காயல்பட்டினம் சதுக்கை மற்றும் நெய்னார் தெருக்களில் நுழைவு வாயில்களாக கொண்ட மஸ்ஜிதுமீகாயீல் (இரட்டைக்குளத்துப் பள்ளி) வளாகத்தில் மேநிலை நீர் தேக்கத் தொட்டி அமைந்துள்ளது.
மூன்றாண்டுகளுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. அனிதா ராதாகிருஷ்ணரின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டதாகும் இந்த நீர்த்தேக்க தொட்டி.
ஒரு இலட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள இத்தொட்டி அமைந்த ஆரம்பகாலத்தில், ஒருமுறை மட்டும் நீர் ஏற்றப்பட்டிருக்கிறது.
அதற்குப் பிறகு இதுவரை இத்தொட்டியில் நீர் ஏற்றி பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படவில்லை என்பது பெரும் குறையாகவே இருந்து வருகிறது.
சதுக்கைத் தெரு மற்றும் நெய்னார் தெரு போன்ற, மக்கள்தொகை அதிகமுடைய பகுதியில் இத்தொட்டி, அமைந்தும், பயனற்று காட்சிப் பொருளாகவே இது விளங்கி வருகிறது.
மஸ்ஜிது மீகாயீல் மற்றும் ஜலாலிய்யா சங்கத்திலிருந்து பலமுறை நகராட்சியின் கவனத்திற்கும், மாவட்ட ஆட்சித் தலைவரின் கவனத்திற்கும் இக்குறைபாடு எடுத்துச் சொல்லப்பட்ட பிறகும் இதுவரை தீர்வு ஏற்படவில்லை.
பொறுமை காத்த அப்பகுதி மக்கள் இதற்கு விடிவுகாலம் ஏற்பட இறுதியாக, அதேநேரம் உறுதியாக ஒரு முடிவுக்கு வந்தனர்.
அதன் அடிப்படையில் சட்ட மன்ற உறுப்பினரின் கவனத்திற்கு இப்பிரச்சனையை அழுத்தமாக எடுத்துச் சொல்லியதன் விளைவாக, சட்டமன்ற உறுப்பினர் திரு. அனிதா ராதா கிருஷ்ணன் மீகாயீல் பள்ளிக்கு வருகை தந்தார்.
07-01-2013 அன்று காலை 11 மணியளவில் சட்டமன்ற உறுப்பினர் வருகைக்குப் பின்னால், நகராட்சி ஆணையர் மற்றும் குடிநீர் விநியோக பொறுப்பாளர்களும், துணைத் தலைவர் உள்ளிட்ட சில உறுப்பினர்களும் அவ்விடத்திற்கு வருகை தந்தனர்.
நிலைமைகளை நேரடியாக கேட்டறிந்த சட்டமன்ற உறுப்பினர், அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று நகராட்சி நிர்வாகத்திற்கு தனது உறுதியான முடிவை தெரிவித்தார்.
மூன்று நாட்களுக்குள் இந்நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றப்படவில்லையெனில், நகராட்சி மன்றத்திற்கு முன், தனது தலைமையில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து நகராட்சி ஆணையர் சில வாக்குறுதிகளை அவர்களுக்கு அளித்தார்.
இதற்கிடையில் மஸ்ஜிது மீகாயில் பள்ளியின் சார்பில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி எழுத்து மூலம் மனு அளித்தனர்.
அக்கோரிக்கையை ஏற்று ஆணையர் மஸ்ஜிது மீகாயீல் நிர்வாகிகளிடத்தில் இன்று (8-1-2013) தனது பதிலை எழுத்து மூலம் அளித்துள்ளார்.
இப்பதில் கடிதத்தை குடிநீர் விநியோக பொறுப்பாளர் நிஜார், மஸ்ஜிது மீகாயில் வருகை தந்து நேரடியாக கையளித்தார்.
அதன்படி நீர்தேக்கத் தொட்டிக்கு செல்லும் குழாயில் ஏற்பட்டுள்ள பழுதுபார்க்கும் பணி மூன்று நாளில் முடிக்கப்படும் என்றும், மற்ற பகுதிகளுக்கு நான்கு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுவதைப் போல், இந்த நீர்த்தேக்க தொட்டியிலிருந்தும் வழங்கப்படும் என்றும் ஆணையர் அதில் தெரிவித்திருந்தார்.
இந்த பதிலால் பெருமளவு அப்பகுதி மக்களும், பள்ளி நிர்வாகமும் திருப்தி அடைந்துள்ளனர்.
இருப்பினும், ஆணையரின் வாக்குறுதி உரிய நேரத்தில் செயல்வடிவம் பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
நிழற்படம் : முதன்மைச் செய்தி முகவர் kayalconnection.com மற்றும் வீனஸ் மணி
தகவல்: இரட்டைக்குளத்துப் பள்ளி நிர்வாகிகள்.