காயல்பட்டினம் எல்.கே. மேல்நிலைப் பள்ளியின் தென்பகுதி சுற்றுச் சுவரையொட்டி, நெடுங்காலமாக குப்பைமலை காட்சியளித்தது.
பள்ளியில் படிப்பது நமது இல்லத்துச் செல்வங்கள் என்று உணர்வு கூட இல்லாமல், காலையில் கண் விழித்ததும் கடமை தவறாது செயல்புரிவதைப் போல, சரியாக அந்த இடத்தில் நமது மக்கள் குப்பை கொட்டுவதில் எல்லையில்லா இன்பம் அடைந்தார்கள்.
இதுகுறித்து கோரிக்கை மனு மூலமும், இணையதளங்களின் விமர்சனங்கள் மூலமும் நகர்மன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. விடிவுகாலம் பிறந்தது.
7-1-2013 திங்கள் கிழமை காலை 10 மணியளவில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் அனைவரும் சுகாதார அதிகாரிகளின் முன்னிலையில் களம் இறங்கினர். ஒட்டுமொத்த குப்பையையும் அகற்றினர்.
இப்பணியை நகர் மன்றத் தலைவர் சகோதரி ஐ. ஆபிதா சேக், நகர்மன்ற மேஸ்திரி ராதா கிருஷ்ணன் மற்றும் கவுன்சிலர்கள் பார்வையிட்டனர்.
பள்ளித் தலைமையாசிரியர் இப்பணிக்காக தன்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
எப்படியோ பள்ளிக்கருகில் நோய் பரப்பிய குப்பை அகன்றதில் மகிழ்ச்சி.
மீண்டும் குப்பை இடம்பிடிக்காமல் இருக்க நகராட்சி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளி நிர்வாகம்,விழிப்புணர்ச்சியோடு இருக்க வேண்டும். அப்பகுதியில் வாழும் மக்கள் பொறுப்புணர்ச்சியோடு ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
நிழற்படம்: வீனஸ் ஐயப்பன்.
தகவல் உதவி: முதன்மைச் செய்தி முகவர், kayalconnection.com