காயல்பட்டினத்தில் 20-04-2014 அன்று இரவு 07:00 மணிக்கு வள்ள சீதக்காதி திடலில் ஐக்கிய சமாதானப் பேரவையின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதன்கீழ் இடம்பெற்றுள்ள பிரசுரத்தின்படி, அவை அமைந்திருந்தது.
தி,மு.க வேட்பாளர் திரு.ஜெகனுக்கு ஆதரவாக நடைபெற்ற இக்கூட்டதிற்கு தலைமையேற்ற பாதுல் அஸ்ஹாப் ஆலிம், முஸ்லிம்கள் தி.மு.க விற்கு வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தினார்.
பேரவையின் ஒன்றிய அமைப்பாளர் என்.கலிலுர்ரஹ்மான் ஆலிம் வரவேற்புரையாற்றினார்.
முஸ்லிம் லீக் பிரமுகர் என்.டி.சலாஹுத்தீன் உரையாற்றுகையில், இட ஒதுக்கீடு அளித்த கலைஞர் கரத்தை வலுப்படுத்த கேட்டுக்கொண்டார்.
நகரின் தெருக்களில் வாக்குச் சேகரிக்கும் பணிக்கிடையில், மேடைக்கு வந்த வேட்பாளர் திரு.ஜெகன், தனக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டு விடைபெற்று, மீண்டும் வாக்குச் சேகரிக்கும் பணியை தொடர்ந்தார்.
வேட்பாளருடன் வருகை தந்த அவரது சகோதரியும், முன்னாள் அமைச்சருமான திருமதி. கீதா ஜீவன், பொது சிவில் சட்டம், ராமர் கோவில் போன்றவைகளில் பி.ஜெ.பி யின் நிலைப்பாட்டை சுட்டிக்காட்டி,இந்த ஆபத்துகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள உதய சூரியனுக்கு வாக்களிக்க வேண்டுமென்றார்.
நிறைவாக உரையாற்றிய பேரவையின் தலைவர், என்.ஹாமித் பக்ரீ ஆலிம் மன்பஈ, தி.மு.க விற்கு வாக்களிக்க வேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டினார்.
இட ஒதுக்கீடு வழங்கியமைக்கும், பி.ஜெ.பி யின் தேர்தல் அறிக்கையை கண்டித்தமைக்கும், தேர்தலுக்கு பின்னர் பி.ஜெ.பி க்கு ஆதரவு இல்லை என வாக்குறுதி அளித்தமைக்கும் தமது பேரவை தி.மு.க வை ஆதரிப்பதாக விளக்கம் அளித்தார்.
பி.ஜெ.பி உடன் கூட்டணி அமைத்திருக்கும் கட்சியினர், நமது தொப்புள் கொடி உறவென்றும், தேர்தலுக்கு பின்னர் அவர்களை அங்கிருந்து மீட்க நாம் பணியாற்ற வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
நல்லாட்சி மலர, இறைவனிடம் இறைஞ்சுமாறு அவர் பொது மக்களை வேண்டிக் கொண்டார்.
பேரவைத்தலைவர் ஹாமித் பக்ரீம் ஆலிம் அவர்களின் பதிவு செய்யப்பட்ட உரையை அசைப்படமாக காண, கேட்க கீழே அழுத்தவும்.
பேரவையின் மாவட்ட அமைப்பாளர் ஏ.காஜா முஹைதீன் நன்றி நவின்றார்.
பேரவையின் இளைஞர் அணி மாநிலச் செயலாளர் டாக்டர் கே.முஹம்மது ஆஷிக் நிகழ்ச்சியை நெறிப்படுதினார்.
துவா உடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
நிலைப்படம் மற்றும் தகவல் : முதன்மைச் செய்தி முகவர், kayalconnection.com