இந்திய யூனியன் முஸ்லிம் லிகின் தமிழ்நாடு மாநில செயலாளரும் மணிச்சுடர் நாளேட்டின் செய்தி ஆசிரியரும், பிறை மேடை மாதமிருமுறை ஏட்டின் துணை ஆசிரியருமான காயல் மகபூப் அவர்கள் மார்ச் 12,13,14 ஆகிய மூன்று நாட்கள் வளைகுடா நாடான குவைத்தில் நடைபெற்ற நிகழ்சிகளில் பங்கேற்றார் .
குவைத் விமான நிலையத்தில் காயிதே மில்லத் பேரவையினர் அவரை வரவேற்றினர். பின்னர், குவைத் மஜ்லிஸ் இஹ்யாவுஸ் ஸுன்னா தமிழ் குத்பா பள்ளியில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது .
அடுத்து குவைத் காயல் நல மன்ற நிர்வாகிகள் அவரை வரவேற்றனர்.
குவைத் தஸ்மாவில் உள்ள டீச்சர் சொசைட்டி ஹாலில் 13.3.2015 மாலை நடைபெற்ற சந்திப்போம் சங்கமிப்போம் எழுச்சி மாநாட்டில் காயல் மகபூப் சிறப்புரை ஆற்றினார் . அவர் உரை பின்வருமாறு :
இன்று உலகளாவிய அளவில் முஸ்லிம்களுக்கு மிகப் பெரும் சோதனைகள் ஏற்பட்டுள்ளது. இஸ்லாமிய நாடுகள் என்று பெருமை பேசப்பட்ட நாடுகள் எல்லாம் இன்று பிரச்ச னைக்கு உள்ளாகியிருக்கின்றன.
இந்த நிலைமைக்கு காரணம் என்ன என்பதை சமுதாயம் சிந்திக்க தவறிவிட்டது. எந்த சமுதாயம் தங்களை பற்றி சிந்திக்கத் தவறுகிறேதா அந்த சமுதாயத்திற்கு இறைவனுடைய அருட்கொடைகள் கூட கிடைக்காது.
ஒரு காலத்தில் உலகில் பல பாகங்களை முஸ்லிம்கள் ஆண்டார்கள். டமாஸ்கஸை தலைநகராக் கொண்டு உமையாக்களுடைய ஆட்சியும், பகுதாதை தலைநகராக கொண்டு அப்பாஸியாக்கள் ஆட்சியும், இஸ்தான்புல்லை தலைநகராகக் கொண்டு உஸ்மானியப் பேரரசும் மிகச் சிறப்போடு நடைபெற்றது.
1923ல் இரண்டாம் மஜ்ஜீத்கான் ஆட்சி செய்கின்ற வரை இஸ்லாமிய கிலாபத் நீடித்தது. இந்தியாவைப் பொறுத்த வரை கஜ்னவியாக்கள் முதல் 1857ல் நடைபெற்ற முகலாய சக்கரவர்த்தி பகதூர்ஷா ஆட்சி வரை முஸ்லிம்களின் ஆட்சி நடைபெற்றது.
ஆனால், இன்று எல்லாவற்றையும் இழந்து நிற்கிறது. ஆட்சி அதிகாரம், செல்வம், செழிப்பு என எல்லா அந்தஸ்தையும் அல்லாஹ் வழங்கினான். ஆனால் அதற்கு நன்றி செலுத்தக்கூடியவர்களாக இல்லாத காரணத்தால் இன்று இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று இந்தியாவில் பாரதீய ஜனதா கட்சி ஆளுகிறது. இந்துத்துவ கொள்கை திணிக்கப்படுவதற்குண்டான பெருமுயற்சிகள் நடைபெறுகின்றன. கல்வி காவிமயமாகிறது. பொதுசிவில் சட்டம் கொண்டு வருவதற்கு முயற்சி நடைபெறுகிறது. குர்பானிக்கு கூட இந்த சிக்கல் ஏற்படுத்தப்பட்டு விட்டது.
இந்த நேரத்தில் கூட இந்த சமுதாயம் ஒன்றுபட்டு தங்களுடைய எதிர்கால தலைவிதியை நிர்ணயிக்க திட்டமிட தவறுமேயானால் வருங்கால சமுதாயம் ஒருபோதும் நம்மை மன்னித்திடாது.
தேசப் பிரிவினைக்கு காரணம் என்று சொல்லியே இந்தியாவில் முஸ்லிம்கள் சிறுமைப்படுத்தப்படு கிறார்கள். சுதந்திரப் போராட்டத்திற்காக முஸ்லிம்கள் செய்த தியாகம் என்பது சாதாரணமானதல்ல. பல்லாயிரக் கணக்கில் – லட்சக்கணக்கில் உயிரிழந்திருக்கிறார்கள் – சொத்து சுகங்களை இழந்தி ருக்கிறார்கள்.
பிரிவினை என்பது ஜின்னாஹ் போன்றவர்கள் உருவாக்கியதல்ல. அது காங்கிரசில் இருந்த தீவிரவாதத் தலைவர்களால் உருவாக்கப்பட்ட ஒன்று.
1885ல் காங்கிரஸ் உருவாக்கப்பட்டு இருபதே ஆண்டுகளுக்குள் மிதவாதிகள், தீவிரவாதிகள் என்ற பிரச்சனை உருவாகியது. மிதவாதிகளுக்கு கோபால கிருஷ்ண கோகலே தலைவராக இருந்தார். தீவிரவாதிகள் கூட்டத்திற்கு தலைவராக பாலகங்காதர திலகர் திகழ்ந்தார்.
தேசிய இயக்கத்தில் மதத் தீவிரவாதத்தை திணித்தவர் அவர்தான். வினாயகர் சதுர்த்தியை 1893லும், அதற்கடுத்த ஆண்டுகளில் சத்திரபதி சிவாஜி பண்டிகை, பசுவதை எதிர்ப்பு சங்கம் போன்றவற்றை உருவாக்கியதும் அவர்தான். அதனுடைய விளைவுதான் இன்றைக்கு மாட்டிறைச்சி தடை, குர்பானி என்பது வரையிலும் விஸ்வரூபமெடுத்துள்ளது.
தயானந்த சரஸ்வதியால் ஆரிய சமாஜம் தோற்றுவிக் கப்பட்டது. அது விதைத்த விதையில் சுவாமி சிரத்தா னந்தா என்ற லாலா முன்ஷிராம் 1920ல் சுத்தி இயக்கத்தை தொடங்கி முஸ்லிம்களை இந்துக்களாக்க மத மாற்றம் செய்தார்கள். அதை தடுப்பதற்கு தோன்றியது தான் தப்லீக் இயக்கம். சுத்தி இயக்கத்தினுடைய வெளிப்பாடுதான் இன்றைய கர்வாப்ஸி என்ற தாய் மதம் திரும்புதல் நிகழ்ச்சிகள்.
மோடி அரசால் பாரத ரத்னா பட்டம் மதன் மோகன் மாளவியாவுக்கு இந்த ஆண்டு வழங்கப்பட்டது. இந்து சங்காதன் இயக்கத்தை தோற்றுவித்து இந்துத்துவத்தை விதைத்தவர் மாளவியாதான்.
லண்டன் வட்டமேசை மாநாட்டில் ஒரு சதவீத இடஒதுக்கீட்டு பிரச்சனையில் அடம் பிடித்த காரணத்தினால் 1932ல் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கும் வாய்ப்பு பறிபோனது.
1922ல் இந்து தேசிய வாதம் என்ற பெயரால் இந்துக்களும் – முஸ்லிம்களும் இணைந்து வாழ முடியாது என்ற கருத்தை சாவர்க்கர் வெளிப்படுத்தினார். அந்த கருத்தால் கவரப்பட்ட ஹெக்டேவர் 1925ல் ஆர்.எஸ்.எஸ்சை துவக்கினார். ஹெக்டேவரை அரசியலுக்கு கொண்டு வந்தவர் மூஞ்சே. அந்த மூஞ்சே பால கங்காதர திலகரின் தனி உதவியாளராக இருந்தவர். இவர்களெல்லாம் இந்து மகா சபையின் தலைவர்களாக இருந்தவர்கள்.
இந்து மகா சபையின் இன்னொரு தலைவராக இருந்தவர் ஷியாம் பிரகாஷ் முகர்ஜி. நேரு அமைச்சரவையிலும், அரசியல் சட்ட வரைவு குழுவிலும் இடம் பெற்றிருந்தவர். அவர் கோல்வால்கருடன் பேசி பாரதீய ஜன சங்கத்தை 1951ல் தொடங்கினார். நெருக்கடி நிலைக்கு பிறகு அது ஜனதா கட்சியில் ஐக்கியமானது.
மொரார்ஜிதேசாய் பிரதமர் பதவியின்போது இரட்டை உறுப்பினர் பிரச்சனையில் ஜனதா பிளவுபட்டபோது 1980ல் பாரதீய ஜனதா கட்சி உருவானது. வாஜ்பாய் அதன் தலைவராகவும், பிரதமராகவும் இருந்தார். இன்று மோடி பிரதமராக இருக்கிறார். அமித்ஷா அதன் தலைவராக இருக்கிறார்.
ஆக, பிரிவினை, இந்துத்துவம், இந்து தேசியவாதம் என்பதெல்லாம் எங்கிருந்து தொடங்கியது என்ற மூலத்தையும், அதன் விளைவாகத்தான் இன்று இந்துத்துவம் திணிக்கப்படுகிறது என்பதையும் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.
ஆனால் வரலாற்று உண்மைகளை நம்முடைய சமுதாயம் அறிய தவறி விடுகிறது. பழைய வரலாறுகளை இளைய சமுதாயத்தினருக்கு சொல்லிக் காட்டினால், பழங்கதைகளை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று நமக்கு உபதேசம் செய்கிறார்கள்.
இந்தியா 1947 ஆகஸ்டு 15ல் விடுதலையடைந்த போது இந்திய முஸ்லிம்களுக்கு சோதனையான காலம். இந்திய முஸ்லிம்களுக்கு வாழ்வுரிமை கேள்விக் குறியாக்கப்பட்ட நேரத்தில் கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் எம். முஹம்மது இஸ்மாயில் சமுதாயத்தை வழிநடத்த முன்வந்தார்.
அரசியல் நிர்ணய சபையிலும், நாடாளுமன்றத்திலும் அவர் வாதம் செய்தார். சர்தார் வல்லபாய் பட்டேல் அவரை மிரட்டினார். எந்த மிரட்டலுக்கும் அஞ்சாமல் தனது கொள்கையில் உறுதியாக நின்றார் காயிதே மில்லத்.
இடஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் முஸ்லிம்கள், சிறப்பு திருமண சட்டத்திலிருந்து பாதுகாப்பு, இறந்த பின் உடலை அடக்கம் செய்யும் உரிமை, அடக்கத்தலங்கள், வக்ஃபு சொத்துக்கள் பாதுகாப்பு, உர்தூ மொழிக்கு தேசிய அந்தஸ்து என்ற அளப்பரிய சாதனைகள் காயிதே மில்லத் வழிகாட்டுதலில் கிடைக்கப் பெற்றதுதான்.
இதைச் சொல்லும் போது, காயிதெமில்லத் எல்லாவற்றையும் செய்திருந்தார். நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். முஸ்லிம் லீகின் இப்போதுள்ள தலைவர்கள் என்ன செய்தார்கள் என்று கேட்கிறார்கள்?
ஷாபானு வழக்கை தொடர்ந்து ஷரீஅத் சட்டம் பாதுகாக்கப்படுவதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அன்றைய தலைவர் குலாம் மஹ்மூது பனாத் வாலா நாடாளுமன்றத்தில் எடுத்து வைத்த முயற்சி, 2004ல் அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம் பெற்று அதன் தேசியத் தலைவர் இ.அஹமது அமைச்சராக பொறுப்பேற்று, குறைந்தபட்ச செயல் திட்டத்தின் மூலமாக சச்சார் கமிஷன், மிஸ்ரா கமிஷன் ஆணையங்கள் அமைக்கப்பட்டு அவைகளின் பரிந்துரைகள் பெறப்பட்டது. சச்சார் கமிஷன் மூலமாக எண்ணற்ற நன்மைகள் கிடைத்தது முஸ்லிம் லீகின் சாதனையல்லவா?
பாபரி மஸ்ஜித் தகர்ப்புக்கு பின் நாட்டில் எங்கு குண்டுவெடிப்புகள் நடந்தாலும் முஸ்லிம் தீவிரவாதிகள், இஸ்லாமிய பயங்கர வாதம் என்ற சொல்லே வலு வடைந்திருந்த நேரத்தில் 2010.ல் அந்த சொற்களுக்கு பதிலாக காவித் தீவிரவாதம் என்ற சொல் உருவானது. அதை முன்மொழிந்தவர் அன்றைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். அது முன்மொழியப்படுவதற்கு காரணமாக இருந்தவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய செயலாளர் கே.எம். காதர் மொகிதீன்..
டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம், அது தொடர்பாக ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்திற்கு ஏற்பட்ட சோதனை, அதற்காக பேராசிரியர் காதர் மொகிதீன் மேற்கொண்ட முயற்சி, அதன் விளைவாக ஹேமந்த் கர்கரே தலைமையிலான விசாரணை, அந்த விசாரணையால் பிரக்யாசிங் தாகூர் உள்ளிட்ட இந்துத்துவ தீவிரவாதிகள் கைது, மாலேகான் உள்ளிட்ட குண்டு வெடிப்பு சம்பவங்கள் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்தது இவைகளெல்லாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சாதனைகள் இல்லையா?
இன்று மக்கள் தொகை கணக்கெடுப்பில் மதரீதியிலான விவரங்களை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் 5.9 சதவீதம் மட்டுமே முஸ்லிம்கள் இருப்பதாக அந்த புள்ளி விவரம் சொல்கிறது. அரசாங்க கணிப்பின்படி 6 சதவீதம் கூட இல்லை. ஆனால் முஸ்லிம் சமுதாய அமைப்புகள் 60க்கும் மேல் உள்ளன. இது சமுதாயத்துக்கு பெருமை தரக்கூடிய விஷயமல்ல.
கேரளாவில் முஸ்லிம் லீகின் தலைமையை முஸ்லிம் சமுதாயம் ஏற்ற காரணத்தால் இன்று அரசியலிலும், வாழ்விலும் கேரள முஸ்லிம்கள் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள். அவர்களை விட அதிக எண்ணிக்கையில் உள்ள அஸ்ஸாம், மேற்கு வங்க முஸ்லிம்கள் படுபாதாளத்தில் கிடக்கிறார்கள்.
இந்த உண்மையை உணர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் சமுதாயம் சங்கமிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு காயல் மகபூப் உரையாற்றினார். |
முன்னதாக , குவைத் மிர்காப் மன்சல்வா உணவாக ஹாலில் 12.3.2015 மாலை நடைபெற்ற அனைத்து அமைப்புகள் பிரமுகர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் அங்கு விடுக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார் . இந்நிகழ்ச்சிகளுக்கு பின்னர் சிறப்பாக தாயகத்திற்கு வழியனுப்பி வைக்கப்பட்டார்.
நிலைப்படம் மற்றும் தகவல் : கோம்பை J. நிஜாமுதீன் , மேலாளர் பிறை மேடை இதழ்