மாமன்னர் பாபரால் கட்டப்பட்டு, 20 ஆண்டுகளுக்கு முன்னால், இதே நாளில் ( டிசம்பர் 6 ) இடித்துத் தகர்க்கப்பட்டது பாபர் மஸ்ஜித். தற்காலிகக் கூடாரம் அமைக்கப்பட்டு, இணைவைக்கும் சின்னங்கள் அங்கு நிறுவப்பட்டு, இன்றளவும் அது வழிபாட்டுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
இந்திய நீதியமைப்பு, அரசியலமைப்பு, சிறுபான்மையினர் பாதுகாப்பு அனைத்தையும் கேள்விக்குறியாக்கிய டிசம்பர் 6 நிகழ்வு, காலக் கல்வெட்டில் அழியாத களங்கமாக நிலைத்திருக்கும்.
முஸ்லிம்களும், மாற்று மதத்தினரும் உறவுமுறை கூறி, உள்ளன்போடு வாழ்ந்து வரும் இத்திருநாட்டின் நல்லிணக்கத்தை, வகுப்புவாத கும்பல்கள் சிதைத்துவிட முடியாது. இதை, பெரும்பான்மை மக்கள் இன்று வரை நிருபித்தே வருகிறார்கள். இது நம் நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் பேருண்மையாகும்.
உயரிய அப்பெருந்தன்மையின் அடிப்படையில், சமூக நல்லிணக்கம் தளைத்தோங்கும், நம் காயல்நகரில், நம்சகோதர சமுதாயத்தைச் சேர்ந்தோரும், நம்மோடு இணைந்து, இன்று கடையடைத்து தம் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். அவர்களுக்கு நாம் நன்றி சொல்வோம்.
ஏகத்துவம் ஒலிக்கும் இறைஇல்லங்களின் தலைமை நிலையம், புனித கஃபாவில் இருந்த, இணைவைப்புச் சின்னங்கள், மக்கத்து வெற்றியின் போது, மாநபியின் தலைமையில் அகற்றப்பட்டன. இது வரலாறு.
காலம் மாறும். காட்சிகள் மாறுமெனப் பொறுத்திருப்போம். காவல் இறைமீது நம்பிக்கை வைப்போம்.
நிழற்படம்: முதன்மைச் செய்தி முகவர், kayalconnection.com