காயல்பட்டினம் வரலாற்றில் நிலைப்பெற்ற பள்ளிகளில் ஒன்று கர்புடையார் பள்ளியாகும். இந்த ஊரின் மூன்றாவது பள்ளி என இது அழைக்கப்படுகிறது.
பக்தியுடைய முஸ்லீம்கள் பலர் நீண்ட கருப்பு நிற அங்கியை அணிந்தவாறு, இஃதிகாப் (தனிமை தவம்) இப்பள்ளியில் இருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
எனவே கருப்பு உடை அணிந்தவர்கள் பள்ளி என்ற பெயர் பெற்றதாகவும் , அது காலப்போக்கில் கர்புடையார் பள்ளி என மருவி அழைக்கப்பட துவங்கியதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பள்ளியின் நுழைவாயிலில், கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு நமக்கு பல செய்திகளை சொல்லிக்காட்டுகிறது.
வீரபாண்டியன் என்ற ஒரு மன்னனின் உதவியில், இப்பள்ளி பராமரிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் இப்பள்ளியின் காலம் எதுவென்று துல்லியமாக கணக்கிட முடியவில்லை.
இருப்பினும் மதுரை பல்கலைகழகத்தின் பேராசிரியர் டாக்டர் வேனுகோபால் ஆய்வில் எழுதப்பட்ட வீரபாண்டிய வட்டஎழுத்து கல்வெட்டு எனும் நூலில், வீரபாண்டியனின் ஆட்சி காலம் கி.பி. 946 முதல் 966 வரை என தெரிய வருகிறது.
இதன் மூலம் இப்பள்ளி சுமார் இன்றிலிருந்து 1070 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டது என அறிய முடிகிறது.
பல்வேறு வரலாற்று உண்மைகளை தாங்கி நிற்கும் இப்பள்ளி பராமரிப்பின்றி பழுதடைந்து போவதும், அவ்வப்போது சிலர் அதை புதுப்பிக்க முயற்சிப்பதும் நடைமுறையில் இருந்து வருவதாகும்.
இப்பள்ளியை சுற்றி எவ்வித கம்பி அல்லது சுவர்வேலி இதுவரை அமைக்கப்படவில்லை என்பதும் உண்மை.
இதனால் இப்பள்ளியை சுற்றி இப்பள்ளிக்கு சொந்தமான சிலஏக்கர் நிலம் கைநழுவிப்போயிருக்கலாம் என்றும் யூகிக்கப்படுகிறது.
மேலும் பாதுகாப்பும், பராமரிப்பும் இல்லாமையால் இப்பழம்பெரும் பள்ளி தவறுதலான செயல்களுக்கும் பயன்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
எனவே வரலாற்றுச் சிறப்புக்குரிய இப்பள்ளியை காக்கும் நோக்கத்தோடு, மத்திய காயல் பகுதியில் வாழும் இளைஞர்கள், ஆர்வமிகுதியில் ஒன்றுகூடி அரும்பணியாற்ற முன்வந்துள்ளனர்.
துவக்கமாக இப்பள்ளியின் உட்பகுதியில,; நன்கொடையாளர்களின் துணைகொண்டு மார்பிள் பதிக்க உள்ளனர். பள்ளியின் உள், வெளி சுவர்களில் பச்சை வண்ணம் (Paint) அடித்துள்ளனர்.
கிணறை தூர்வாரி, புதுப்பித்ததோடு, உழுச்செய்யும் ஹவுழு ஒன்றையும் அமைத்து வருகின்றனர்.
இப்பள்ளியை சுற்றி புதர்மன்டிக்கிடந்த சுமார் மூன்றரை ஏக்கர் நிலத்தை JCB மற்றும் டிரக்டரைக் கொண்டு சீர்படுத்தி வருகிறார்கள்.
இப்பள்ளியின் பராமரிப்பு பொறுப்பாளராக விளங்கும் பெரிய குத்பா பள்ளி நிர்வாக அனுமதியோடு இந்த நல்ல காரியத்தை துவக்கியுள்ள இவ்விளைஞர்கள் அந்நிலத்தை சுற்றி கம்பிவேலி அமைக்க முடிவு செய்துள்ளனர்.
இவ்வாறு அமையுமானால் காலப்போக்கில் கம்பிவேலி மதில்சுவராக மாறும் வாய்ப்பும், பள்ளிவாயில் புதிய எழிலோடு விளங்கவும் வழி பிறக்கலாம்.
இவ்வேலி அமைக்கும் பணியோடு, இவர்கள் மெற்கொண்டுள்ள அனைத்து பணிகளுக்கும் பொருளாதாரம் அவசியமாகிறது.
எனவே M.A.S முஹைதீன்தம்பி யிடம் 7200331380 அல்லது 9894552089 ஆகிய எண்களோடு தொடர்புக் கொண்டு நிதியுதவி வழங்க பொதுமக்களை வேண்டுகிறார்கள்.
இந்த அறப்பணிக்கு உதவிட நாங்களும் பரிந்துரை செய்கிறோம்.
நிழற்படம் : முதன்மைச் செய்தி முகவர் – kayalconnection.com
தகவல் உதவி : முனைவர் அல்ஹாஜ் R.S அப்துல் லத்தீப் M.A. D.Lit., எழுதிய The Concise History Of Kayalpatnam மற்றும் சீரமைப்பு பணியை மேற்கொண்டுள்ள இளைஞர்கள்.