காயல் மடிதவழும் மழையே!!!
A.R.Refaye-அபுதாபி
தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய சில கருத்துகளை இங்கே பதிய விளைகிறேன். சுவரசியமான, கலாச்சார வரலாற்றைக் கொண்ட நம் காயல் பதியை , நேர்நேரான தெரு மற்றும் சாலைகளைக் கொண்டு அழகான முறையில் நம் முன்னோர்கள் அமைத்திருக்கிறார்கள்.
இரு பக்கங்களிலும் வீடுகளும் முடிவில் இறையில்லங்களும் கொண்ட விரிவான பகுதிகளாகளாக அமைத்தும் , கடற்கரையை ஒட்டிய சாலையானது, சுங்கச்சாவடி போன்ற முக்கிய கட்டிடங்களுக்காகவும் நம் முன்னோர்கள் ஒதுக்கி இருந்தார்கள் .
வீட்டுக்கு வீடு மூன்றடி முடுக்கு, அதிலே உட்புறம் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் இணைப்புகள், அது அழகாய் வீதி தோறும் உள்ள மெயின் குழாயோடு பொருத்தப்பட்டு சுகாதார குடிநீர் கிடைக்க வழி செய்யப்பட்டது
வீதியையும், வீட்டையும் இணைக்கும் திண்ணைப் பகுதியிலுள்ள வேலைப்பாடு மிகுந்த வாசற்கதவைக் கடந்ததும், ஒரு குறுகிய நடைப்பகுதி வழியே வீட்டின் மையப்பகுதியான முற்றத்தை அடையலாம். முற்றம் பழங்காலத்திலிருந்தே புழக்கத்தில் இருந்தது
எனினும், சமீபகாலமாக மக்கள்தொகைப் பெருக்கத்தாலும் நகர வளர்ச்சியின் கட்டாயத்தாலும் சுற்றுச்சூழல் மாசுபாடுகளாலும் காயல் தனது தனிச் சிறப்பை இழந்து விட்டது
வேறுபட்ட கட்டிடபாணிகள் ஒன்றை ஒன்று பாதித்ததன் விளைவாக, இங்குள்ள கட்டிடங்களை சுற்றி வெள்ளம் போல் மழைநீர் பெருகி கட்டிடங்களும் சிதைந்து, நம்மூரின் அழகான அமைப்பும் வேகமாக அழிந்து வருவதுதான் வருத்தமளிக்கிறது.
மழைகாலத்தில் மேற்கே ஊரின் தலைவாயில் “காந்தி” நுழைவாயிலிருந்து கிழக்கே கடற்கரை நுழைவாயில் வரை, பெரும் வெள்ளம் போல் காட்சி தரும் இப்போக்கை நிறுத்தும் நடவடிக்கைகள் துவங்க நம்மிடையே விழிப்புணர்ச்சி ஏற்பட வேண்டும்.
தேங்கி உள்ள மழைநீர் இனி தேங்கா வண்ணம் தீர்வை கண்டால்தான் நம் வருங்கால தலைமுறை சிறப்புற வாழ வகை செய்யமுடியும். இல்லை யெனில் இனி பரிசல் மூலம் தான் அவர்கள் தம் இலக்கையும் இல்லத்தையும் அடைவர்.
எனவே துரிதமாக செயல்பட்டு, தற்போது காணுகின்ற வெள்ளப்பகுதிகளை அந்த அந்த பகுதி உறுப்பினர்கள் பார்வையிட்டு, தாழ்வான பகுதிகளை எப்படி நிவர்த்திசெய்வது என்பதை கண்டறிய வேண்டும் .
கழிவு நீர் ஓடைகள் வடிகால்கள் அமைத்து சீர் செய்ய அந்தஅந்த ஜமாத்தினரோடு கலந்தாலோசனை செய்து திட்டம் தீட்டினால், குறைந்த பட்சம் சூழும் மழைநீரை கட்டுப்படுத்திட வழி பிறக்கும்.
நகராட்சியின் கண்களை திறப்பதற்காக நாம் முதலில் விழித்துக் கொள்வோம். இதன் மூலம் அழகான, பொலிவான காயலைப் புணரமைப்போம்.
|
தகவல் : மின்னஞ்சல்