும் குடிகார மிருகங்கள் அந்த குழந்தையை குடி… குடி என கூக்குரலிடுவதும்.. சைடிஸ் எடுத்து சாப்பிடுமாறு சொல்லுவதும் அதை படம்பிடித்து மகிழ்வதுமாக கூத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள்.. இந்த வீடியோ காட்சியில் TN 25 என்ற பதிவெண் இருப்பதால் அனேகமாக இது திருவண்ணாமலை பகுதியில்தான் நடந்திருக்க வேண்டும் என கருதப்படுகிறது.
——————————————————————————————————————————————————————————————-
கண்டன அறிக்கை
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள குமுறல் அறிக்கை:
சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் கடந்த 2 நாட்களாக பகிரப்பட்டு வருகிற ஒரு வீடியோ காட்சி நெஞ்சை பதற வைப்பதாக இருக்கிறது.பால் மணம் மாறாத பிஞ்சு குழந்தைக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து குடிக்க வைத்து சந்தோஷப்படுகின்றனர் சில குடிகார மிருகங்கள்..
தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்து வருகிறோம். மதுப்பழக்கமானது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையே நாசமாக்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணமாகத்தான் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிற இந்த வீடியோ காட்சி இருக்கிறது.
இந்த வீடியோ காட்சியில் பிஞ்சு குழந்தைக்கு மதுவை ஊற்றி கொடுத்து குடிக்க வைத்து அதனைப் பார்த்து மகிழ்ச்சி கூச்சலிடுகின்றனர் குடிநோயாளிகள்.. மதுப்பழக்கம் தலைமுறை தலைமுறையாக தமிழர்களை அழித்து நாசமாக்கிவிடும் என்ற பதற்றத்தை இந்த வீடியோ காட்சி ஏற்படுத்துகிறது.
இந்த குடிநோயாளிகளின் இருசக்கர வாகனத்தின் பதிவெண்கூட வீடியோவில் தெளிவாக இருக்கிறது (TN 25 AJ 8209).. இத்தகைய கொடூர செயல்களில் ஈடுபட்ட நபர்களை விரைவாகக் கண்டுபிடித்து மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
அதே நேரத்தில் மதுவிலக்கை தமிழகத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைந்து செயல்படுவதற்கான தருணமாகவும் இதைக் கருத வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என்று வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
——————————————————————————————————————————————————————————————-
குழந்தைக்கு மது வழங்கிய குடிகார கும்பல் கைது
பிஞ்சு குழந்தைக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து குடிக்க வைத்த குடிகார கும்பலைச் சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இக்கொடூரத்தில் ஈடுபட்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து இந்த கும்பலைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. போலீசார் நடத்திய விசாரணையில் இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட 6 பேரும் திருவண்ணாமலை அருகே உள்ள மேல்சோழன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இதனையடுத்து இந்த 6 பேரையும் போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
——————————————————————————————————————————————————————————————
அசைபடத்தைக் காண இணைப்பை அழுத்தவும்
தகவல் உதவி – ஒன்இன்டியா இணையதளம்.