DCW ஆலையின் விதிமீறல்கள் குறித்து சென்னையிலுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் முறையிட, 10.12.2012 திங்கட்கிழமையன்று காலையில், சென்னை கிண்டியிலுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலக வளாகத்தில், சென்னை வாழ் காயலர்கள் திரண்டனர்.
துவக்கமாக அவர்கள், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் DCW ஆலை தொடர்பான கேள்விகள் அடங்கிய கடிதங்களை, மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் கட்டணம் செலுத்தி சமர்ப்பித்தனர்.
அதனைத் தொடர்ந்து, அங்கு திரண்டிருந்த காயலர்களிடம் நேரடியாக குறைகளைக் கேட்டறிவதற்காக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலக கேளரங்கில், அதன் செயலர் உறுப்பினர் ( Member Secretary ) டாக்டர் பாலாஜி தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
மேலும் இந்த ஆலையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், காயல்பட்டினம் மக்களை மட்டுமின்றி, சுற்றுவட்டாரத்திலுள்ள அனைத்து ஊர்களின் பொதுமக்களுக்கும் பொதுவானவையே என்று தெரிவித்தனர்.இக்கூட்டத்தில், DCW தொழிற்சாலையின் மாசு கட்டுப்பாட்டு விதிமீறல்கள் குறித்தும், அது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றும் சுற்றுச்சூல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர்.
காயல்பட்டினத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அமைதி வழியில் தற்போது உரிமைக்குக் குரல் எழுப்பி வருவதாகவும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இதுகுறித்து மேற்கொள்ளும் நடவடிக்கையைக் கருத்திற்கொண்டு, அடுத்தகட்ட செயல்திட்டம் வகுக்கப்படவுள்ளதாகவும் இவர்கள் எடுத்துரைத்தனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தூத்துக்குடி கிளை பரிந்துரைத்தப்படி ஏன் இன்னும் Ilmenite பிரிவை இவ்வாலையில் மூடவில்லை என்றும், வினவினர்.
பின்னர் பேசிய தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலர் உறுப்பினர் டாக்டர் எஸ்.பாலாஜி, தொழிற்சாலைகள் விதிமீறல்களைச் செய்யாமல் தடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.
சுற்றுச்சூழல் துறை செயலாளர் சி.வி.சங்கர் I.A.S. வெளிநாடு சென்றிருப்பதால், அவர் நாடு திரும்பியவுடன், உடனடியாக இதுகுறித்து விசாரித்து, முறையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் B.Sc., B.Ed. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், ஐக்கிய சமாதானப்பேரவையின் நிறுவனத் தலைவர் மவ்லவீ என்.ஹாமித் பக்ரீ மன்பஈ, சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமன் ஆகியோர் இக்கூட்டத்தில் தங்கள் கருத்துக்களையும் வாதங்களையும் பதிவு செய்தனர்.
காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ஹாஜி எஸ்.எம்.எம். ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, செயலாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா உள்ளிட்ட அமைப்பின் ஏனைய பொறுப்பாளர்களும், காயல் பிரமுகர்களும் இவ்வுரையாடலில் பங்கேற்றனர்.
தகவல் மற்றும் நிழற்படம்: காயல்பட்டினம் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு அமைப்பினர்.