காயல்பட்டினம் அல்ஜாமியுல் அஸ்ஹர் ஜூம்ஆ பள்ளி முனையிலிருந்து கடற்கரை வரை செல்லும் சாலைக்கு ஸி.கஸ்டம்ஸ் ரோடு எனப் பெயர். இச்சாலையின் பெரும்பகுதி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் இச்சாலையின் அவலநிலை குறித்து சமூகநல ஆர்வலர் ஒருவர் வெளியிட்டுள்ள துண்டுப் பிரசுரத்தை வழங்கியுள்ளோம்.
அதில் இச்சாலையின் இன்றைய நிலை குறித்தும், நகர்மன்றத்தின் இருப்புத் தொகை குறித்தும் குறிப்பிடப் பட்டுள்ளது. கல்லாவை நிரப்பும் நகர்மன்றம் என அவர் இதில் சொல்கிறார்.
இது குறித்து உறுப்பினர்கள் வட்டாரத்தில் விசாரித்தபோது, இக்கருத்தை உண்மைதான் என்று அவர்கள் வழிமொழி கிறார்கள். கோடிக்கணக்கில் நகராட்சியில் இருப்புத் தொகையிருந்தும், நகர் நலனுக்காக நாங்கள் தெரிவிக்கும் கோரிக்கைகள் பலவற்றை தலைவர் தன்னிச்சையாக கூட்டப் பொருளில் சேர்க்க மறுக்கிறார்.
ஏன் சேர்க்கவில்லை எனக் கேட்டால் தனக்கு அவ்வாறு செய்ய அதிகாரம் உள்ளது என்றும், விளக்கம் சொல்ல அவசியமில்லை என்றும் ஆணவத்தோடு பதில் சொல்கிறார். இவ்வாறு விவாதம் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், தொடர்ந்து கூட்டத்தை நடத்தாமல், பொருள் அத்தனையும் பாஸ் ஆகிவிட்டது என்று சொல்லி தலைவர் எழுந்து சென்று விட்டார்.
அடுத்த கூட்டத்தில் அவ்வாறு நடந்து விடக்கூடாது என்பதற்காக, கூட்டம் முடிந்த பிறகுதான் கையெழுத்திடுவோம் என்றும், முதலில் கையெழுத்திட்டால் எங்கள் ஒப்புதல் இல்லாமல் தீர்மானம் நிறைவேறிவிட்டது என்று சொல்லி நீங்கள் எழுந்து செல்லகூடிய ஆபத்து இருக்கிறது என்றும் சொன்னோம்.
அதற்கு அவர் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது என்று சொல்லி எழுந்து சென்றுவிட்டார். அதற்கு பின்னர் 2 மாதமாகியும் அடுத்த கூட்டத்தையும் அவர் கூட்டவில்லை. இம்மாதிரியான நிலையில் எப்படி ஊரின் சாலை சீர்கேடுகளையும், மற்ற விசயங்களையும் விவாதித்து முடிவு காண இயலும்? இவ்வாறு உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த துண்டு பிரசுரத்தை வெளியிட்டிருப்பவர் கூட, கண்ணை மூடிக் கொண்டு, ஆதரிக்கும் தலைவரின் தீவிர ஆதரவாளர் என்றும், இருப்பினும் அவர் இந்த விசயத்தில் உண்மையை சொல்லியிருப்பது வியப்பளிப் பதாகவும் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக , நகர்மன்றத்தில் தொடர்ச்சியாகக் கூட்டம் நடைபெறுவதும் , நடைபெறும் கூட்டங்கள் சுமூகமாக நடைபெறுவதும், அக்கூட்டங்களில் இடையூறுகளுக்கும் போராட்டங்களுக்கும் மத்தியில் நிறைவேற்றப்படும் பல தீர்மானங்கள் செயல் வடிவம் பெறுவதும் குதிரைக் கொம்பாகவே இருக்கிறது .
நிலைப்படம் மற்றும் தகவல்: முதன்மைச் செய்தி முகவர் ,kayalconnection.com