காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் (Railway Station) திருச்செந்தூரிலிருந்து சென்னை செல்லும் தொடர்வண்டி (Chendur Exp) நாள்தோரும் நமதூருக்கு இரவு 7.50 மணிக்கு வருகிறது.
இத்தொடர்வண்டியின் நீளம், நமதூரில் அமைக்கப்பட்டுள்ள நடைமேடையைவிட அதிகமாக இருப்பதால், தொடர்வண்டியின் இன்ஜின் உள்ளிட்ட நான்கு பெட்டிகள் இரயில்வே கேட்டையும் தாண்டி நிற்கின்றன.
இந்நிலையால் இவ்வண்டியில் பயணிக்கும் காயலர் மற்றும் பிறவூர் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றார்கள். முன்பதிவில்லா பயணச் சீட்டு வாங்கியோர் பயணம் செய்யும் பொதுப்பெட்டிகள் இரண்டும், குளிரூட்டப்பட்ட பெட்டிகள் இரண்டும் இதில் அடங்கும்.
முன்பதிவு கிடைக்காதோரும், முன்பதிவு செய்ய கட்டணம் செலுத்த இயலா நடுத்தர மக்களும், குளிரூட்டும் பெட்டியில் பயணம் செய்ய வசிதி பெற்றோரும் பாரபட்சமின்றி, இப்பாதிப்பில் பங்கு பெறுகின்றார்கள் என்பது மட்டுமே ஆறுதலான தகவலாகும்.
நடைமேடையை தென்பகுதியில் நீட்டிக்கப் போகிறார்கள் என்பது நீண்டகால தகவலே தவிர, நடைமுறைக்கு இதுவரை வரவில்லை என்பதே உண்மை.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலப் பொதுச்செயலாளர் ஹாஜி. K.M.A.முஹம்மது அபூபக்கர் அவர்களிடத்தில் இது பற்றிக் கேட்ட போது அவர் தந்த தகவல் கீழே…
சில ஆண்டுகளுக்கு முன் நமதூருக்கு இரயில்வே துணை அமைச்சராக வருகைதந்த, இன்றைய வெளி விவகார இணையமைச்சர். மாண்புமிகு ஹாஜி. இ.அஹமது அவர்களிடத்தில் நமதூர் இரயில் நிலையம் குறித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தோம்.
நெடுஞ்சாலையிலிருந்து இரயில் நிலையம் செல்லும் இணைப்புச் சாலையை சீர் செய்து, தெரு விளக்குகள் அமைத்தல், நடைமேடையை உயர்த்தி, நீட்டிக்கச் செய்தல், மேற்கூரை அமைத்தல், நடைமேடையில் மின்விளக்குகள் அமைத்தல், கழிவரை அமைத்தல், துப்புரவுப் பணிக்கு உதவியாளரை நியமித்தல் ஆகியவை நாங்கள் அளித்த கோரிக்கைகள்.
நமதூர் மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட மாண்புமிகு அமைச்சர் அதற்கான உத்தரவினைப் பிரப்பித்ததோடு துவக்கமாக 70 லட்சம் ரூபாயையும் ஒதுக்கீடு செய்தார்.
மேலும் முதற்கட்டப் பணிகள் நிறைவுபெற்றதும் அடுத்தடுத்து நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் உறுதியளித்தார்.
மேற்கண்ட பணிகளுக்காக ஒப்பந்தம் செய்தவர், மேற்கூரை, இணைப்புச் சாலை, கழிப்பிடம் ஆகியவைகள் அமைத்ததோடு தனது பணியைத் தொடராமல் பாதியிலே நிறுத்திக் கொண்டார். உயர்ந்துள்ள விலைவாசியால் துவங்கிய பணியைத் தொடர முடியவில்லை என்பது அவரது நிலையாகும்.
இருப்பினும் எஞ்சிய பணிகள் நிறைவு பெற இடைவிடாத முயற்சியை நாங்களும், நமதூரின் பொது அமைப்புக்களும் மேற்கொண்டுள்ளோம்…
முஸ்லிம்லீக் பொதுச் செயலரின் மேற்கண்ட அறிக்கையின் மூலம் பணி முடக்கத்திற்கான காரணத்தை அறிந்து கொண்டோம்.
தடை நீங்கி நடைமேடை உயரவும், நீளவும், இரயில் நிலையத்தில் ஏற்படும் இன்னல்கள் நீங்கவும் பொது அமைப்புக்களின் முயற்சி தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இன்ஷாஅல்லாஹ் நமது தேவைகள் நிறைவேறும் என நம்புவோம்.
நிழற்படம் : முதன்மைச் செய்தி முகவர் kayalconnection.com
தகவல் உதவி : ஹாஜி. K.M.A.முஹம்மது அபூபக்கர்(G.S. IUML)